திருவையாற்றில் கயிலைக் காட்சி கண்ட சுவாமிகள் திருநெய்த்தானம் , திருமழபாடி முதலிய தலங்களைப் பணிந்து , திருப்பூந்துருத்தி சேர்ந்து , பெருமானைப் பரிவோடு வணங்கி இருப்போந்திருவடிக்கீழ் நாம் என்னும் திருக்குறுந்தொகை முதலிய பல பதிகங்கள் அருளிச்செய்து திங்களும் ஞாயிறுந் தோயுந் திருமடம் அமைத்துத் திருத்தொண்டு செய்திருக்கும் நாள்களில் பாடியருளியவற்றுள் ஒன்று இத் திருப்பதிகம் . ( தி .12 திருநாவு . புரா . 390) குறிப்பு : இத்திருப்பதிகம் , மேலைத்திருப்பதிகத்துள் ஓதியருளியன வும் , பிறவுமாகிய தலங்களைப் பெயர் ஒற்றுமையால் வகைப்படுத்து அருளிச்செய்தது , அப்பெயர்கள்தாம் சத்தகோடி மகாமந்திரங்கள் போல ஒருபெற்றியனவான பல்வேறு முடிபுடையனவாய் இயைந்து , ஓதுவார் உள்ளத்தில் எளிதிற் பொருந்தி நின்று பயன் தருமாகலின் . சுவாமிகளும் இதனுள் பெரும்பாலும் அத்தலப் பெயர்களைச் சொல்லுதலையே வலியுறுத்தி யருளினார் . ` அடைவு , முறைமை ` என்பன ஒரு பொருட் சொற்கள் . முறைமையாவது ஒரு தன்மைப்பட்ட பொருள்கள் தொடர்ந்து வருதல் .