மிக்க பூத கணங்களை, ஊர்களில் பிச்சையேற்று அதனைப் பகுத்து உண்ணும் சுற்றமாக உடையவரே, ஆராய்ந்த நான்கு வேதங்களை உணர்ந்தோராகிய அந்தணர்க்கு இடமான திருமிழலை யுள், அரிய, குளிர்ந்த வீழி மரத்தின் நிழலை இடமாகக்கொண்டவரே, நீர், இனிதிருந்து இசையைத் தமிழோடு கேட்கும் விருப்பத்தால், அத்தகைய தமிழைப் பாடியோர்க்குப் பொற்காசினை நாள்தோறும் வழங்கினீர் ; அதுபோல, அடியேனுக்கும் அருள் செய்யீர்.
` உண்ணும் ` என்ற பெயரெச்சம், ` சுற்றம் ` என்னும் ஏதுப்பெயர் கொண்டது. இத்தலத்தில் இறைவர் ; இசைத் தமிழைப் பாடியோர்க்கு நித்தல் காசு நல்கியது, திருஞானசம்பந்தர்க்கும், திருநாவுக்கரசர்க்கும் என்பது நன்கறியப்பட்டது.