மாலை அணிந்த வேலையுடைய கோச்செங்கட் சோழனார், இம்மண்ணுலகத்தில் முதன்மை பொருந்திய சிவபெரு மான் திருவருளால், தம்முன்னைப் பிறப்பின் நிலையை உணர்ந்த நினைவுடன் பிறந்து, அரசாள்பவராய், உயிர்கட்குத் தலைவரான இறைவர், தாம் மகிழ்வுடன் பொருந்தி வீற்றிருந்தருளும் பேரருள் நிறைந்த கோயில்கள் பலவற்றையும் பெருவிருப்பத்துடன் எடுப்பிக் கும் திருத்தொண்டை மேற்கொண்டார்.
கோதைவேல் ஆர் - மாலையையுடைய வேலைப் பொருந்திய. பெருந்தண் சிவாலயம் - மாடக்கோயில். முற்பிறவியில் யானை பகையாய் இருந்தமையின் இப்பிறவியில் அவ்வினங்களில் யாதொன்றும் ஏற இயலாதவாறு கோயில் எடுப்பித்தனன். இவ்வாறு அமைந்த கோயில்களை மாடக்கோயில் என்பர். இவ்வகையில் அமைந்த கோயில்கள் 78 ஆகும். `பெருங்கோயில் எழுபதினோடு எட்டும்`(தி.6 ப.71 பா.5) எனவரும் நாவரசர் திருவாக்கால் இவ் வுண்மை அறியப்படும். `எண்தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது எடுத்தனன்` என்பர் ஆழ்வாரும்.