மலரும் நிலையிலுள்ள மலர்களைக் கொண்டு சிவவழிபாடு செய்த பிரமசாரியான மார்க்கண்டேயனின் உயிரைக் கவரும் மனத்தோடு வந்த காலனின் உயிர் நீங்குமாறு காலால் உதைத்த நீலகண்டனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம், சந்தன மரங்கள், கரிய அகிற் கட்டைகள் இவற்றைச் சுமந்து மலையிலிருந்து விழுந்து, குளங்களில் பூத்துள்ள சிறந்த மலர்களையும் தள்ளிக் கொண்டு வரும் கெடிலநதியின் நீர் வயல்களில் பாய நறுமணம் கமழும் திருமாணிகுழி ஆகும்.
மந்தமலர்கொண்டு - நன்கு மலராத மலர்களைக் கொண்டு. வழிபாடுசெய்யும் - பூசனைபுரிந்த. மாணி - மார்க்கண்டேயரின். உயிர்வவ்வ மனமாய் - உயிரைக் கவரும் கருத்தோடு ( வந்த ஒரு காலன் உயிர் மாள ) உதைசெய்த - உதைத்த. மணிகண்டன் - நீலகண்டனாகிய சிவ பெருமானின் ( இடம் ஆம் ).
சந்தினோடு - சந்தனமரங்களோடு. கார் அகில் - கரிய அகிற் கட்டைகளையும் ( சுமந்து மலையினின்றும் இறங்கி ) தடம் மாமலர்கள் கொண்டு - தடாகங்களிற் பூத்த சிறந்த மலர்களையும் கொணர்ந்து. கெடிலம் உந்துபுனல் - திருக்கெடில நதியின் மோதும் தண்ணீர் வயல்பாயும் - வயலிற் பாய்வதனால் எய்திய. மணம்ஆர் - வாசனை பரவுகின்ற ( உதவிமாணிகுழி ).