பிரமனும், திருமாலும் இறைவனின் அடிமுடி தேடியும் உணராவகை நெருப்புப்பிழம்பாய் ஓங்கி நின்றவர் சிவபெருமான். அவர் தம் சடைமுடியில் வெண்தாமரை இதழ் போன்ற பிறைச்சந்திரனையும், ஊமத்தை, கொன்றை ஆகியவற்றையும் அணிந்து விளங்குபவர். எம் இறைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது, மகரந்தப்பொடி நிறைந்த மல்லிகை, குருந்து, மாதவி, செருந்தி, குரவம், புன்னை என்ற மணம் கமழும் மலர்கள் நிறைந்த திருமாணிகுழி என்பதாம்.
நேடும் - தேடும். அயனோடு - பிரமனுடன். ( திருமாலும் ) உணரா ( த ) வகை - உணராதவிதம். நிமிர்ந்து - (` பாதாளம் ஏழினும் கீழ் ......... பாதமலர், போதார்புனை முடியும் எல்லாப் பொருள் முடிவே ` என்ன ஓங்கிய.) முடிமேல் - தலையில். ஏடு உலவு திங்கள் - ( வெண்தாமரை ) இதழ்போல் தவழ்கின்ற பிறைச்சந்திரனையும். மதம் - மணம் வீசுகின்ற, மத்தம் - பொன்னூமத்தையையும். இதழி - கொன்றை மாலையையும். சடை - சடையையும் உடைய, ( எம் ஈசன் இடம் ஆம்.) மாடு - பக்கங்களிலே. உலவு - படர்கின்ற.