உலகீர், யோகதண்டத்தை ஊன்றி, ஒருவழிப் படுத்துகின்ற உயிர்ப்பினை உடைய யோகிகள், ` இவனே நம்மை ஆள்பவன் ` என்று, நள்ளிரவிலும், பகலிலும் மந்திர ஒலியோடு மலர்களைத் தூவி விரும்பப்படுகின்ற இறைவனது, அசைதலை யுடைய ஆண் யானையின் கூட்டம் தொடர்ந்துவந்து நின்று, பல சுனை களின் நீரை இறைத்து, செம்பொன்னினது பொடியை உதிர்க்கின்ற, ` திருக்கேதாரம் ` என்று சொல்லுமின்கள்.
` ஒருக்கு காலர்கள் ` என்பது, குறைந்து நின்றது. கால் - காற்று ; உயிர்ப்பு. ` தூவி ` என்ற வினையெச்சம், ` நம்பன் ` என்ற வினைக் குறிப்புப் பெயர் கொண்டது. இனி, ` தூவி ` என்றதனை, ` தூவ ` எனத் திரித்து, ` சிந்தும் ` என்றதனோடு முடித்தலுமாம். ஆதல் - தொடர்ந்து வருதல். இவ்வாறன்றி, ` களிறு ` என்பது, விரித்தலாயிற்று எனலுமாம். சுனைகளது பன்மையை, நீர்மேல் ஏற்றி அருளினார். பொன்வண்ணமான மலையில் சுனை நீர்களை வலிமைப்பட இறைத்த லால், பொற்பொடிகள் உதிர்வவாயின என்க. இத் திருப்பாடலுள் ` யோகிகள் தாமும் இரவும் பகலும் வணங்குவாராக, நீவிர் வாளா பொழுது கழிக்கின்றீர் ; இது பொருந்துவதோ ` என்று அருளியவாறு.