கச்சி ஏகம்பனே ! உண்மையாக அம்புகளை வில்லில் சேர்த்துப் போரிட்ட அருச்சுனனோடு அக் காலத்தில் ஒரு வேடன் வடிவினனாய்ப் பொய்யாக அம்பை வில்லில் சேர்த்து அவனோடு போரிட்டு அவனுக்கு அம்புறத் தூணியை அருளிச் செய்தவனே ! முப்புரமும் தீக்கு இரையாகுமாறு கைகளால் அம்பு எய்தவனே ! உன்னுடைய வீரக் கழல்கள் அணிந்த திருவடிகளைப் போற்றாத கயவர்களுடைய உள்ளத்தில் மாயையால் உண்மையை மறைத்தல் செய்தவனே ! குய்யம் - வஞ்சனை. ( சிந்தாமணி -253)
கொடிமா மதில்சூழ் கச்சியே கம்பனே, விசயனொடு அன்று ஒரு வேடுவனாய் ஆவம் அருளிச் செய்தாய் ; புரம் எரிய எய்தாய். நுன் அடி போற்றாக் கயவர் நெஞ்சில் குய்யம் பெய்தாய். மெய்யம்பு - மெய்க்கணை. விசயன் - வெற்றியன் ; அருச்சுனன். அன்று - அக்காலத்தில். ( அன்றுதல் - பகைத்தல் ). பகைத்து. அன்று வேடுவன் - பகைத்த வேடன். பொய்யம்பு - பொய்க்கணை. எய்து - செலுத்தி. எய்து ஆவம் வினைத்தொகையுமாம். அம்புறை தூணி ( அம்புறாத் தூணி ). தவவேடனான அருச்சுனன் மெய்யாக அம்பு எய்யச் சிவவேடன் பொய்யாக அம்பு எய்து ஆவம் அருளிச் செய்தான் என்றலுமாம். பாசுபதம் அருளிய வரலாறுணர்க. கையம்பு - கைக்கணை, திருமாலாகிய அம்பு. நுன் - நின் என்றதன் மரூஉ. யான் ( தன்மை ), நீன் முன்னிலை, தான் படர்க்கை. யான் - யன் - என் என்றும் நீன் - நின் - நுன் என்றும் தான் - தன் என்றும் ஆயின. பிற்காலத்தில் நுன் என்பது உன் என்று வழங்கலாயிற்று. ` உன்னை யொழிய ஒருவரையும் நம்புகிலேன் ` என்றது பழம் பாடலன்று. ஒருகை முகன் தம்பி யாகக் கொண்ட ` நின்னுடைய ` காலத்தின் பின்னது ` போற்றாக் கயவர் ` என்று அப்பரும் சிவனடியே சிந்திக்கும் திருவை எய்தாத வரைக் கயவர் எனப் பழித்தலை அறிக. குய்யம் - இரகசியம். குஹ்யம் என்றதன் மரூஉ. மறைப்பு. கயவர் அறியாவாறு கடவுள் தன்னை ஒளித்து நிற்றலே குய்யம்பெய்தல் ஆம். கச்சிமதிலும் அம்மதிலின் கொடியும் தொல் புகழ் வாய்ந்தவை.