சிலந்தி நன்றாகக் கட்டிய வாய் நூல் வலையின் பரப்பை, இறைவர் திருவடியை வணங்கச் சென்ற யானை, `இது தூய்மையற்றது' என்று அழிக்க, `இன்று யானையின் கை சுழன்றதால் அந்த வலை அழிந்தது' என்று எண்ணிச், சிலந்தி மீண்டும் அந்த வலையை அமைக்க, அதனை மறுநாள் வலிமையுடைய யானை திரும்பவும் அழித்தது.
அநுசிதம் - தூய்மையற்றது. சிலந்தி தன் வாயால் இழைத்தமையின் அன்னதாயிற்று. கரம் சுலவிற்று - யானையின் துதிக்கை சுழற்றப்பட்டதால் அழிந்தது யானை அதனையும் அழிக்கும் பொழுது தன் துதிக்கையைச் சுழற்றி அழிக்கும். அவ்வியல்பே ஈண்டும் கூறப்பட்டது.