பிறவிக் கடலினின்றும் உயிர்களை எடுத்து உய்யக் கொள்ளும் இத்திருத்தொண்டர் புராணம், இனிய தமிழ்ப் பாடல்களாக நிறைவுற்று, இந்நிலவுலகில் மேதக்க அருளை வழங்கிட, ஐந்து திருக் கைகளையும், தாழ்ந்த செவிகளையும், நீண்ட முடியினையும் உடைய மதம்பொருந்திய யானைமுகக் கடவுளை மனத்தில் இருத்தி வணங் குவாம்.
எடுக்கும் மாக்கதை - பிறவிக் கடலினின்றும் எடுக்கும் இப் பெருங்கதை. `என்னை இப்பவத்தில் சேரா வகையெடுத்து` (சித்தி. -பாயிரம் 3) என வருவதும் காண்க. இனி எடுத்துச் சொல்லப்படு கின்ற இம்மாக்கதை எனினும் அமையும். மாக்கதை - பெரியபுராணம். இப்பெயருடன் இந்நூல் வழங்குதற்கு இத்தொடரே காரணமாகும். நடக்கும் - நடத்தற் பொருட்டு: அஃதாவது நிறைவேறுதற் பொருட்டு. மூத்த பிள்ளையார் திருக்கரங்கள் ஐந்தனுள், ஒன்று மோதகம் ஏந்தி நிற்கும். ஒன்று இரத்தினக் கலசம் ஏந்தி நிற்கும். இது தம் தாய் தந்தையர்க்குக் காட்டும் உபசாரத்திற்கு ஆகும். நிறை குடம் காட்டி வரவேற்கும் வழக்கை நினைக. மற்றொன்று கயாசுரனை அழித்தற்குத் தம் கொம்பினை ஒடித்து நிற்கும். ஏனைய இரண்டனுள் ஒன்று கயிற்றையும், மற்றொன்று தோட்டியையும் கொண்டு நிற்கும். உயிர்கட்குற்ற தீங்கை நீக்குதற்கு இவ்விரு கைகளும் உதவுகின்றன. கடம் - மதநீர். யானை என்னும் பொதுமை பற்றி இவ்வாறு கூறப்பட்டது.