தலைவாயில்

ஐந்தாம்  திருமுறை - ஆசியுரை - தொடர்ச்சி..|.1 | 2 | 4 | 5 |

என்றும் இன்பம் தழைக்க:

தில்லையின் கீழ் எல்லையில் உள்ள திருவேட்களம் சென்றார் அப்பர். அர்ச்சுனற்குப் பாசுபதம் அருளிய பெருமானைப் பணிந்தார். உள்ளத்தெழுந்த உயர்பெரும் கருத்துக்களை "நன்று நாள்தோறும்" என்ற பதிகத்துள் பொதிந்து கொடுத்துள்ளார். மனிதர்கள் நாள்தோறும் சென்று திருவேட்களத்துள் உறைகின்ற பொற்சடைப் பெருமானைத் தொழுவீர்களாக. நாள்தோறும் நல்லனவே உமது வாழ்வில் நடைபெறும். நாம் செய்த தீவினைகள் போய் அறும். என்றும் இன்பம் தழைக்க இனிதே வாழலாம் என்கிறார். அப்பாடல் காண்க.

நன்று நாள்தொறும் நம்வினை போய்அறும்

என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம்

சென்று நீர்திரு வேட்களத் துள்ளுறை

துன்று பொற்சடை யானைத் தொழுமினே. -தி.5 .42 பா.1

மேலும் "வேட்களம் கைதொழுது இருப்பனாகில் எனக்கிடர் இல்லையே" என்றும், "பூக்கள் கொண்டு அவன் பொன்னடி போற்றினால், காப்பர் நம்மைக் கறைமிடற்று அண்ணலே" என்றும், "துன்பம் இல்லை துயரில்லையாம் இனி" என்றும் தம் அனுபவத்தை அகமகிழ்ந்து கூறியுள்ளமை கண்டு இன்புறுக.

நாவரசர் காணும் நல்லத்தான்:

திருநல்லம் என்பது இன்று கோனேரிராஜபுரம் என வழங்குகிறது. இங்கு, பெரிய நடராஜப் பெருமானின் செப்புப்படிமம் வியத்தகு நிலையில் உள்ளது. இங்கு எழுந்தருளிய அப்பர் நல்லத்தானைக் கைதொழுது வணங்கினார். தம் உள்ளத்தெழுந்த அருளுணர்வைத் திருக்குறுந்தொகைப் பதிகமாக வெளிப் படுத்தினார். நம்மைக் கொல்லத்தான் நமனார் வந்தக்கால் அறிவிலும் வலியிலும் பலவகையிலும் ஏழையாக இருக்கின்ற நாம் என் செயவல்லம். ஒன்றுமில்லை. எனவே நல்லத்தான் கழலைச் சொல்ல வல்லீரேல் நம் துயர் தீரும் என்கிறார்.

"பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புலையனேன்" என்றார் மணிவாசகர். அஃது அவருக்குப் பொருந்தாது. நம்மனோர்க்கே மிக மிகப் பொருந்தும். அதனையே அப்பர் நமக்கு இங்கு உபதேசிக்கிறார். பொய்யாக வார்த்தைகளைப் பேசிப் பொழுதினைப் போக்காதே. துக்கம் தீரவகைசொல்லுவன் கேளுங்கள், தக்கன் வேள்வியைத் தகர்த்த தழல்வண்ணன் நம்பெருமான். மேலும் திகம்பரன் - திக்கையே ஆடையாக உடுத்தவன் - நிர்வாண கோலத்தன், அவனை அடைதலே நமக்கு நன்மை எல்லாம் பயக்கும் என்கிறார்.

மேலும் "நமக்கு நல்லது நல்லம் அடைவதே" என்றும் "பரவுமின் பணிமின், பணிவார் அவரோடே விரவுமின் விரவாரை விடுமினே" என்றும் "வல்லவாறு சிவாய நமவென்று தொழ, வெல்ல வந்த வினைப்பகை வீடுமே" என்றும் "நல்லம் நல்லம் எனும் பெயர் நாவினால் சொல்ல வல்லவர் தூநெறி சேர்வரே" என்றும் குறித்துள்ளமை கண்டு நாமும் தொழுவோம். தூநெறி - வீட்டு நெறி.

