துலையின் தட்டில் வைத்துப் புறாவின் எடைக்கு ஒப்பத் தன் உடலின் தசையை அறுத்து வைத்து, நிறுத்துக் கொடுத்த, பேரரசர் சிபியின் மரபில் வரும் சோழர்களுக்கு உரிமையாயுள்ள சோழ நாட்டில், அலைகளால் முத்துக்களையும், அகிலுடன் சந்தன மரத்தையும் கொண்டு வரும் அழகான நீரையுடைய காவிரியாற்றின் மணிகளை ஒதுக்கும் கரையில் பெருகும் சந்திர தீர்த்தத்தின் அருகில், குளிர்ச்சியையுடைய சோலைகளில் நிலையாக வளர்கின்ற மரங்கள் நெருங்கிய நீண்ட குளிர்ந்த காடு ஒன்று இருந்தது.
துலை - தராசு. சிபி என்பார் சோழர் குலத்தில் தோன்றிய பேரரசர் ஆவர். இவர் சீகாழியில் வேள்வி செய்த பொழுது, இறைவர் இவர்தம் பண்பை விளக்குதற்காகத் திருவுளம் கொண்ட வகையில், தீக்கடவுள் ஒருபுறாவாகவும், இந்திரன் அதனைத் துரத்தி வரும் பருந்தாகவும் வரப், புறா தன்பால் அடைக்கலம் புக, அது தன் இரையென உரிமை கொண்டாடிய பருந்துக்கு, அப்புறாவின் எடையளவு தன் உடலை ஈந்து அளித்தனன். இவ்வரலாறே ஈண்டுக் குறிக்கப்படுகிறது. சந்திர தீர்த்தம் - தக்கன் வேள்வியில், சந்திரன் தனக்குற்ற குறையைத் தீர்க்க, தீர்த்தம் உண்டாக்கி, வழிபட்டு நன்மை அடைந்தான். ஆதலில் அவன் பெயர் அமைந்த நீர்நிலை உருவாயிற்று.