Get Flash to see this player.
தொகை `திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்` (தி.7 ப.39 பா.4) தொகை , பொ-ரை: நிலைபெற்ற திருவாகிய செம்பொருளாம் சிவபெருமானையே உறுதியாகப் பற்றி வாழ்ந்த திருநாவுக்கரசு நாயனார் தம் அடியார்க்கும் அடியேன் வகை நற்றவன் நல்லூர்ச் சிவன்திருப் பாதந்தன் சென்னிவைக்கப் பெற்றவன் மற்றப் பிறப்பற வீரட்டர் பெய்கழல்தாள் உற்றவன் உற்ற விடமடை யாரிட வொள்ளமுதாத் துற்றவன் ஆமூரில் நாவுக்கர செனுந் தூமணியே. -தி.11 திருத்தொண்டர் திருவந்தாதி.24 வகை (24), பொ-ரை: நல்ல தவம் உடையவர்; திருநல்லூர்ப் பெருமானின் திருவடிகளைத் தம்தலை மேல் சூட்டப்பெற்றவர்; இப்பிறவி நீங்கும் பொருட்டுத் திருவதிகை வீரட்டப் பெருமானுடைய வீரக்கழல் அணிந்த திருவடிகளை முன்னரே அடைந்தவர்; சமணர்கள் கொடுத்த நஞ்சைத் திருவமுதாக உண்டவர்; திருஆமூரில் தோன்றி யவர், இவ்வரிய பெருந்தகையார், இறைவனால் நாவுக்கரசு எனும் பெயர் சூட்டப்பட்ட நன்மணியாவர். மணியினை மாமறைக் காட்டு மருந்தினை வண்மொழியால் திணியன நீள்கத வந்திறப் பித்தன தென்கடலிற் பிணியன கல்மிதப் பித்தன சைவப் பெருநெறிக்கே அணியன நாவுக் கரையர் பிரான்தன் அருந்தமிழே. -தி.11 திருத்தொண்டத் திருவந்தாதி. 25 வகை (25), பொ-ரை: நாவரசருடைய தெய்வத் தமிழே, திருமறைக்காட்டில் மணியாயும், மருந்தாகியும் வீற்றிருந்தருளும் பெருமானை, பரவிய பதிகத்தால், வலிய பெரிய திருக்கோவில் கதவினைத் திறக்கச் செய்தன. தெளிந்த கடலில் கட்டப்பட்ட கல்லை மிதக்கச் செய்தன. சைவச் செந்நெறிக்கே அணியாகத் திகழ்வன.
Get the Flash Player to see this player.