வஞ்ச ஆறுகள் வற்றின:

பஞ்ச பூதங்களும் மாயா காரியங்கள். இதனையே பஞ்சபூத வலை என்கிறார். இவ் வலையில் படாமல் தப்பவேண்டுமானால் பேரொளிப் பொருளாக பேரறிவுப் பொருளாக, பேரின்பப் பொருளாக உள்ள ஆமாத்தூர் அழகனை நெஞ்சினால் நினைதல் வேண்டும். நினைத்தால் வஞ்சனையாக உள்ள ஆறுகள் வற்றி விடும். அப்பர் நினைந்தார், வஞ்ச ஆறுகள் வற்றின. அவர் அனுபவப் பாடலைக் காண்போம்.

பஞ்ச பூத வலையிற் படுவதற்

கஞ்சி நானு மாமாத்தூ ரழகனை

நெஞ்சி னால்நினைந் தேன்நினை வெய்தலும்

வஞ்ச ஆறுகள் வற்றின காண்மினே -தி.5 .44 பா.4

வஞ்சனையால் வரும் தீய வழிகள் பல. அவ்வழிகளெல்லாம் வற்றிப் போயின. ஆறு - வழி. மேலும் இத்தலப் பதிகத்தின் ஐந்தாம் பாடலில் "இராமனும் வழிபாடு செய் ஈசனை, நிரா மயன்தனை நாளும் நினைமினே" என்கிறார். நிராமயன் - நோய் இல்லாதவன். பசுத்துவம் இல்லாதவன். பிறவி அற்றவன். இராமன் வழிபட்ட இத்தல புராணக் குறிப்பை இப்பாடலில் குறிப்பிட்டுள்ளார். ஆமாத்தூர் இடமதாகக்கொண்ட ஈசனுக்கு என் உளம், இடமதாக்கொண்டு இன்புற்றிருப்பனே என்கிறார். ஆமாத்தூரில் குடிகொண்டுள்ள ஈசனை என் உள்ளத்தில் ஏற்றிப் பூசிப்பேன். போற்றுவேன் எனப் புளகாங்கிதம் கொள்கிறார்.

கண்ணில் உண்மணி:

பண்ணில் ஓசையாகவும், பழத்தில் சுவையாகவும் இருப்பவன் இறைவன். பண் - இராகம். ஓசை - சுரம். பண்வேறு. ஓசை வேறு. என்றில்லாமல் உடல் உயிர் போல ஒன்றாய் இருப்பவன் என்பதை முதல் அடி உணர்த்துகிறது எனலாம். "பெண்ணோடு ஆணென்று பேசற்கரியவன் வண்ணமில்லி வடிவுவேறாயவன்" என்பது கண்ணொளியும் சூரிய ஒளியும் போல வேறாயிருந்து உதவும் தன்மையைக் காட்டுகின்றது எனலாம். "கண்ணில் உண்மணி கச்சிஏகம்பனே" என்பதில் கண் காண்பதற்கு உயிர் உடனாய் இருந்து காண்பதுபோல சிவன் உயிர்க்கு உயிராய் உடனிருந்து உணர்த்துவதைக் கடைசி அடி காட்டுகிறது. இறைவன் ஒன்றாய், வேறாய், உடனாய் இருந்து உதவுவதைக் குறிப்பிடுகிறது இப்பாடல்.

பொய்யர் உளத்தணுகான்:

சிவன் பொய்யர் உள்ளத்திலும், வஞ்சகர் நெஞ்சத்திலும் உறையான். "பொய்யர் உள்ளத்து அணுகானே" என்பது அருணகிரியார் திருப்புகழ். பொய் அஞ்சி வாய்மைகள் பேசிப் புகழ் புரிந்தார்க்கே அருள் செய்வான் அரன் என்பது அப்பர் வாக்கு. பொய் மொழியா மறையோர்களும், மெய்மொழி நான்மறையோர்களும் துதித்துப் போற்றப்படுபவனே காழியிலும் வீழியிலும் வீற்றிருக்கும் பெருமான் என்கிறார் ஞானசம்பந்தர். நாவரசர் திருஏகம்பத்து இறைவனைத் தொழுது எழுந்தார். அப்போது ஏகம்பன் உணர்த்திய நல்லுணர்வை சொல்மாலையாக்கி ஏகம்பவாணர்க்கே சூட்டி மகிழ்கிறார். நாமும் அவ்வாக்கை உணர்ந்து உயர்வோம்.

