தந்தையாராகிய சடையனார் தம் ஒப்பற்ற திருமகனாருக்கு, ஆதிசைவ குலத்தில், தம் அரும்பெரும் மரபிற்கு ஏற்ப வழிவழியாக வாழ்ந்து வரும் சிறப்புடைய புத்தூரில் வாழும் சடங்கவி சிவாசாரியாரிடத்துச் சிவந்த திருமகளை ஒப்பத் தோன்றி யிருக்கும் மகளாரைத் திருமணம் செய்தற்குத் தக்கோர் வாயிலாகக் கேட்டு அனுப்பினார்.
சடங்கவி எனப் பாடலில் இருப்பினும், சடங்கவியார் எனக் கோடலே நம் மரபுக்குப் பொருந்துவதாகும். அதற்கு ஏற்பவே, பின்னும் முகத்தர், இசைந்தார் எனக் கொள்ளப்பெற்றன. சிவக்கவிமணியாரும் (பெரிய. பு. உரை) இங்ஙனமே பொருள் உரைத்துள்ளார்.