தலைவாயில்

பத்தாம் திருமுறை - முதலாம் பகுதி - ஆசியுரை - தொடர்ச்சி... | 1 | 2 | 3 |

மூன்றாம் தந்திரம்:

இது எண்வகை யோகங்களைக் கூறுவது. இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பன அவை.

தவிர்க்க வேண்டிய கெட்ட பழக்கங்களை விடுதல் இயமம் எனப்பெறும்.

கடைப்பிடிக்க வேண்டிய நற்பழக்கங்களை மேற்கொள்ளுதல் நியமம் எனப்பெறும்.

யோகம் பயில்வோர் அமர்ந்திருக்கும் நிலை ஆசனம் எனப்பெறும்.

மூலாதாரத்தில் மூண்டெழுகனலைப் பிராண வாயுவினால் எழுப்பி முறைப்படுத்தும் நிகழ்வே பிராணாயாமம் எனப்படும்.

மனத்தைப் பொறி வழி போகவிடாது அகமுகமாக ஆறு ஆதாரங்களில் நிறுத்துதல் பிரத்தியாகாரம் எனப்படும்.

பொறுமை தாரணை எனப்படும்.

இடையறாது நினைத்தல் தியானம் எனப்படும்.

இறையுடன் கலத்தல் சமாதி எனப்பெறும்.

யோக சித்திகளைப் பெறக் கருவியாயிருக்கும் உடம்பை அழியாதபடி நோயின்றிக் காக்கும் வழிகளைக் காய சித்தி என்ற தலைப்பிலும், உடம்பைப் பக்குவப்படுத்தவேண்டிய முறையை வார சரம், வார சூலை, அமுரி தாரணை, ஆயுள் பரீட்சை, கால சக்கரம் முதலிய தலைப்புகளாலும் விளக்கிப் பின் கேசரி யோகம், பரியங்க யோகம், சந்திர யோகம் முதலியவற்றை விளக்கிப் பிறகு சிவயோகங்கள் எல்லாவற்றினும் அட்டாங்க யோகமே சிறந்தது என்றும் முடித்துள்ளார்.

கேசரி யோகம் என்பது அடயோகத்தின் பாற்படும். கடினமானது. எல்லோரும் பயிற்சி செய்ய இயலாதது.

பரியங்க யோகம் இல்லாளுடன் கூடிச் செய்வது; இது கருத்தொருமித்த காதலனும் காதலியும் கூடிச் செய்வது. இதுவும் எல்லோருக்கும் இயல்வதன்று. சுந்தரர், பரவையார், சங்கிலியாருக்கும், திருவள்ளுவர் வாசுகிக்கும் ஏற்றது.

சந்திரயோகம் என்பது: சந்திரன் கலை 16, சூரியன் கலை 12, அக்கினி கலை 64, தாரணை கலை 4, ஆக 96 கலைகளையும் அறிந்து வளர்பிறை, தேய்பிறைகளில் பயிலப்படும் யோகம்.

இவற்றுள் அட்டாங்கயோகமே சிறந்தது. மேற்கொள்ளத் தக்கது என்று நிறைவு செய்துள்ளார்.

மூன்றாம் தந்திரத்தில் சில பாடல்கள்:

சாத்திரம் என்பது தவமும் அதன் பயனாகிய ஞானமும் என இருவகைப்படும். தவம் சாதனமாகும். அதில் சிறந்து நிற்பது அட்டாங்க யோகம். இதுபற்றி மூன்றாந் தந்திரத்துள் பெரிதும் உணர்த்துகின்றார்.

இயம நியமமே எண்ணிலா ஆசனம்

நயமுறு பிராணாயாமம் பிரத்தியா காரம்

சயமிகு தாரணை தியானம் சமாதி

அயமுறும் அட்டாங்க மாவது மாமே. (தி.10 பா.542)

இயமம் என்பது சான்றோரால் விலக்கியனவற்றை நீக்குதல். அவையாவன: கொல்லாமை, பொய்யாமை, விருப்பு வெறுப்பின்மை, புலால் உண்ணாமை, கரவாமை, மாசின்மை, கள்ளுண்ணாமை, மிக்க காமமின்மை முதலியனவாம்.

