மதில்களை உடைய காஞ்சி நகரில் உறைபவனே ! உன்னுடைய திருவோலக்க மண்டபத்தின் வாயிலைப் பொருந்தித் தேவலோக அரம்பையர்கள் ஒருவரை ஒருவர் நெருக்கிக் கொண்டு நிற்கிறார்கள். பழைய வானவர் கூட்டத்தினர் தமக்கு இடப்படும் திருத் தொண்டு யாது என்று அறிவதற்கு ஓலக்கத்தில் நெருக்கமாக நின்று கொண்டிருக்கிறார்கள். பிரமனும் திருமாலும் அம்மண்டபத்தில் வந்து நிற்கிறார்கள். இவ்விடத்தில் நிற்கின்ற அடியோங்கள் அவ்வளவு கூட்டம் நிரம்பிய உன் திருவோலக்க மண்டபத்தில் எங்ஙனம் வந்து உன்னைக் கண்டு வழிபடல் இயலும் ?
சூளைகள் - வேசிகள். அரம்பையர். உனது திருவோலக் கத்தில். உந்தி - தள்ளி. நடனம் புரிந்து எனலுமாம். தொல்லை - பழமை. வானவர் ஈட்டம் - தேவர் கூட்டம். வாய்தல் பற்றி - கடை வாயிலைப் பற்றிக்கொண்டு. துன்றி நின்றார் - நெருங்கி நின்றனர். பணி அறிவான் - கட்டளையை அறிந்து கொள்ளவேண்டி. அயனும் (- பிரமனும் ) திருமாலும் பணி அறிவான் வந்து நின்றார். மதிற் கச்சி :- கச்சி மதில் மிக்க பெருமையுடையது ; பலராலும் பல நூலிலும் புகழப்படுவது. இந்த நின்றோம் - இவ்விடத்தில் நின்ற யாம். இகரச் சுட்டின் திரிபு இந்த என்பது. அ - அந்த. உ - உந்த என்றதாலறிக. ` இந்தா ` என்பதற்கு மதுரைச் சங்கப் பதிப்பான தமிழ்ச் சொல்லகராதியில் உள்ள விளக்கத்தைக் காண்க. இந் நின்றோம் என்றதாம். இனி வந்து இறைஞ்சுவது எங்ஙனமோ ? எங்கனமோ என்றதன் மரூஉவே எங்ஙனம் என்பது. அங்ஙனம் முதலிய சுட்டுமுதற் சொற்களும் யாங்ஙனம் என்பதும் மரூஉ மொழியே. சிந்தாமணி. கந்தபுராணம் முதலியவற்றில் எதுகைத் தொடரில் அமைந்த பாக்களாலும் அவ் வுண்மையை அறியலாம்.