தலைவாயில்

பத்தாம் திருமுறை - முதலாம் பகுதி - ஆசியுரை - தொடர்ச்சி... | 1 | 3 | 4 |

யோகநூல்:

"பந்தமுறும் மந்திரங்கள் பதினொன்றும் ஆதலினால் அந்த முறை நான்கினொடும் முறை பதினொன்றாக்கினார்" என்கிறது திருமுறை கண்ட புராணம். அந்த முறையில் நான்கினொடு என்பது 8, 9, 10, 11ஆம் திருமுறைகளைக் குறிக்கின்றது.

"மந்திரங்கள் பதினொன்றும்" என்பது ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தியோஜாதம் ஆகிய ஐந்து பிரம்ம மந்திரங்களும், இருதயம், சிரசு, சிகை, கவசம், நேத்திரம், அஸ்திரம் ஆகிய ஆறு அங்க மந்திரங்களும் கொண்டதாம்.

இவற்றுள் பத்தாவது மந்திரம் நேத்திர மந்திரமாக உள்ளது. எனவே, பத்தாம் திருமுறையும் நேத்திரத்திற்கு ஒப்பாகக் கொள்ள இருப்பது.

நேத்திரம் - கண். இறைவனுக்கு மூன்று கண்கள் உண்டு. வலது கண் சூரியன், இடது கண் சந்திரன். நெற்றிக்கண் நெருப்பு. இது புருவ மத்தியில் இருப்பது. இக்கண் சிறப்பாக ஆக்கல், அழித்தலுக்குப் பயன்படுத்தப்படும். முருகவேளை ஆக்கியதும், கருவேளாம் மன்மதனை அழித்ததும் இந்நெற்றிக்கண்ணேயாம்.

நமக்கும் மூன்று கண்கள் உண்டு. மூன்றாவது கண் யோக முயற்சியால் திறக்கப்படத்தக்கது. இது பிராணாயாமப் பயிற்சியால் அடையத்தக்கது.

இத்திருமந்திரம் தோத்திர நூல். சாத்திர நூல் என்று போற்றப்பெற்றாலும் பெரும்பகுதி யோக நூலாகவே காட்சி தருகிறது. நெற்றிக் கண்ணும் உச்சித் தலையும் (பிரம்ம ரந்திரம்) யோகத்தால் திறக்கத் தக்கன. எனவேதான் பத்தாவது தந்திரமாகிய நேத்திரத்திற்கு ஒப்பான இதனைப் பத்தாம் திருமுறையாக அமைத்தனர் என்பது திருமுறைகண்ட புராணத்தால் உணர முடிகிறது.

மூலன் உடலில் புகுமுன்:

திருமந்திர ஆசிரியருக்கு அவர் தம் தாய் தந்தையர் இட்ட பெயர் சுந்தரன் என்பதாம். இவர் தென்தமிழ்ப் பொதியத்தில் அகத்தியர் நடத்திய தமிழ்ச் சங்கத்தில் உலகநூல் கற்றார். அவர் ஆதரவால் அறிவு நூல்களைக் கற்க வடகயிலையில் நடைபெற்ற குருகுலத்தில் சேர்ந்து அறிவு நூல்களாம் வேத ஆகமங்களை நந்தியெம் பெருமானிடம் கற்று, நாதர் என்ற பட்டம் பெற்றுச் சுந்தர நாதராய்த் தவம் செய்து வாழ்ந்திருந்தார். அங்கு இவருடன் பயின்றோர், சனகர், சனந்தனர். சனாதனர், சனற்குமாரர், பதஞ்சலி, வியாக்கிரபாதர், சிவயோக மாமுனிவர் ஆகிய எழுவராவர்.

பதஞ்சலி, வியாக்கிர பாதருடன் இவர் ஒருமுறை தில்லை வந்து நடன தரிசனம் செய்து திருக்கயிலை மீண்டார். பதஞ்சலி வியாக்கிர பாதர் இருவரும் தில்லையிலேயே ஆச்சிரமம் அமைத்துத் தங்கி விட்டனர்.