நியமம் என்பது தவம், செபம், ஆத்திகம், மனநிறைவு, தானம், விரதம், ஞானநூற்கேள்வி, சிவவேள்வி, சிவபூஜை, நற்பண்பு முதலியவற்றை நியமமாகச் செய்தல்.

ஆசனம் என்பது யோகம் பயில்வோர் கை, கால் முதலிய உடல் உறுப்புக்களைத்தக்கபடி அமைத்துக் கொண்டு அமர்ந்திருக்கும் முறையாகும். இது பத்துவகை, நூறுவகை எனக் கூறினும், எட்டு ஆசனங்களையே இவர் சிறந்ததாகக் கொண்டுள்ளார்.

பத்திராசனம், கோமுகாசனம், பத்மாசனம், சிங்காசனம், சுகாசனம், ஸ்திராசனம் என்ற ஆறும் உத்தமாசனம் என்றும் சுகத்திகாசனம், உத்தமோத்தமாசனம் என்றும் குறிக்கின்றார்.

இம்மூன்று நிலையும் கடைப்பிடிப்போரே அடுத்துள்ள பிராணாயாமம் செய்தற்குரியராவார்.

பிராணன் என்பது மூச்சுக்காற்று. இதனால்தான் உயிர் உடலில் தங்கி இருக்கிறது. பிராண ஆயாமம் என்பதைப் பிராணாயாமம் எனச் சேர்த்துச் சொல்கிறோம். ஆயாமம் என்றால் அடக்குதல் என்பது பொருள். மூச்சை முறைப்படி அடக்கினால் ஆயுள் நீளும். பிராணாயாமத்தை முறையாகச் செய்வோர் ஐம்புலன்களையும் அடக்கி ஆள்வர். இதனைத் தெளிவிக்கும் பாடல்,

ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்

உய்யக்கெண் டேறுங் குதிரை மற்றொன்றுண்டு

மெய்யர்க் குப்பற்றுக் கொடுக்கும்: கொடாதுபோய்ப்

பொய்யரைத் துள்ளி விழுத்திடுந் தானே. (தி.10 பா.552)

இங்குக் குதிரை என்றது மூச்சுக்காற்றை. இதனை வாசி என்று கூறுவர். அதுபற்றியே குதிரை என்றருளினார். வாசி - குதிரை - பிராண - யாமம் எனப்பிரித்து பிராணவாயுவை நடுநாடியில் செலுத்துவதே பிராணாயாமம் என்று கொள்ளவும் இடந்தருகிறது. யாமம் - நடு. மூலாதாரத்தில் மூண்டெழு கனலை இடது நாசி பூரகத்தால் இழுக்கும் பிராணவாயுவைக் கும்பகமாக அடக்கி அதனை நடுநாடியின் மூலம் மூலாதாரம் முதல் பிரமரந்திரம் வரை படிமுறையாகக் கொண்டுபோய்ப் பரம்பொருளைப் பிரிப்பின்றித் தியானிப்பதே பெரும் பயன் எனக் கொள்ளப்படுகிறது. பிராணாயாமம் செய்யும் முறையை ஒரு பாடலில் விளக்குகிறார்.

ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்

ஆறுதல் கும்பம் அறுபத்து நால்; அதில்

ஊறுதல் முப்பத் திரண்ட திரேசகம்

மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே. (தி.10 பா.556)

பூரகம் என்பது காற்றை இடது நாசியால் உள் இழுத்தல். கும்பகம் என்பது நிறுத்துதல், ரேசகம் என்பது வலது நாசியால் விடுதல். பூரகம் 16 மாத்திரை நேரமென்றால், நிறுத்துதல் நான்கு மடங்கு அஃதாவது 64 மாத்திரை. விடுதல் அதில் பாதியாகிய 32 மாத்திரையளவு. இதை முறையாகச் செய்தால் நரை திரை மூப்பற்றுப் பல்லாண்டு வாழலாம். முறைமாறின் தீங்கு பயக்கும்.

