மாறி வருகின்ற பிறவிகளில் அகப்படும் சில தெய்வங்களைப் பரம்பொருளாகக் கருதி அவற்றை அடைவதற்குரிய வழிகளிலே உள்ளம் மயங்கும் அடியேனை, மயங்காதவாறு நல்ல நிறத்தை உடைய பொன் போலவும் மின்னல் போலவும் ஒளி நிறைந்த உன் திருவடிகளின் கீழே ஈடுபடச்செய்த ஒப்பில்லாத மணி போல்பவனே! அறத்தின் பல கூறுபாடுகளையும் ஆராய்ந்த சனகர் முதலிய மேம்பட்ட தவத்தோர்கள் தலைவனாய் ஆலமரத்தின்கீழ்க் குருமூர்த்தியாய் அமர்ந்த பொன்னம்பலவனே! வைதிக சமயத்துக்குப் புறம்பான சமணர், புத்தர் என்பவர்களுடைய மயக்க நெறிகளையும் உண்டாக்கிய உன்னை அடியனேன் அடையுமாறு நீ திருவுள்ளம் பற்றிச் செயற்படுவாயாக.
திறம்பிய - மாறி வருகின்ற. சில என்றது, இழிபு கருதி. `நெறிக்கண்ணே` என்பது `நெறிக்கே` என வந்தது உருபு மயக்கம். `நெறிக்கே நின்று` என்றுஒருசொல் வருவிக்க.
பிறவியுடைய தெய்வங்களைப் பிறவி இல்லாத கடவுளாகக் கருதுதல் மயக்க உணர்வாதலின், திகைக்கின்றேன் என்றார். நிறைந்த என்றதற்கு நிறைந்தாற்போன்ற என உரைக்க. நிகழ்வித்த - வாழச் செய்த. திறம்-வகை. `திறமாக, புறமாக` என ஆக்கம் வருவிக்க. கண்டு - வகுத்து. `அருந்தவர், நால்வர்` என்க. என்னை?
நன்றாக நால்வர்க்கு நான்மறையின் உட்பொருளை
அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் காணேடி
(தி.8. திருச்சாழல் - 16) என்பது முதலாக அருளிச் செய்யப்படுதலின். அருந்தவர்க்கு அரசு, ஆசான் மூர்த்தி. புறம் - வேதாகமங்கட்குப் புறமாம்படி. சமண் என்றது, குழூஉப் பெயர். பொய்கள் - மயக்க நெறிகள். கண்டாயை - உளவாக்கிய உன்னை. சமண புத்த மதங்களையும் சிவபெருமானே உண்டாக்கினான் என்பதை,
துணைநன்மலர் தூய்த்தொழுந் தொண்டர்கள் சொல்லீர்
பணைமென்முலைப் பார்ப்பதி யோடுட னாகி
இணையில்இரும் பூளை இடங்கொண்ட ஈசன்
அணைவில்சமண் சாக்கியம் ஆக்கிய வாறே. (தி. 2 ப.36 பா.9)
என ஞானசம்பந்தர் அருளிச்செய்தமையான் அறிக. `தெய்வக் கொள்கையற்ற சமயங்களையும் உன்னை அடைதற்குப் படிவழியாக அமைத்த நீ, சில தெய்வக்கொள்கையுடைய பிற நெறியில் நின்ற என்னை உன்னை அடையுமாறு செய்தல் கூடாதோ` என்பது கருத்து. இத்திருப்பாட்டு, `இவ்வாசிரியர் முதற்கண் மாயோன் நெறியில் நின்று, பின்னர்ச் சிவநெறியை எய்தினார்` எனக் கூறுவாரது கூற்றிற்குத் துணைசெய்யும்.