திருவொற்றியூரா ! திருவாலவாயா ! திருவாரூரா ! கச்சிஏகம்பனே ! அடியேன் தாயாரினுடைய கருவிலே பொருந்திய நாள்முதலாக உன் திருவடியைக் காண்பதற்கு அடியேனுடைய உள்ளம் உருகுகிறது. அடியேனும் கிடந்து வருந்தி இளைத்துச் செயலற்று விட்டேன். அடியேனுக்கு உன்னைத் தவிர வேறு அடைக்கலம் இல்லை என்பதனையும் கண்டு அடியேன்மாட்டு இரக்கம் கொள்வாயாக.
கரு உற்ற நாள் முதல் ஆக உன் பாதமே காண்பதற்கு என் உள்ளமும் உருகிற்று ; நானும் கிடந்து அலந்து எய்த்து ஒழிந்தேன் ; ` கருவுற் றிருந்துன் கழலே நினைந்தேன் கருப்புவியில் ` ( தி.4 ப.96 பா.5.) ` கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன் ` ( தி.4 ப.94 பா.6.) ` கருவுற்ற காலத்தே என்னை ஆண்டு கழற்போது தந்தளித்த கள்வர் போலும் ` ( தி.6 ப.89 பா.9). கருவுற்ற நாள் முதலாக உன் பாதமே காண்பதற்கு உருகியது என் உள்ளம் ; கிடந்து அலைந்து எய்த் தொழிந்தது நான் என்றதால், ` நினையாது ஒருபோதும் இருந்தறியேன் ` ` இரவும் பகலும் எப்பொழுதும் பிரியாது வணங்குவன் ` ` சலம் பூவொடு தூபம் மறந்தறியேன் ` ` தமிழோடிசை பாடல் மறந்தறியேன் ` ` நலம் தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன் நாமம் என் நாவில் மறந்தறியேன் ` என்றவை முரணாகாமை உணர்க. அப்பர் எச்சமயம் புகினும் அவர் நாட்டம் எல்லாம் மெய்ப்பொருளுணர்ச்சியிலேயே ஆதலின், அப்பொருளை அவர் மறந்தாரல்லர். திருவொற்றியூரா, திருவால வாயா, திருவாரூரா என்று அம் மூன்றனையும் எண்ணிச் சிவபிரானை அழைத்தது யாது காரணத்தால் ? ஒருபற்றிலாமையும் கண்டிரங்குவாய் என்று கச்சியேகம்பனை இரந்தது , அம்மைக்குப் பேரின்ப வீடு தந்தருளியது குறித்துப்போலும். ` கடைக்கண்ணால் மங்கையையும் நோக்கா என் மேல் ஊனமது எல்லாம் ஒழித்தான் ` ( தி.6 ப.19 பா.4) ` பற்று அற்றோமே ` ( தி.6 ப.98 பா.3). ` ஒண்கழலாற்கு அல்லால் எப்பற்றும் இலன் ` ( தி.5 ப.97 பா.7). ` கொண்டீச்சுரவனார் பற்று அலால் ஒருபற்று மற்று இல்லையே ` ( தி.5 ப.70 பா.2). ` ஒற்றையேறு உடையான் அடியே அலால் பற்று ஒன்று இல்லிகள்மேற் படைபோகல் ` ( தி.5 ப.92 பா.10)