அப்பூங்காவில், வெண்ணாவல் மரத்தின் கீழ், முற்காலத்தில், திருமால் தேடிய உண்மை வடிவான மலர் போன்ற திருவடிகளையுடைய இறைவர் சிவலிங்கத் திருமேனி கொண்டு வெளிப்பட்டருள, பெருகிய தவத்தையுடைய ஒரு வெண்மையான யானை, ஒருநாள் தன் துதிக்கையால் அழகிய நீரை முகந்து அத் திருமேனிக்குத் திருமுழுக்காட்டி, நறுமணமுடைய மலர்க் கொத்துகளையும் அணிவித்து வழிபட, அவ்வன்பு மீதூர்ந்த நிலையில், கரிய குவளை போன்ற கழுத்தையுடைய இறைவரை நாள்தோறும் வழிபட்டு வந்தது.
மைப்பூங்குவளை - கருங்குவளை. திருக்கயிலையில் சிவகணத்தவராக வாழ்ந்தவர்களுள் மாலியவான், புட்பதந்தன் என்பார் இருவர். இவர்கள் தாம் மேற்கொண்டிருக்கும் சிவத் தொண்டில் தாம் தாமும் மேம்பட்டவர் என மாறுபட்டு, இறுதியாக மாலியவான் புட்பதந்தனை யானையாகுக என்றும், புட்பதந்தன் மாலியவானைச் சிலந்தியாகுக என்றும் சபித்துக் கொண்டனர். இருவரும் இறைவனின் ஆணையின் வண்ணம் யானையும் சிலந்தியுமாகத் தோன்றி இத் திருப்பதியில் தம்முள் மாறுபட்ட சிவத்தொண்டினை ஆற்றி வந்தனர். அந்நிலையில் அவர்கள் வழிபட்ட இடமே திருவானைக்கா ஆகும். இதனை வரும் பாடலால் அறியலாம். இங்குக் குறிக்கப்பெற்ற யானை புட்பதந்தன் ஆதலின் `மிக்க தவத்தோர் வெள்ளானை' என்றார் ஆசிரியர்.