உலகீர், நாட்கள் ஓடிவிட்டன ; ஆதலின், இயமன் தூதுவர் வருதற்கு முன்பு, வாள்போல இருபக்கமும் ஓடுகின்ற, அகன்ற கண்களையுடைய மகளிரது ஆசையாகிய வலையிற் சிக்காமல், இப்பொழுதே இறைவனை அடைந்து அவனுக்கு ஆளாகிப் பிழை மின்கள் ; அங்ஙனம் பிழைத்தற்கு அவனுக்கு இடமாவதுதான் யாது எனில், இங்குச் சொல்லப்பட்டு வரும் இத்திருக்கேதாரமே. அரையில் கீளுடன் பாம்பைக் கட்டியுள்ள அவனது இடம் ; ஆதலின், இதனைத் துதிமின்கள்.
` ஓடிய `, பின்னது முற்று, கண்ணோட்டமின்மையைக் குறிக்க, ` நமனார் ` என உயர்த்து அருளிச்செய்தார். ` அடிகட்கு ` எனப் பின்னர் வருதலின், வாளா, ` ஆளாய் ` என்றருளினார். ` அது `, பகுதிப்பொருள் விகுதி. ` அதுவே ` என்ற ஏகாரம், பிறவற்றினின்றும் பிரித்துக் கோடலின், பிரிநிலை. ` யாது ` என்பது எஞ்சிநின்றது. செய்யுளாகலின் இதுவே என்னும் சுட்டுப்பெயர் முன் வந்தது. ` இது ` என்றதன்கண் சுட்டு, ` இங்குச் சொல்லப்படுவது ` என்னும் பொருளது.