பாம்பினை இடுப்பில் இறுகக் கட்டிப் பரவிய சடை முடியை உடைய பால் நிறத்தனே ! கச்சி ஏகம்பனே ! அடியார்கள் இரு கைகளையும் குவித்துக் கொண்டு திருநீற்றைப் பூசிக்கொண்டு அடியார் குழாத்துடன் கூடிப் பலநாள்களாகத் தரையில் புரண்டு உன் திருவடிகளே தங்களுக்கு அடைக்கலம் என்று கூறிவந்து அடைந்துள்ளனர். அவர்களுக்கு நீ இரங்கி அருளுவாயாக.
பால்வண்ணனே, ஏகம்பனே, அன்பர்கள் கூடிப் பூசிப் புரண்டு சரண் என்று ஏம்பலிப்பார் ( கள். அவர் ) கட்கு இரங்கு. பாம்பு அரை சேர்த்தி :- அரவக்கச்சு. படரும் சடை முடியையுடைய பால் வண்ணன். கூம்பல் - குவிதல். ( கூப்பல் - குவித்தல் ) கூம்பலைச் செய்த கரம். கரதலம் - கைத்தலம் ; கையகம். கைத்தலத்தைப் பெற்ற அன்பர்கள். அன்பே கூம்பலைச் செய்த கைகளைப் பெறுவித்தது. ` கூம்பலங் கைத்தலத்தன்பர் என்பூடுருகக் குனிக்கும் பாம்பலங்காரப் பரன் ` ( தி.8 திருக்கோவையார். 11). பல்நாள் - நெடுங்காலம். சாம்பர் - திருநீறு. தரை - நிலம். நின் தாள் சரண் - உன் திருவடியே புகல் ( தி.4 ப.96 பா.9.) ஏம் பலித்தல் - வருந்தி வந்தடைதல். ஏம்பல் - ஏங்குதல். ஏம்பல் என்னும் சொல்லினின்று ஏம்பலித்தல் என்பது தோன்றிற்று. கலக்கமுமாம். சாம்பல் - சாம்பர். ( பந்தல் - பந்தர் ). ஈற்றுப் போலி.