இலக்குத் தவறாது செல்லும் கணைகளொடுகூடிய விற்படையை உடைய இராவணனை `ஆ' என்று அலறுமாறு அடர்த்தருளிய சிவபிரானுக்குரிய இடம், தாவிச்செல்லும் மான்கன்றுகளை உடையதும், குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்ததுமான வேணுபுரம் ஆகும்.
ஏவும்படை - குறிதவறாது வினையாற்றும் ஆயுதம். ஆ என்று அலற - அலறுவோர் ஒலிக் குறிப்புக்களுள் `ஆ' என்பது தலைமையானது. அஃது ஆஆ என அடுக்கியும் பின்`ஆவா' என்று உடம்படுமெய் பெற்றும் வரும். அதனைத் திருமுறைகளில் பல இடங்களில் காணலாம். அடர்த்தான் - தாக்கியவன். மறிமான் - மான்கன்று; மறிகளும் மான்களும் ஆம். பொழிலின் உள்ளே மானும் மேலே மதியமும் மேவும் என்க; மதியின் களங்கமுமாம்.