தீப் போன்ற ஒளியை உடைய சிவந்த சடைமுடியனாகிய ஏகம்பனே ! திருமால், பிரமன், இந்திரன், சந்திரன், சூரியன் முதலிய தேவர்கள் எல்லோரும் உரிய உன்னுடைய வெற்றி பொருந்திய கோயிலின் முதல்வாசலில் உன் காட்சியை விரும்பி வாடிக் கிடக்கின்றார்கள். முறுக்கேறிய சிவந்த சடைகளை உடைய, சிவானந்த போகத்தைத் துய்க்க விரும்பும் முனிவர்களும் உன் காட்சி கிட்டாமையால் தனிமைத் துன்பம் உறுகின்றார்கள். அவர்களுக்குக் காட்சி வழங்குவது பற்றி உன் திருவுள்ளம் யாதோ ? அருளுவாயாக.
தீயை ஒத்த செந்நிறத்தைக் கொண்ட சடையுடைய திருவேகம்பனே, நின்கடைத் தலையினராய் உணங்கிக் கிடந்தார் ; புலம்புகின்றார். ( நின் ) திருக்குறிப்பு என்னோ ? அரியும் அயனும் இந்திரனும் சந்திரனும் ஆதித்தினும் அமரரும் மற்றெல்லாரும் தாம் புகலடைதற்குரிய நின் கடைத்தலை. கொற்றக் கடைத்தலை. அரி - திருமால். அயன் - பிரமன். ( தி.4 ப.100 பா.9.) உரிமை - அபயம் அளித்தலில் ஆண்டவனுக்கும், அடைக்கலம் புகுதலில் அடிமைகட்கும் உண்டு. கொற்றக்கடை கற்றைச் சடையானுக்குரியதைக் குறித்ததுமாம். கடைத்தலை - தலைக்கடை. முதல் வாயிற் கடை. கடைத்தலையார் - புறங்கடையாராகி. ` புரங் கடந்தானடி காண்பான் புவி விண்டுபுக்கறியா திரங்கி டெந்தா யென்றிரப்பத்தன் னீரடிக் கென்னிரண்டு கரங்க டந்தானொன்று காட்டமற்றாங் கதுங் காட்டிடென்று வரங்கிடந்தான்றில்லை யம்பலமுன்றிலம் மாயவனே ` ( தி.8 திருக்கோவை. 86) உணங்கா - உணங்கி ; வற்றி. ` புனல்காலே உண்டியாய் அண்டவாணரும் பிறரும் வற்றி யாரும் நின்மலரடி காணா மன்ன `. ( தி.8 திருவாசகம் ) ` வான் வந்த தேவர்களும் மாலயனோ டிந்திரனும் கானின்று வற்றியும் புற்றெழுந்தும் காண்பரிய தான் ` ( ? ) ` உலவாக் காலம் தவம் எய்தி உறுப்பும் வெறுத்து இங்கு உனைக் காண்பான் பலமா முனிவர் நனி வாடப் பாவியேனைப் பணி கொண்டாய் ` ( ? ) ` தொழுகையர் அழுகையர் துவள்கையர் ` ( ? பா. 965. 1062). புரி - முறுக்கு. போகம் - சிவாநந்தபோகம். புலம்பு கின்றார் - வாடுகின்றார். எரிதரு சடை. செஞ்சடை :- தீயைப் போன்ற சிவந்த சடை. திருக்குறிப்பு - திரு வுள்ளக் கருத்து. என்னோ - யாதோ ?