பெரிய புராணத்தில் திருமூலர்:

சுந்தரநாதர் அகத்தியரைக் காணும் விருப்பினால், திருக்கேதாரம், பசுபதிநாதம், காசி, விந்தியமலை, சீபற்பதம், திருக்காளத்தி, திருவாலங்காடு, காஞ்சிபுரம், தில்லை ஆகிய தலங்களைத் தரிசித்துத் திருவாவடுதுறை சேர்ந்தார். ஒப்பிலாமுலையம்மை உடனாகிய ஸ்ரீ மாசிலாமணி ஈசரைத் தரிசித்தார்.

உள்ளம் துறைசையை நாடியபோதிலும் பொதியமலைக்குப் புறப்பட்டார். காவிரிக் கரையில் சாத்தனூரில், அந்தணர்களின் பசுக்கள் வினைமாள இறந்த மூலன் என்ற இடையன் உடலைச் சுற்றிக் கதறின. செந்தண்மை பூண்ட அந்தணராகிய சுந்தரநாதர், பசுக்களின் துன்பத்தைப் போக்கத் திருவுளம் கொண்டார்.

தமது உடலை ஓரிடத்தில் பாதுகாப்பாக வைத்துவிட்டு, தம் உயிரை அட்டமா சித்திகளுள் ஒன்றாகிய பிராகாமியம் என்ற சித்தியினால் பவன வழியாக அம்மூலன் உடலில் பாய்ச்சினார். மூலன் எழுந்தான். பசுக்கள் மகிழ்ந்தன. புற்களை மேய்ந்தன. காவிரியில் நீர் பருகின. மாலையில் வீடு சேர்ந்தன. இவர் அவற்றுடன் சென்று ஊர்ப்பொது மடத்தில் தங்கினார். மனைவியுடன் தொடர்பில்லை என்பதை மனைவிக்கும் மக்கட்கும் அறிவித்தார்.

மறுநாள் தாம் சேமித்து வைத்த உடலில் புகுதற்குச் சென்றார். ஆனால் உடல் காணப்படவில்லை.

இல்லாளன்:

திருவருள், துறைசையில் தவம் இயற்றப் பணித்துள்ளதைத் திருவருளால் உணர்ந்தார்.

திருக்கோயிலின் மேல்பால் படர் அரசின் கீழ் இருந்து ஆண்டுக்கு ஒரு பாவாக மூவாயிரம் ஆண்டு தவம் செய்து மூவாயிரம் திருமந்திரம் மொழிந்தார்.

மூலனின் உடலில் புகுந்த சிவயோகியாரின் நிலைகண்டு மூலன் மனைவி வருந்தினாள். இந்த இடத்தில் இல்லாளன் என்ற அரியதொரு சொல்லைச் சேக்கிழார் எடுத்தாள்கிறார். "இல்லாளன் இயல்பு வேறானமை கண்டு" என்பது அப்பகுதி.

மற்றும் காரைக்காலம்மையார் வாயிலாகவும், "இல்லாளன் வைக்க எனத் தம் பக்கல் முன்னிருந்த நல்ல நறுமாங்கனிகள்" என்ற இடத்திலும் இவ்வரிய சொல்லை ஆள்கிறார்.

இல்லாள் என்ற பெண்பாற் சொல் இல்லத்தை ஆள்பவள் என்ற பொருள் தருகிறது. ஆனால் அதற்கு நேராக உள்ள இல்லான் என்ற ஆண்பாற் பெயர் இல்லாதவன் என்பதைக் குறிக்கிறது. என்பர் சிலர்.

அவர்களைத் தெளிவிப்பாராக "இல்லாளன்" என்னும் இவ்வரிய சொல்லை இவ்விரு இடங்களில் காட்டியுள்ளார் சேக்கிழார். இதன் பொருள், இல்லத்தையும் அதை ஆள்கின்ற இல்லாளையும் ஆள்பவன் என்பதாகும்.

