சொற்களால் தன் பெருமையைச் சொல்ல இயலாதவனாய், மனத்தாலும் உணர்வதற்கு அரியவனாய்த் தன்னை வணங்குபவர்களுடைய வினைகளைச் செயலற்றன ஆக்குவான் என்ற கருத்தொடு கையால் தொழுவதே அல்லாமல், எங்கள் ஏகம்பப் பெருமான் பிரமன், திருமால், ஆதித்தர் பன்னிருவர், வசுக்கள் எண்மர், உருத்திரர் பதினொருவர் முதலாகத் தன்னை உரத்த குரலில் துதிக்கும் தேவர்களுக்கும் உள்ளவாறு அறிய இயலாதவன் ஆவான்.
எங்கள் ஏகம்பன் உணர்வரியான். கைதொழுவது அல்லால் ( எவர்க்கும் ) அறியவொண்ணான். உரைக்கும் கழிந்து இங்கு உணர்வு அரியான் :- ` உரையுணர் விறந்து நின்றுணர்வதோருணர்வே ` ( தி.8 திருவா.). உள்குவார் வினையைக் கரைக்கும் - நினைப்பவர் வினையை ஒழிப்பான். என - என்று உறுதியாகக் கருதிக் கொண்டு. கைதொழுவது அல்லால் :- கையால் மலரிட்டுத் தொழுது வழிபடும் அதனால் அல்லாமல், மற்றெதனாலும் எவர்க்கும் அறிய ஒண்ணான். கதிரோர்கள் - ஆதித்தர்ப் பன்னிருவர். மலரவன் - நான்முகன். மால் - திருமால். எண் வசுக்கள் - வசுக்கள் எண்மர். ஏகாதசர்கள் - உருத்திரர் பதினொருவர். ( கந்தபுராணம். கணங்கள் செல்.9. கூர்மபுராணம் பலவ. 14. உரை ). அமிர்தம் - அமுதுண்டுஞ் சாம் விண்ணோர். முப் பத்துமூவர் தேவருள் பன்னிருவர் கதிரோர், பதினொருவர் உருத்திரர், எண்மர் வசுக்கள் இருவர் மருத்துவர் என்பர். அமிர்தம் மருந்து எனப்படும். படவே மருத்துவர் இருவரே இதில் அமிர்தர் எனப்பெற்றனர். முப்பத்துமுக்கோடி தேவர்க்கும் முப்பத்துமூவர் தலைவர் என்பர். ( பொருட்டொகை நிகண்டு 967). ` எங்கள் ஏகம்பன் ` என்றதாலும் பிற இடம் பலவற்றுள் ஏகம்பனைத் தனிச் சிறப்பிற் கூறுதலாலும் ஆசிரியர்க்கு ஆன்மார்த்த மூர்த்தி திருவேகம்பன் எனல் புலப்படும். திருவாலவாய்ச் சொக்கநாதன் என்பாருமுளர்.