பெருமை மிகுந்த அந்நரசிங்க முனையரின் பேரன்புக்குரிய திருமகனாராய் வாழ்ந்து வருவதோடு, அதன் பின்னும் தம்முடைய ஆதிசைவ மரபில் கொண்டு ஒழுகத் தகும் ஒழுக்கங்களையும் கொண்டு வளர்ந்து, முந்நூல் அணியும் காலம் வர, அதனையும் அம்மரபு வழி நின்று ஏற்று, எண்ணிறந்த மறை முதலாய நூல்களையும் கற்றுத் தெளிந்து, செல்வம் தழைய நிற்கும் சிறப்பைப் பெற்றுச் சிறப்புமிக்க திருமணப் பருவத்தை அடைந்தார்.
அரசர் மரபில் வளர்ந்தும், ஆதி சைவ நெறியை விடாது பின்பற்றி வளரவும், வளர்க்கப்பட்டதும் ஆய அருமை எண்ணற் குரியதாம். முந்நூல் அணிதலை உபநயனம் என்பர். உபநயனம் - மேலும் பெறும்கண். முன்னரே உள்ள இருகண்களுடன், புருவ நடுவில் இறைவனை இடையறாது எண்ணுவதால் திறக்கப்படும் கண் இதுவாகும். காயத்திரி மந்திரத்தையருளி இம்முந்நூலையும் அணிவர்.
காயத்திரி - வினைவிளைவையறுத்து மேலும் பிறப்பில்லா தாக்குவது. இம் மந்திரத்தால் குறிக்கப் பெறுபவர் சிவபெரு மானேயாவர்.