பிரத்தியாகாரம் என்பது மனம் பொறிவழி போகாமல் அகமுகப்படுத்தி மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களில் நிற்கச் செய்தல். அங்கு இறையருளில் கலந்து அமைதி பெறலாம்.

தாரணை என்பது பொறை நிலை என்பர். பிரத்யாகாரத்தால் ஆறு ஆதாரங்களில் நிறுத்தப்பட்ட மனத்தை மீளவும் புறம்போக விடாமல் அவ்வாதாரங்களிலேயே நிறுத்துதல். அவ்வாதார நிலைகளில் ஊன்றி நிலைப்பதே தியானம் எனப்பெறும் அத்தியான முயற்சியால் தன்னை மறந்து அவ்வாதாரப் பொருளேயாய் விடுதல் சமாதி எனப்படும்.

தியானம் என்பது இடையறாது நினைத்தல். இங்ஙனம் நினைப்பதால் மார்கழி நீராடுவோர் போல் இன்பவெள்ளத்தில் மூழ்கிச் சிறப்பர் என்று அறிவிக்கின்றார்.

சமாதி என்பது முடிவான நிலையைக் குறிப்பது; அஃதாவது நிறைவு. இயமம் முதலியவற்றை வழுவாது கடைப்பிடிப்பவர்கட்கே சமாதி நிலை கைகூடும். அல்லாதவர்க்குக் கூடாது.

இவ்வெண்வகை யோகம் பயிலுங்கால் அட்டமாசித்திகளும் இடையில் கைகூடும். அவற்றை அகற்றி சமாதிநிலை கூடுதலே பெரும் பயனாகும். சித்தியில் ஈடுபடுதல் சிறுபயன் பெறவே பயன்படும். கடவுளோடு ஒப்ப இருக்கும் சமாதி நிலையை விட்டுச் சிறுபயன் கொள்ள விழையார் சான்றோர்.

இனி இத்தந்திரத்தில் அகநோக்கில் காணத்தக்க ஆறு ஆதாரங்களைப் பற்றிச் சிந்திப்போம்.

ஆறு ஆதாரம் - மூலாதாரம் :

ஆறு ஆதாரங்களைப் பற்றியும் அவற்றிற்குரிய மூர்த்திகளைப் பற்றியும், அக்ஷரங்கள் பற்றியும் தெரிந்தால்தான் தியானிப்பதற்கு இயலும்.

மூலதாரம் - இது எருவாய் கருவாய்க்கு இடைப்பட்ட இடம்; மூலாதாரம் என்பது மண், பிருதிவி, முதலாவது ஆதாரம் எனப்படுவது; நான்கு இதழ்த்தாமரை. வீணா தண்டத்தின் அடிப்பாகத்தில் உள்ளது. இத்தாமரையில் சித்தலக்ஷ்மி, வல்லபை என்ற தேவியருடன் கணபதி வீற்றிருப்பதாகத் தியானித்தல் வேண்டும். நான்கு தளத்திற்கும் நான்கு எழுத்துக்கள், வம் சம் ஷம் ஸம்.

சுவாதிட்டானம் என்பது தனது இடம் எனப்பொருள் தரும். சோதியாகிய இறைவனது இடம். குறியினுக்கும் உந்திக்கும் இடைப்பட்ட இடமே சுவாதிட்டானம். கசேரு தண்டத்தின் முதுகுத் தண்டு அடிப்பாகத்தில் இருந்து சிறிது மேல்பாகத்தில் இருப்பது. ஆறிதழ்த் தாமரையில் பம் முதல் லம் வரை ஆறெழுத்துக்கள். சாவித்திரி காயத்திரியுடன் பிரம்மா வீற்றிருப்பார்.

மணிபூரகம் வாயுவைக் கும்பிக்கும் சிறந்த இடம் : டம் முதல் பம் வரையுள்ள பத்து எழுத்துக்கள். பத்திதழ்த் தாமரையில் பூதேவி சீதேவியுடன் விஷ்ணு வீற்றிருக்கிறார். இது தொப்புள் பிரதேசம்.

