எண்ணற்ற தேவர்கள் வணங்கிநின்று துதிசெய்யப் பேரருளுடையவனாய் எவரும் உண்ணுதற்கரிய நஞ்சை உண்டு உலகம் உய்யும்படி அருள்செய்த உத்தமனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது, பண்ணிசை பாடுகின்ற வண்டுகள், பல மலர்களையும் கிளறி, தேனருந்த, வளம்மிக்க பசுமை வாய்ந்த சோலைகளிடத்துச் சிறந்த பலாமரங்களின் இனிய கனிகளிலிருந்து தேனைச் சொரிந்து நறுமணம் கமழ்கின்ற திருமாணிகுழி என்பதாகும்.
எண் பெரிய - மிக்க செருக்கையுடைய. வானவர்கள் - தேவர்கள் ( நின்று துதிசெய்ய.) இறையே - சற்று. கருணை ஆய் - கிருபை உடையவராகி. உண்பு அரிய - எவரும் உண்ணுதற்கு அரிய. ( நஞ்சுதனை உண்டு ).
உலகு உய்ய அருள் உத்தமனிடம் - உலகம் உய்யும்படி அருள் புரிந்த உத்தமனாகிய சிவபெருமானது இடமாவது. பண்பயிலும் - இசையைப் பாடிக்கொண்டிருக்கும் ( வண்டு ). பல - பல மலர்களையும். கெண்டி - கிளறி. மது உண்டு - தேனைக் குடிக்க. நிறை - வளம் நிறைந்த.
பைம் பொழிலின் வாய் - பசிய சோலையினிடத்து. ஒண்பலவின் - சிறந்த பலா மரங்களின். இன்கனி - இனிய கனிகள். சொரிந்து - தேனைச் சொரிந்து. மணம் நாறு - மணங்கமழ்கின்ற ( உதவி மாணிகுழியே.)