நீலகண்டனாய்க் காபாலக்கூத்து ஆடுபவனாய், கட்டங்கப்படையை ஏந்தியவனாய், நில உலகு விண் உலகு பாதாள உலகு இவற்றிற்கு ஒளி வழங்குபவனாய், வெள்ளிய பிறையைச் சூடியவனாய், நற்பண்புக்கு நிலைக்களனாய், தனக்கு நிகரில்லாத ஞான ஒளியை உடையவனாய், பார்வதி பாகனாய், தன்னை விரும்பும் அடியவர்களைத் தானும் விரும்பி, அவர்கள் வினைகளைப் போக்கும் சிறப்பான புகழ் ஒளியை உடையவனாய்த் திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.
கார்ஒளிய - கரிதாகிய ஒளியினை உடைய. ``கபாலி`` என்புழியும் இரண்டனுருபு விரிக்க. பாரின்கண் உள்ள ஒளி, ஞாயிறு திங்கள் விண்மீன்கள். பாதலத்தில் உள்ளது இருளாகலின், ``பாதாளனை`` என்பதற்கு, `அதன்கண் உள்ள இருளானவனை` என உரைக்க; `ஒளியும் இருளும் அவனே` என்றதற்கு இவ்வாறு ஓதியருளினார். ``பாதாளத் தானை`` என்பது பாடம் அன்று. `சூடிய` என்பதன் இறுதிநிலை தொகுத்தலாயிற்று. ``ஓர் பண்பு`` என்றது, சார்ந்தாரைக் காத்தலை. பேரொளி - எல்லா ஒளிகட்கும் முதலாய் உள்ள ஒளி. பேணுவார்- விரும்பிப் போற்றுவார். பேணி - குறிக் கொண்டு. சீர்ஒளி - (வினை தீர்க்கப்பெற்றார் புகழும்) புகழ்களை உடைய ஒளி; வினை, இருளோடொப்பது ஆகலின், அதனை நீக்குபவனை, ``ஒளி`` என்று அருளினார்.