மேலும் "இல்லான்" என்ற சொல் இல்லாதவன் என்னும் பொருளை உணர்த்துவதோடு இல்லத்தை உடையவன் என்ற பொருளிலும் வருகிறது. இதனை விளக்க, இல்லான் என்பதற்கு இல்லத்தை உடையவன் என்ற பொருள்தரும் பாடல் ஒன்றையே நமக்கு அருளியுள்ளார் திருஞானசம்பந்தர்.

நல்லானை நான்மறை யோடிய லாறங்கம்

வல்லானை வல்லவர்பால் மலிந்து ஓங்கிய

சொல்லானை தொல்மதிற் காழியே கோயிலாம்

இல்லானை ஏத்தநின்றார்க்குள தின்பமே. (தி.2 .11 பா.1)

என்பது அப்பாசுரம்.

வேதாகமம்:

வேத காலம் கி.மு. 6000 என்பர். கி.மு. 3000இல் வேத ஆகமம் பற்றிக் குழப்ப நிலை ஏற்பட்டது. அப்போது அக்குழப்பத்தைத் திருமூலர் தெளிவித்தார் என்பர்.

அதற்கேற்ப வேதச் சிறப்பு என்ற பகுதியில் `சீலாங்க வேதத்தைச் செப்பவந்தேனே' என்றும், `ஆகமச் சிறப்பு' என்ற பகுதியில் `சிந்தை செய்து ஆகமம் செப்பலுற்றேனே' என்றும் குறித்துள்ளமையால் தெளியலாம்.

வேதத்தை விட்ட அறமில்லை என்றும், வேதத்தில் ஓதத்தகும் அறங்கள் எல்லாம் உள்ளன என்றும், தர்க்கவாதத்தை விட்டு வளமுற்ற, வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே என்றும், வேதமொடு ஆகமம் மெய்யாம் இறைவன் நூல் என்றும், வேதம் பொதுவும், ஆகமம் சிறப்புமாகும் என்றும் நந்தியெம்பெருமான் வாயிலாக நமக்குக் கிடைத்த ஆகமங்கள் காரணம், காமிகம், வீரம், சிந்தம், வாதுளம், வியாமளம், காலோத்தரம், சுப்பிரம், மகுடம் என்னும் ஒன்பதே என்றும், அவ்வொன்பது ஆகமங்களின் சாரங்களைத் தான் திருமூலர் ஒன்பது தந்திரங்களாகப் பாடியுள்ளார் என்றும் தெளியலாம்.

பாயிரத்தோடு கூடிய ஒன்பது தந்திரங்களையும் "காலை எழுந்து கருத்தறிந்து ஓதிடின் ஞாலத் தலைவனை நண்ணுவரன்றே" என்று இவரே பலனும் கூறியுள்ளார்.

மூலன் உரைசெய்த மூவாயிரம் தமிழ்

மூலன் உரைசெய்த முந்நூறு மந்திரம்

மூலன் உரைசெய்த முப்பது உபதேசம்

மூலன் உரைசெய்த மூன்றும் ஒன்றாமே. (தி.10 பா.3046)

என்ற பாடலை வைத்து முப்பது உபதேசம் என்பதும், முந்நூறு மந்திரம் என்பதும், தனித்தனி நூல்கள் என்றும் அந்நூல்கள் மூலன் உடலில் புகுவதற்கு முன்னர் சுந்தரநாதர் செய்தது என்றும், மூலன் உடலில் புகுந்த பிறகு செய்தது மூவாயிரம் தமிழ் ஒன்றே என்றும் கூறுவர்.

