`ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய்` எனத் தொடங்கித் `தோன்றாத் துணையாய் இருந்தனன் தன்னடியோங் கட்கே` என்று நிறைவுறும் அக்கருத்துக் கொண்ட பாடல் முதலாக, வானினின்று உலகில் தாழும் நீரையுடைய கங்கை வாழ்கின்ற சடையை உடைய இறைவரை, எவ்வுயிர்களுக்கும் சான்றாய் இருக் கும் ஒருவரை, குளிர்ந்த தமிழால் ஆன மாலைகளைக் கொண்டு சாத்தினார்.
நாவரசர் இதுபொழுது அருளியது `ஈன்றாளுமாய்` எனத் தொடங்கும் பதிகமாகும் (தி.4 ப.94). இப்பதிகத்துவரும் முதல்பாடலின் முதலடியையும் நான்காம் அடியையும் இயைத்துக் கூறினார், அப்பாடல் பொருண்மை அவ்வாறாக அமைதலின். உரை சேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனி பேதங்களையும் படைத்து அவற்றின் உயிர்க்குயிராய் இறைவன் நிற்றலின் `எவ்வுயிர்க் கும் சான்றாம் ஒருவன்` என்றார். `எங்கும் உளன் ஒருவன் காணுங் கொல் என்று அஞ்சி அங்கம் குலைவது அறிவு` (குமர-நீதிநெறி.94) என்பர் குமரகுருபர அடிகளும். ஈண்டும் தண் தமிழ் மாலைகள் என்றது, பாடற் பன்மை நோக்கியாம். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.