அனாகதம் என்றால் வடிவற்றது என்பது பொருள். மனத்தின் இடம் இதுவே. கம் முதல் டம் வரை 12 அக்ஷரங்கள் 12 இதழ்த் தாமரையில் கௌரி அம்பிகையுடன் உருத்திரன் வீற்றிருக்கிறார்.

விசுக்தி என்பது மிக்க தூய்மை எனப் பொருள் தரும். முதல் வரை 6 எழுத்துக்கள். 16 இதழ்த் தாமரையில் உன்மனி வாக்வாதினியுடன் மகேஸ்வரன் வீற்றிருக்கிறார். இடம் நாக்கின் அடிப்பாகம்.

ஆக்ஞை என்பது அறிவிற்கு நிலைக்களம் எனப் பொருள் படும்.

ஹம், க்ஷம் இரு எழுத்து. ஈரிதழ்த் தாமரையில் மனோன்மணி, தர்மசத்தியுடன் சதாசிவம் குருவடிவாக வீற்றிருக்கின்றார். இடம் புருவ மத்தியம், பிரம்மரந்திரம் - இது சிரத்தின் உச்சியில் உள்ளது. அதில் பராசக்தியுடன் பரமசிவன் வீற்றிருக்கிறார்.

இங்குக் குறிப்பிட்ட ஆதாரங்களில் அவ்வம் மூர்த்திகளைத் தியானித்தல் வேண்டும். அனாகததளம் இதயம். மனத்தின் இடம் இது. இங்கு அட்டசித்திகளும் கைகூடும். அதனை அகற்றி மேற்செல்ல வேண்டும். சித்திகளில் ஈடுபட்டால் உண்மை ஞானம் தடைப்பட்டுவிடும்.

பிராசாத யோகம்: கலை நிலை என்ற தலைப்பில் நமது ஆதீன யோகப் பயிற்சிக்கு உரியதாகிய பிராசாத யோகம் பற்றிக் கூறுகிறார். பிராசாதம் என்பதற்குப் பொருள் சிவஞான கதியைத் தருவது என்பது பொருளாகும். பிரா - சிவஞானம்; ஸா - கதி; - தருவது; இது வாசி யோகத்தினும் நுண்ணிதாய் மேம்பட்டு விளங்குவது. ஒம் என்ற பிரணவத்தைப் பதினாறு கூறுகளாகப் பிரித்துப் பயிற்சி செய்வது சோடசகலாப் பிராசாதம் ஆகும். குரு ஞானசம்பந்தர் அருளிய சோடசகலாப் பிராசாத சட்கம் என்ற நூலில் இதுபற்றிய விளக்கம் காணலாம்.

வார சரம்:

வாரம் என்பது இங்கு கிழமைகளைக் குறிக்கின்றது.கிழமைகள் ஏழனுள், வெள்ளி, திங்கள், புதன் ஆகிய மூன்று நாள்களிலும் பிராண வாயு இடது நாடி (நாசி) வழியாகவும், சனி, ஞாயிறு, செவ்வாய் ஆகிய மூன்று நாள்களிலும் பிராண வாயு வலது நாடி (நாசி) வழியாகவும், வியாழனில் வளர்பிறையாயின் இடது நாடி வழியாகவும், தேய் பிறையாயின் வலது நாடி வழியாகவும் இயங்குதல் உடல் நலத்திற்கு ஏற்புடைய இயற்கைப் பிராண வாயு இயக்கமாகும். இதை விளக்கும் பாடல்,

வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்இடம்

ஒள்ளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம்

வள்ளிய பொன்னே வளரும் பிறையிடம்

தெள்ளிய தேய்பிறை தான்வல மாமே. -தி.10 பா.774

அமுரி தாரணை :

அமுரி என்பது சிறுநீரில் உள்ள ஒரு மருந்துப் பொருள். தாரணை என்பது தரித்தல் எனப் பொருள் தரும். அமரி என்பது மருவி அமுரி என வழங்குகிறது. அமரி - மரித்தலை (இறத்தலை) நீக்குவது.எனவே இதுவும் அமிர்தம் என்பதும் ஒரு பொருட் சொற்களாம்.