மூலன் உரைசெய்த என்று இத்திருமந்திரத்திலேயே இருப்பதனால் மூன்றும் திருமூலராயிருந்து அருளிச் செய்ததே என்று கொள்ளுதலும் பொருத்தம் என்று தோன்றுகிறது. மேலும் மூன்றும் ஒன்றாமே என்பதனால் மூன்று நூல்களும் ஒரே கருத்தை மூன்று வரிசையாகக் கூறுவனவே என்று கொள்வதும் பொருத்தமுடைய கருத்தேயாகும்.

பாயிரம்:

ஒரு மனிதனைப் புரிந்து கொள்ள முகம் இன்றியமையாதது. அதுபோல ஒரு நூலுக்கு முகம் போன்றதான முகவுரை இன்றியமையாதது. முகவுரையைத்தான் பாயிரம் என்கிறோம்.

இதில் பொதுப்பாயிரம் இந்நூலைப் பற்றியது. சிறப்புப் பாயிரம் திருமூலரைப் பற்றி மாணாக்கர்கள் செய்தது. தற்சிறப்புப் பாயிரம் தம்மைப் பற்றித் தாமே கூறியது. ஆக முப்பாயிரமும் இதில் இடம் பெற்றுள்ளன. சிறப்புப் பாயிரத்துள் குருமட வரலாறும், திருமந்திரத் தொகைச் சிறப்பும் உள்ளன.

பொதுப்பாயிரம்:

1 கடவுள், 2. மழை, 3. நீத்தார், 4. அறம் 5. முடியுடைவேந்தர் என்ற ஐவகை வாழ்த்துக்களை உடையது. திருவள்ளுவரும் கடவுள் வாழ்த்து என்ற பாயிரப் பகுதியில் கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை அறன் வலியுறுத்தல் என்று அமைத்திருப்பது ஒப்புநோக்கத்தக்கது.

திருவள்ளுவர் அரச வாழ்த்தைப் பொருட்பாலில் புகன்றுள்ளார். இதனால்தான், தேவர் குறளும் திருமூலர் சொல்லும் ஒரு வாசகம் (ஔவையார் - நல்வழி 40) என்றனர். அஃதாவது, இருநூல்களும் ஒரே கருத்தை வெவ்வேறு வகையில் அறிவிக்க வந்தன என்பதாம்.

காலம்:

இவர் காலம் கி.மு. 3100 லிருந்து கி.மு. 100 என்று துடிசைக்கிழார் குறிப்பிடுகிறார்.

மற்றைய ஆய்வாளர்கள் ஏறத்தாழ கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு என்று கொண்டுள்ளனர். கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை தமிழக வரலாற்றில் இருண்ட காலம் அஃதாவது சிறப்பில் காலம் எனக் கொள்கின்றனர்.

"முன்னவனார் கோயில் பூசைகள் முட்டிடின்

மன்னர்க்குத் தீங்குள வாரிவளங் குன்றும்" (தி.10 பா. 518)

"ஈசனடியார் இதயம் கலங்கிட

தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்" (தி.10 பா. 534)

என்பன போன்ற பாடல்கள் இருண்ட காலத்தின் கொடுமைகளை விளக்கிக் கூறுவன போன்று உள்ளமையால் இவர் காலம் ஐந்தாம் நூற்றாண்டாகக் கொள்ளத் துணை செய்கின்றன.

கலிவிருத்தச் சிறப்பு:

திருமந்திரம் முழுவதும் இயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளைகளாலான கலிவிருத்தங்களாலாயது.

பெரியபுராணம், கந்தபுராணம், திருவிளையாடற்புராணம், கம்பராமாயணம், ஆகிய பெருங்காப்பியங்களில் கடவுள் தோத்திரங்களாக உள்ள பாடல்கள் அனைத்தும் இக்கலிவிருத்தப் பாடல்களாலாயது. என்பது இங்கு நினைவு கூரத்தக்கது.

ஒன்பது தந்திரங்களைக் கொண்டதாய் 232 தலைப்புகளில் இந்நூல் நடையிடுகிறது.