பொய்ய னைத்தையும் விட்டவர் புந்தியுள்

மெய்ய னைச்சுடர் வெண்மழு ஏந்திய

கைய னைக்கச்சி ஏகம்பம் மேவிய

ஐய னைத்தொழு வார்க்கில்லை அல்லலே -தி.5 .48 பா.9

செந்தமிழ் உறைப்பு:

அப்பர் திருமறைக்காட்டில் பத்துப் பாடல்கள் பாடியும் திருக்கதவு திறக்கவில்லை. பதினொராம் பாடலில் "இரக்கம் ஒன்றிலீர்" என்றதுமே கதவு திறந்தது.

ல் ஞானசம்பந்தரோ "சதுரம் மறைதான் துதி செய்து வணங்கும்" என்று ஒரு பாடல் பாடியமாத்திரத்தே திருக்கதவம் அடைத்துக் கொண்டது.

அப்பர், இதில் நாம் ஏதோ பிழை செய்துவிட்டோம், என்று பிழையை எண்ணி எண்ணி நைந்தபோது, "திருவாய்மூருக்கு நம்பால் வருக" என அசரீரி தோன்ற, அப்பர் நள்ளிரவில் அங்குச் சென்றார். ஞானசம்பந்தர் அப்பர் வாய்மூர் செல்கிறார் என்பதை உணர்ந்து அவரும் அப்பரைப் பின் தொடர்ந்தார். இருவரும் திருவாய்மூர் சேர்ந்தனர். காட்சி ஒன்றும் கிடைக்கவில்லை. அப்போதுதான் அப்பர் "எங்கே யென்னை" என்ற திருக்குறுந் தொகைப் பதிகம் பாடினார். அதில் எட்டாம் பாடலில் திறக்கப்பாடிய என்னிலும் செந்தமிழ் உறைப்புப் பாடி அடைப்பித்தாராகிய ஞானசம்பந்தர் உந்நின்றார் என்றார். அணிமையிலும் இல்லாமல், சேய்மையிலும் இல்லாமல் நடுநின்றவரை உந்நின்றார் என்ற சுட்டினால் அறிவிக்கிறார். உடனே வாய்மூர் இறைவன் ஞானசம்பந்தருக்குக் காட்சியருள அவர் அக்காட்சியை அப்பருக்குக் காட்ட அப்பர் கண்டார். எனவே பெருமான் காட்சியைக் காட்டியருள ஞானசம்பந்தர் கண்டு காட்டியதால், நாவுக்கரசருக்கு ஒருவகையில் குருவுமானார்.

தன்னைப்பெற்ற தவமுடைய சிவபாத இருதயருக்கு தோடுடைய செவியன் விடைஏறி முதலிய அடையாளங்களால் சுட்டிக்காட்டியும், அதைக்காணும் நிலை சிவபாத இருதயருக்குக் கிட்டவில்லை. ஞானசம்பந்தரால் தந்தை என்ற முறையில் அப்பரே என்று அழைத்த அப்பருக்கு அக்காட்சி கிடைத்தது. இவ்வரலாற்று நிகழ்ச்சியை அறிவிக்கும் பாடலைக் காண்போம்.

திறக்கப் பாடிய என்னினும் செந்தமிழ்

உறைப்புப் பாடி அடைப்பித்தார் உந்நின்றார்

மறைக்க வல்லரோ தம்மைத் திருவாய்மூர்

பிறைக்கொள் செஞ்சடை யார்இவர் பித்தரே -தி.5 .50 பா.8

அதிசூக்கும பஞ்சாக்கரம்:

வேதம் நான்கினுள்ளும் மெய்ப்பொருளாய் இருப்பது நாதன் நாமமாகிய நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்தேயாம். வேதம் நான்கு எனினும் அதர்வ வேதத்தை நீக்கி வேதம் மூன்று என்றே கொள்வர் மேலோர். அதுபற்றியே `வேதத்திரயி' எனவும் வழங்கலாயிற்று. இருக்கு, யசுர், சாமம் என்னும் மூன்று வேதங்களுள் நடுநின்ற யசுர் வேதத்தின் நடுவில் "நமசிவாயச சிவதராயச" என்னும் அதிசூக்கும பஞ்சாக்கரம் அமைந்துள்ளது. வடமொழி வேதத்தைப்போலவே தமிழ் வேதமாகிய மூவர் தேவாரத்துள் நடுநிற்பதாகிய அப்பர் தேவாரத்துள்ளும் நடுநின்ற இவ் ஐந்தாம் திருமுறையின் நடுவில் உள்ள 51ஆம் பதிகமாகிய திருப்பாலைத்துறைப் பதிகத்துள் அமைந்த 11பாடல்களுள் நடுநிற்கும் 6ஆம் பாடலில் இவ் அதிசூக்கும பஞ்சாக்கரம் பேசப்படுகிறது.