அமுரி என்பது சிறுநீரே என்பாரும் உளர். அது பொருந்தாது என்பதை அமுரி தாரணைப் பகுதியிலுள்ள ஐந்து திருமந்திரங்களும் பல கோணங்களில் தெளிய விளக்குகின்றன.

துறவிகளும், துறவிகளாய் வாழும் எண்ணம் உடையவர்களும் மிளகுப் பொடியைப் பல வகையாலும் உணவில் சேர்த்து உண்பர். இவ்வாறு உண்டால் சிறு நீரானது சிவ நீராய் மாறும். இதனால் துறவிகள் எண்ணெய் தேய்த்துக் குளிக்காமல் மிளகு தேய்த்துக் குளிக்கிறார்கள். மிளகு தேய்த்துக் குளிப்பவர்களுக்கு நரை திரை வராது. இதை விளக்கும் பாடல்,

நூறும் மிளகு நுகரும் சிவத்தின் நீர்

மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்காள்

தேறி இதனைத் தெளிஉச்சி கப்பிடின்

மாறும் இதற்கு மறுமயி ராமே. -தி.10 பா.831

சந்திர யோகம்:

சந்திரனை விளக்கம் செய்கின்ற யோகம் என்பது இதன் பொருள். சந்திரன் என்பது இங்குச் சந்திர மண்டலத்தைக் குறிக்கும். இஃது ஆறாதாரங்களைக் கடந்த ஏழாம் இடமாகிய பிரமரந்தரத்தைக் குறிப்பது. இது சகஸ்திராரம் எனவும் பேசப்படும். இந்த இடத்தை ஆயிரம் இதழ் உள்ள தாமரை மலராகக் கொண்டு அதில் சிவம் பிரகாசிப்பதாகக் கொள்வர்.

பதினாறு கலைகளுடன் சந்திரன் வளர்ந்தும் தேய்ந்தும் வருவது போல், உடம்பிலுள்ள சந்திர மண்டல ஆற்றலும் வளர்ந்தும் தேய்ந்தும் ஒடுங்குவதாகும். அண்டத்தில் உள்ள சந்திரனைப் போலவே, பிண்டத்தில் உள்ள சந்திர மண்டலமும் ஒத்துள்ளதைக் கூறுகிறது இப்பகுதி.

சூரிய கலை பன்னிரண்டு என்கிறார். இது 12 சூரியர்களைக் குறிக்கும். வளர்பிறை தேய்பிறைகளால் சந்திர கலை பதினாறு என்பதை உணரலாம். அக்கினி கலை பத்து எனக்கூறினாலும், விரிவில் அறுபத்துநான்கு எனப் பேசுகிறார். மேலும் நட்சத்திரக் கலைகளையும் சேர்த்து 96 கலையாகக் கணக்கிட்டு, தத்துவம் 36, தாத்துவிகம் 60, ஆக 96 தத்துவங்களாகக் குறிப்பிடுகிறார்.

மூன்றாம் தந்திரத்தின் முடிவில் யோக நெறியை விளக்கி நிறைவு செய்கின்றார்.

இத்திருமந்திர நூலை உரையின் துணைக்கொண்டு தெளிவு கண்டு பயிற்சி பெறுபவரெல்லாம் பல்லாண்டு வாழலாம். அன்பர்கள் படித்துப் பயிற்சி மேற்கொண்டு பல்லாண்டு வாழ, செந்தமிழ்ச் சொக்கன் திருவருளைச் சிந்திக்கின்றோம்.

வாழ்க திருமந்திரம்,

வளர்க அட்டாங்க யோக நெறி.

தலைவாயில்

பத்தாம் திருமுறை - முதலாம் பகுதி - ஆசியுரை - தொடர்ச்சி... | 1 | 2 | 3 |