திருவள்ளுவர் தாம் இயற்றிய திருக்குறளில் 133 அதிகாரங்களைக் கொண்டுள்ளார். அவர் ஒவ்வோர் அதிகாரத்திற்கும் பப்பத்துக் குறள் வெண்பாக்கள் பாடியுள்ளார்.

ஆனால் திருமூலரோ ஒவ்வொரு தலைப்பிலும் வரையறையின்றி இரண்டு பாடல்கள் முதல் 100 பாடல்களை வரை பாடியுள்ளார்.

கூடுதலாக மூவாயிரத்து நாற்பத்தேழு பாடல்கள் உள்ளன. மூவாயிரம் பாடல்களே இருத்தல் வேண்டும். சில பாடல்கள் முழுவதும் அப்படியேயும். சில மாற்றங்களுடனும் பலவிடத்தும் வந்துள்ளன. இடைச்செருகலும் சேர்ந்துள்ளது. இஃதன்றிச் சில ஏட்டுப்பிரதிகளிலும் உரைகளிலும் காணப்படும் பாடல்களும் 22 உள்ளன. அருணையார் இந்நூலுள் 3000 பாடல்களையே தேர்ந்துகொண்டுள்ளார்.

நூல் அமைப்பு:

பாயிரத்தில், கடவுள் வாழ்த்து, வேதச் சிறப்பு, ஆகமச் சிறப்பு, குரு பாரம்பரியம், திருமூலர் வரலாறு, அவையடக்கம், திருமந்திரத் தொகைச் சிறப்பு, குருமட வரலாறு, திரிமூர்த்திகளின் சேட்ட கனிட்ட முறை என்ற ஒன்பது தலைப்புகளும், அவற்றுள் 112 பாடல்களும் இடம்பெற்றுள்ளன.

முதல் தந்திரம் உபதேசம் முதலாக கள்ளுண்ணாமை ஈறாக 21 தலைப்புகளில் 224 பாடல்களைக் கொண்டுள்ளது.

இரண்டாம் தந்திரம் அகத்தியம், பதிவலியில் வீரட்டம் எட்டு முதலாக, பெரியாரைக் துணைக்கோடல் ஈறாக 25 தலைப்புகளில் 212 பாடல்களைக் கொண்டு விளங்குகிறது.

மூன்றாம் தந்திரம் அட்டாங்க யோகம் முதலாக, சந்திர யோகம் ஈறாக 21 தலைப்புகளில் 335 பாடல்களைக் கொண்டு விளங்குகிறது.

நாலாம் தந்திரம் அசபை முதல் நவாக்கரி சக்கரம் ஈறாக 13 தலைப்புகளில் 535 பாடல்களைக் கொண்டு இலங்குவது.

ஐந்தாம் தந்திரம் சுத்த சைவம் முதல் உட்சமயம் முடிய 23 தலைப்புகளில் 154 பாடல்களைக் கொண்டுள்ளது.

ஆறாம் தந்திரம் சிவகுரு தரிசனம் முதல் அபக்குவன் முடிய 13 தலைப்புகளில் 131 பாடல்களைக் கொண்டுள்ளது.

ஏழாம் தந்திரம் ஆறாதாரம் முதல் இதோபதேசம் முடிய 38 தலைப்புகளில் 418 பாடல்களைக் கொண்டு இலங்குவது.

எட்டாம் தந்திரம் உடலில் பஞ்ச பேதம் முதல் சோதனை முடிய 43 தலைப்புகளில் 527 பாடல்களைக் கொண்டு விளங்குகிறது.

ஒன்பதாம் தந்திரம் குருமட தரிசனம் முதல் சர்வவியாபி முடிய 32 தலைப்புகளில் 399 பாடல்களைக் கொண்டு நிறைகிறது.

ஆக, பாடல்கள் 3047.

தலைவாயில்

பத்தாம் திருமுறை - முதலாம் பகுதி - ஆசியுரை - தொடர்ச்சி... | 1 | 3 | 4 |