காஞ்சிபுரத்தில் ஒற்றை மாமர நிழலில் இருக்கும் பெருமானே ! அடியேனுடைய வாழ்க்கையின் முற்பகுதியில் சமணருடைய அறவுரைகளைப் பின்பற்றத்தக்கனவாக உள்ளத்தில் தெரிவித்துச் சமண சமய நூல்களை ஓதுமாறு செய்தாய். பிறகு அவர்களே என்னை அழிப்பதற்கு முயலுமாறு செய்தாய். கொடிய நோயினால் அடியேன் பிணிக்கப்பட்டிருந்த நிலையை நீக்கினாய். அடியேனுடைய உள்ளத்தில் கலந்து சமண சமயத்திலிருந்து சைவ சமயத்துக்குப் புகச் செய்தாய். உன்னுடைய திருத்தொண்டில் தவறு செய்வேனாயின் அடியேனைப் புளிய மரக்குச்சியால் அடித்துத் தண்டிப்பாயாக. நீ சர்வ சுதந்திரன் ஆதலின் நீ விரும்பியதை உகப்பதும் விரும்பாததை வெறுப்பதும் செய்வாய். அடியேனை, உன் திருவுள்ளம் எவ்வாறு உள்ளதோ அவ்வாறு நடத்துவாயாக.
ஓதுவித்தாய் - ஓதச்செய்தனை. முன் - இளமையில் ; அமண் சார்புறுமுன் எனலுமாம். அறவுரை - தருமசாத்திரம் ; சமண் சமயத்துத் தரும போதம். காட்டி - அறிவுறுத்தி. காதுவித்தாய் - கொல் வித்தாய். அமணரோடே சேர்வித்து, அவர் என்னைக் கொல்லுமாறு முயலச் செய்தாய் என்றவாறு.
கட்ட நோய் பிணி தீர்த்தாய் :- கட்டம் - துன்பம். கலந்தருளி - என் உயிர்க்குயிராய்த் தோன்றாத் துணையாய்க் கலந்தருளி, போது வித்தாய் - சமண் சமயத்தின் நீங்கிய சைவ சமயத்திற் புகச் செய்தாய். புகுது என்பதன் மரூஉவே போது என்பது. புகுதுக - போதுக. ` போ ` முதனிலையாயின், பொருள் வேறுபடல் அறிக.
நின் பணி - நின் திருவடித் தொண்டு. பிழைக்கின் - வழுவி னால். புளியம் வளாரால் - புளியமரத்தின் வளாரினால் . மோதுவிப்பாய் - மோதச் செய்வாய். ` வளாரினால் அடித்துத் தீய பந்தமும் இடுவர் ` ( சித்தியார் 2:- 15).
உகப்பாய் முனிவாய் - விரும்புவாய் வெறுப்பாய். ( விருப்பும் வெறுப்பும் கொள்வாய் ). ` காயத்திடுவாய் நின்னுடைய கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே ` ( தி.8 திருவாசகம் ). ` எல்லாம் பார்த்திடிற் பரிவே யாகும் இந்த நீர் முறைமை யன்றோ ஈசனார் முனிவும் என்றும் ` ( சித்தியார். 2:- 16) ` தேசநெறி நிலையாமை கண்டு அறங்கள் செய்த ` ` சரிதப் பகுதிக்கும் சமண் சமயம் புகுந்த சரிதப் பகுதிக்கும் அகச் சான்று இதிற் காண்க `. ( திரு. சி. கே. எஸ் உரை ). அறவுரை என்று நம்பிச் சென்ற அப்பர் கொன்றன்ன இன்னா செய்யப் பெற்றார் ஆதலின், ` அறவுரை காட்டிக் காதுவித்தாய் ` என்றார்.
உகப்பு - அமணர் செய்த கொடுமைகளின் பயன் சமண் புக்க பாவத்தின் கழுவாய் ஆதலின், அது திருவருளுவப்புணர்த்தும். முனிவு :- அக்கொடுமைகளின் ஏது ஆதலின் சிவனார் முனிவாயிற்று. அவன் முனிவின்றேல் அமணர் அது செய்ய வல்லரோ ? சூலை தந்ததும் முனிவே. துன்பங்களின் உய்ந்தது உகப்பு.