முத்தின் குவியலும் பளிங்கின் ஒளியும் செறிந்த பவளக் கொத்தினை ஒத்துச் செம்மேனியில் வெண்ணீறு அணிந்திருக்கும் கச்சி ஏகம்பனே ! யாது காரணம் பற்றி அடியேனை எப்பேர்ப்பட்ட அறிவில்லாத சமணரோடு உறவு கொள்ளச் செய்து குருடனுக்கு ஊமை வழிகாட்டுவித்தாற் போன்ற இழிவினைச் செய்துவிட்டாய் ?
முத்தின் திரள் - முத்துக் கொத்து. பளிங்கின் சோதி - பளிங்கொளி. பவளத் தொத்து - பவளத் திரள். ` மொய்பவளத்தொடு தரளம் துறையாருங் கடற் றோணிபுரத்தீசன் ` ( சம்பந்தர் ). பவளம் போல் மேனியிற் பால் வெண்ணீறு. ஏய்க்கும் - ஒத்திருக்கும். படியாய் - தன்மையனே. பொழில் - சோலை. கச்சியேகம்பனை, முத்தொளியும் பளிங்கொளியும் பவளத்தொளியும் ஒத்தொளிரும் இயல்பினனே, எத்தைக் கொண்டு எத்தகையேழை அமணோடு இசைவித்து என்னைக் கொத்தைக்கு மூங்கர் வழி காட்டு வித்தென்னக் கோகு செய்தாய் ? எஃது + ஐ = எஃதை, எத்தை, மரூஉ. அத்தை, இத்தை என்பனவும் அன்ன. பஃது பத்து என்றாயிற்று ` இத்தை ஆயும் அறிவு ` ( சித்தியார். சூ. 1). ` இத்தையும் அறியார் ` ( ?. சூ :- 69) ` எங்கித்தைக் கன்ம மெலாஞ் செய்தாலும் ` ( ?. சூ. 10:- 6) ` அத்தின் அளவறியாது ` ( ? பரபக்கம் . சௌ. ம. 3) ` எத்தைக் கொண்டு ` என்றது. அமணரொடு இசைவித்ததன் காரணத்தை வினாயது. ` எத்தகை யேழையமண் ` என்றது இசையுமிடத்தின் இழிவுணர்த்தியது. ` கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டு வித்தென்ன `. உவமம். கொத்தை - குருடு. மூங்கர் - ஊமையர். ` என்கண் கொத்தையாக்கினீர் ` ( சுந்தரர் ) ` கண்ணாற் கொத்தை ` ( தொல். சொல். வேற். மூன்றாவது. ` இன்னான் ` என்றதற்குக் காட்டு ) ஏழை - நுண்ணுணர்வின்மை. ` நுண்ணுணர்வின்மை வறுமை ` ( நாலடியார் ) ` கோகு ` குறுகு என்றதன் மரூஉ. இழிவு என்னும் பொருளது. தி.4 ப.52 பா.6. குறிப்பு. எனைக்கோகு செய்தாய். காட்டுவித்தென்ன - காட்டுவித்தாற்போல. காட்டுவித்தல் - காட்டச்செய்தல். மூங்கர் :- அமணர். வழி - கடவுள் நெறி.