காவிரியின் கரையிலுள்ள கண்டியூர் வீரட்டானம், கடவூர் வீரட்டானம், விரும்பத்தக்க புகழினை உடைய அதிகை வீரட்டானம், வழுவூர் வீரட்டானம், பரப்பு மிக்க பறியலூர் வீரட்டானம், இடபத்தை ஊர்தியாக உடைய சிவபெருமானுக்குரிய இடமாகிய கோவலூர் வீரட்டானம், குறுக்கை வீரட்டானம், தலைமையும் மேன்மையுமுடைய விற்குடி வீரட்டானம் என்னும் வீரட்டானங்கள் எட்டினையும் முறைப்பட முன்னர் ஒருமுறை மொழிந்து பின்னர் அம்முறையே நாவில் பழகிப் பலகாலும் போற்றுவார்க்கு அருகில் இயமதூதர்கள் ஒருகால் செல்ல நேரிடின் இவர் சிவபெருமானுக்கு அடியர் என்று உடனே உணர்ந்து அவரைவிட்டு வெகு தொலைவு அகல நீங்குவர்.
இத்திருத்தாண்டகம், அட்ட வீரட்டங்களை வகுத்து அருளிச்செய்தது. அவை,
கண்டியூர் வீரட்டம், கடவூர் வீரட்டம், அதிகை வீரட்டம், வழுவை வீரட்டம், பறியலூர் வீரட்டம், கோவலூர் வீரட்டம், குறுக்கை வீரட்டம், விற்குடி வீரட்டம் என்பனவாதல் அறிக.
இவ்வீரட்டங்கள் முறையே, ` பிரமன் சிரத்தை அரிந்தது காலனை உதைத்தது, திரிபுரத்தை எரித்தது, யானையை உரித்தது, தக்கன் வேள்வியைத் தகர்த்தது, அந்தகாசுரனை அழித்தது, காமனை எரித்தது, சலந்தராசுரனை அழித்தது ` ஆகிய வீரச்செயல்களைச் சிவபிரான் செய்தருளிய இடங்களாகும். இதனை,
` பூமன் சிரங்கண்டி, அந்தகன் கோவல், புரம் அதிகை
மாமன் பறியல், சலந்தரன் விற்குடி, மாவழுவூர்,
காமன் குறுக்கை, யமன்கட வூர்இந்தக் காசினியில்
தேமன்னு கொன்றையுந் திங்களுஞ் சூடிதன் சேவகமே `
என்னும் பழஞ்செய்யுளான் அறிக. இவற்றுள், அதிகையும் கோவலும் நடுநாட்டில் உள்ளவை ; ஏனையவை சோழநாட்டில் உள்ளன. வழுவை, வைப்புத் தலம். வழுவை, ` வழுவூர் ` எனவும்படும்.
விற்குடியை, ` குடி ` என்றருளினார், அவ்வாறருளினும் ஈண்டு, இனிது பொருள் விளங்குமாகலின், ` கோத்திட்டை ` என்றதற்கு, விற்குடிக்கு அடையாகுமாற்றாற் பொருள்கொள்க ; என்னையெனின், ஈண்டு வீரட்டமாயினவற்றையன்றிப் பிற தலங்களை அருளிச்செய்தல் திருவுள்ளமன்றாகலின்.
காமரு சீர் - விரும்பத்தக்க புகழினையுடைய. நவின்றுரைத்தல் - பல்காலும் சொல்லுதல். ` முன்னர் ஒருகால் அறிந்து சொல்லி, பின்னர்ப் பலகாலும் சொல்லிப் போற்றுவார்க்கு ` என உரைக்க. ` உரைப்பார்க்கு அகல்வர் ` என இயையும். ` அகல்வர் ` என்றது, ` அகலுதலாகிய பயன் உளதாகும் ` என்னும் பொருளதாய், ` உரைப்பார்க்கு ` என்னும் நான்காவதற்கு முடிபாயிற்று. இனி, ` உரைப்பாரை ` என உருபுமயக்கமாக்கி உரைத்தலுமாம்.