தூலபஞ்சாக்கரம் நமசிவய என்பது. சூக்கும பஞ்சாட்சரம் சிவயநம என்பது. அதிசூக்கும பஞ்சாட்சரம் சிவயவசி என்பது. இதனைச் சிவய சிவ என்றும் சிவய வசி என்றும் உபதேசக் கிரமப்படி ஓதிக்கணித்து வருகின்றனர். "வானிடத்தவரும் மண்மேல்வந்து அரன்தனை அர்ச்சிப்பர்" என்ற அருணந்தி சிவத்தின் வாக்குப்படி விண்ணவர்கள் மண்ணகத்தே வந்து வழிபடுவதைக்கண்ட மண்ணவர்கள் வியப்பு எய்துகின்றனர். மறவாமல் "சிவாய" என்னும் அதிசூக்கும பஞ்சாக்கரத்தை ஓதிக் கணிக்கின்றனர். அங்ஙனம் எண்ணினார்க்கு எழில்மிக்க வானகத்தை உறைவிடமாகப் பண்ணிக் கொடுத்தார் பாலைத்துறைப் பரமனார் என்கிறது இப்பாடல். அப்பாடலைச் சிந்திப்போம்.

விண்ணி னார்பணிந் தேத்த வியப்புறும்

மண்ணி னார்மற வாதுசி வாயஎன்று

எண்ணி னார்க்குஇட மாஎழில் வானகம்

பண்ணி னார்அவர் பாலைத் துறையரே -தி.5 .51 பா.6

நாவலந்தீவு:

இமய மலையின் தென்பாலுள்ள இந்தியப்பெருநாட்டிற்கு நாவலந்தீவு என்று பெயர். நாடும் ஊரும் தோன்றுதற்கு முன்னர் இத்தீவு நாவல்மரக்காடாக இருந்தது. காடு திருத்தி நாடாக்கிய முயற்சியால் நாடும், நகரமும் நற்றிருக்கோயிலுமாக நாவலந்தீவு திகழ்கிறது. இதனை ஜம்புத்தீவு என்றும் வழங்குவர். ஜம்பு - நாவல். கும்பகோணத்திற்கு அண்மையில் உள்ள திருநாகேச்சுரத் திறைவனை, நாவலந்தீவில் வாழ்பவர்கள் எல்லோரும் `வினையொடு பாவமாயின பற்றறுவித்திடலால்' இங்கு வந்து வணங்கி வழிபடுகின்றனர் என்கிறார் அப்பர்.

இராகு பூசித்து அருள்பெற்ற தலம் இது. இதனால் இராகுதோஷம் உடையவர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை இராகு காலத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வழிபட்டு நலமுறுகின்றனர். இப்பாடல் காண்போம்.

நாவ லம்பெருந் தீவினில் வாழ்பவர்

மேவி வந்து வணங்கி வினையொடு

பாவ மாயின பற்றறு வித்திடும்

தேவர் போல்திரு நாகேச் சரவரே. -தி.5 .52 பா.2

எட்டு நாண்மலர்:

எட்டு நாண்மலரை அட்டபுட்பம் என்பர் வடமொழியாளர். புன்னை, வெள்ளெருக்கு சண்பகம், நந்தியாவர்த்தம், பாதிரி, குவளை, அலரி, செந்தாமரை என்பன அவ் எண் மலர்களாம். அகப்பூசைக்குரிய எண்மலர்களாவன. கொல்லாமை, அருள், பொறியடக்கல், பொறை, தவம், வாய்மை, அன்பு, அறிவு என்பனவாம். இதனை நலஞ்சிறந்தார் மனத்தகத்து மலர்கள் எட்டும் என்பார் அப்பர்.

எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி

மட்ட லரிடு வார்வினை மாயுமால்

கட்டித் தேன்கலந் தன்ன கெடிலவீ

ரட்ட னார்அடி சேரும் அவருக்கே -தி.5 .54 பா.1

என்னும் இத்திருப்பதிகம் திருவதிகை வீரட்டானத்திறைவரைப் பற்றியது. இப்பதிகத்துப் பல பாடல்களிலும் அஷ்டபுஷ்பம் சார்த்தலையும் அதன் பலன்களையும் குறிப்பிடுகின்றார்.

வையம் ஆளவும் வைப்பர்:

அப்பர் காஞ்சியை அடுத்துள்ள திருமாற் பேறு செல்கிறார், "ஏதும் ஒன்றும்" எனத் தொடங்கும் பதிகம் பாடுகிறார். அதில் ஏதும் ஒன்றும் அறிவிலராயினும் அஞ்செழுத்தை உபதேச வாயிலாகப் பெற்று ஓதி உருவேற்றினால் அவரவர் உள்ளத்தில் அம்மையப்பராகிய சிவம் விளங்கி மகிழ்விப்பார் என்கிறார். விடமுண்ட கண்டா என ஓதின் வைத்த மாநிதியாகப் பயன் தருவார் என்று வழிப்படுத்துகின்றார். சாத்திரம் பல பேசி அதன்வழி நடவாதாரைச் சாடுகின்றார். கோத்திரம், குலம், எல்லாம் நமக்குத் தேவைதான். அதுவே நம்மை ஈடேற்றிவிடும் என்று எண்ணாதே. பாத்திரம் சிவம் என்பதை மறவாதீர், என்று அறிவுறுத்துகின்றார். அவ்வாறு உணர்ந்தால் ஒரு நொடிப் பொழுதில் உனக்கு அருள் செய்வார். மேலும் செவ்விய இரு பாதங்களையும் வணங்கினால் வையம் ஆளவும் வைப்பர் என்று அறிவிக்கிறார். அப்பாடல் காண்க.

ஐய னேஅர னேஎன் றரற்றினால்

உய்ய லாம்உல கத்தவர் பேணுவர்

செய்ய பாதம் இரண்டும் நினையவே

வையம் ஆளவும் வைப்பர்மாற் பேறரே. -தி.5 .60 பா.7

கோழம்பம் மேயஎன் உயிர்:

கோழம்பம் என்பது திருவாவடுதுறை, குத்தாலம் முதலிய தலங்களுடன் புராணத் தொடர்புடைய தலம். தேவாரம் பாடுவோர் விநாயகரை அடுத்து முருகனைப் பற்றிப் பாடுவதற்கு இவ்வூர் அப்பர் தேவாரமாகிய "சமர சூரபன்மாவைத் தடிந்த வேல் குமரன்" என்ற பாடலையே ஓதுவர். மேலும் இங்குள்ள இறைவனை அப்பர் பெருமான் தன் உயிராகப் போற்றியுள்ளார். "என் உயிரினை நினைந்து உள்ளம் உருகுமே" என்பது அத்தொடராகும். எல்லாத் தலங்கட்கும் முதலாவது கயிலாயம்தான் என்பதையும் இப்பாடலில் குறிப்பிடுகின்றார். குயில் பயிலும் சோலை சூழ்ந்த கோழம்பம் என்று ஊரின் செழிப்பைப் புலப்படுத்துகின்றார். உள்ளம் உருகில் உடன் ஆவார் என்பது சாத்திரம். எனவே உள்ளம் உருகி வழிபட்டு உய்வோமாக. இத்திருத்தலம் உடனடியாகத் திருப்பணி செய்யவேண்டிய தலமாகும். வளமார்ந்த கருத்தமைந்த பாடல் பெற்ற இத்தலம் வளங்குன்றிய நிலையில் உள்ளது. விரைவில் திருப்பணி செய்து சிறப்படைவோம். அப்பாடல் வருமாறு.

கயிலை நன்மலை ஆளும் கபாலியை

மயிலி யல்மலை மாதின் மணாளனைக்

குயில்ப யில்பொழில் கோழம்பம் மேயஎன்

உயிரி னைநினைந்து உள்ளம் உருகுமே. -தி.5 .64 பா.2

கோடி அர்ச்சனை:

இறைவன் இறைவியரது கோடி நாமங்களைச் சொல்லி, மலர்தூவி, குங்குமமிட்டு வழிபடுவதைக் கோடி அர்ச்சனை என்பர். இக்குறிப்பை பூவனூர் தேவாரத்தில் அப்பர் குறிப்பிடுகிறார்.

