கச்சி ஏகம்பத்தில் விரும்பி உறைகின்ற ஒளி வடிவினனே ! எம் பெருமானே ! அடியேனை உன் அடியவன் என்று ஏற்றுக் கொண்ட நீ இப்பொழுது அடியேனை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று கூறினால், நீ அடியேனை ஏற்றுக் கொண்டதற்கு இவ்வுலகம் முழுதும் சாட்சி என்பதனை நினைத்துப்பார். தன் உணர்வு இல்லாதவன் என்று அடியேனைப் பற்றி நின்ற ஐம்பொறிகளுக்கும் போக்கியப் பொருளாக வழங்கிப் பின் அந்தப் போக்கியப் பொருளா யிருந்த தன்மையிலிருந்து அடியேனை மீட்டுக் கொண்டாய் என்பதனை உளம் கொள்வாயாக.
கச்சி ஏகம்பம் மேய சுடர் வண்ணனே, என்னை ஏன்று கொண்டாய். எனை - என்னை. என்னை என்ற பாடம் தவறு. இனி எம்பெருமான், யாம் உன்னை ஏன்று கொண்டாம் அல்லம் எனில், இவ்வுலகம் எல்லாம் ( கொண்டதற்குச் ) சான்று கண்டாய். என்னை ஐவர் ஊன்றி நின்றார். தனியேன் என்று கருதினர் அவ்வைவரும். ஊன்றி நின்ற ஐவர்க்கும் என்னை ஒற்றிவைத்தாய். பின்னை அவ்வொற்றியெல்லாம் சோன்று கொண்டாய் - சுவன்று கொண்டாய். சூன்று என்பது சோன்று என மருவும். சூன்று - தோண்டி. கைப்பற்றி என்றதாம். சுவன்று என்றதன் மரூஉவுமாகும். சுவறல் - உறிஞ்சல். சோன்று - உறிஞ்சி. ஈண்டு அஃது ஒற்றியெல்லாம் மீட்டுக் கொண்டாய் என்ற கருத்ததாயிற்று. ஒற்றி நீக்கித் தனக்கே உரிமையாக்கிக் கொள்ளலாம். கச்சி - திருக்கச்சி. ஏகம்பம் - ஏகாம்பரம். மேய - மேவிய - எழுந்தருளிய. சுடர்வண்ணன் :- ` தீவண்ணன் `. என்னை ஏற்றுக் கொண்டாய் அடிமை என்று அதனால் நீ எம்பெருமான். நான் உன் அடியேன். இனி அல்லேன் எனல் இயலாது. அல்லம் எனில், இவ்வுலகம் எல்லாம் சான்று. ஏன்றுகொண்டது மெய்மை என்பதற்குச் சான்று. சூலை நோய் தீர்த்து ஆட்கொண்டமையும் சமணர் செய்த கொடுமையனைத்தும் தாக்காதவாறு காத்தமையும் ஏன்று கொண்டதற்குத் தக்க சான்றாம். அவ்வுண்மையை உலகம் எல்லாம் அறிந்துள.