பூவ னூர்புனி தன்திரு நாமம்தான்

நாவில் நூறுநூறு ஆயிரம் நண்ணினார்

பாவ மாயின பாறிப் பறையவே

தேவர் கோவினும் செல்வர்க ளாவரே -தி.5 .65 பா.1

நூறாயிரம் ஒரு இலட்சம். நூறு நூறு ஆயிரம் ஒரு கோடி ஆகிறது. கோடி நாமங்களைச் சொல்லி வழிபட்டால் நம் பாவம் பறைவதோடு தேவர் கோவாகிய இந்திரனை விட மேலான செல்வத்தைப் பெறலாம்.

மனிதரில் தலையாய மனிதர்:

அனுசயம் - பகை. ஒருவருடனும் பகை பாராட்டாது, நட்புப் பாராட்டி கனிந்த மனத்துடன் கண்ணீர் மல்கிப் புனிதனாகிய பூவனூர் இறைவனைப்போற்றி வழிபட்டால், அப்படி வழிபட்டவர் மனிதர்களிலெல்லாம் தலையாயவராகத் திகழ்வர் என்கிறார் அப்பர். அப்பாடல் :

அனுச யப்பட்டு அதுஇது என்னாதே

கனிம னத்தொடு கண்களும் நீர்மல்கிப்

புனித னைப்பூவ னூரனைப் போற்றுவார்

மனித ரில்தலை யான மனிதரே. -தி.5 .65 பா.6

வலங்கொள்வர் அடி என் தலை மேலவே:

சைவசமய ஆசாரியர்கள் நால்வரும் அடியவர்களைப் போற்றியவர்கள். சிவபெருமானையும், சிவன்கோயில்களையும், அடியார்களையும் போற்றியவர்களின் பாதங்கள் என் தலைமேலன என்கிறார்கள். நம் ஆசாரியப் பெருமக்கள். அப்பர் திருவலஞ்சுழி சென்று வழிபடுகிறார். அங்கு இலங்கை வேந்தன் இராவணன் நினைவிற்கு வருகிறான். அவனது இருபது தோளும் இற்றுப்போம்படியாக ஒருவிரல் ஊன்றினான் என்கிறார். அவ்விரலும் நலங்கொள் பாதத்து ஒருவிரல் என்கிறார். ஆண்டவன் செய்வன எல்லாம் நல்லனவே. அவன் ஒருவன்தான் நன்றுடையான், தீயதில்லான். எனவே அவன் பாதம் நலம்கொள் பாதம் ஆயிற்று. ஒருவிரல் இராவணனை அழிக்கவில்லை. அடர்த்துத் திருத்தியது. எனவேதான் நலங்கொள் பாதத்து ஒருவிரல் என்கிறார் நாவரசர். அவ்வலஞ்சுழி நீர்வளம் சூழ்ந்தது. நீரில் மீன்வளம் மிக்கது. அம்மீனோ மலங்கு மீன் வகையைச் சேர்ந்தது. அப்படிப்பட்ட வளம் சூழ்ந்த வலஞ்சுழித் தலத்தை வலங்கொள்வார் திருவடிகள் என் தலைமேலன என்கிறார் நம் ஆசாரியமூர்த்தியாகிய அப்பர். இவ்வழியை நாமும் பின்பற்றி உய்யலாமே. அப்பாடல்.

இலங்கை வேந்தன் இருபது தோள்இற

நலங்கொள் பாதத் தொருவிரல் ஊன்றினான்

மலங்கு பாய்வயல் சூழ்ந்த வலஞ்சுழி

வலங்கொள் வார்அடி என்தலை மேலவே -தி.5 .66 பா.10

இதே கருத்தமைந்த ஞானசம்பந்தரின் கச்சியேகம்பப் பாடலும் காண்க.

தூயானைத் தூயவா யம்மறை ஓதிய

வாயானை வாளரக் கன்வலி வாட்டிய

தீயானைத் தீதில்கச் சித்திரு ஏகம்பம்

மேயானை மேவுவார் என்தலை மேலாரே. -தி.2 .12 பா.8

தலைவாயில்

ஐந்தாம்  திருமுறை - ஆசியுரை - தொடர்ச்சி..|.1 | 2 | 4 | 5 |