உமையம்மையாரை ஒரு கூற்றில் கொண்ட சிவபெருமானுக்கு வழிவழியாக அகத்தடிமை செய்து ஒழுகும் ஆதி சைவர் குலத்தில் தோன்றிய மேம்பட்ட சடையனாருக்குக், குற்றமற்ற கற்பினை உடைய வாழ்க்கைத் துணைவியாராகிய இசைஞானியா ரிடத்து, உலகிலுள்ள உயிர்கள் யாவும் தீநெறியினின்றும் நீங்கி நன்னெறி அடைய ஒரு பெருமகனார் தோன்றியருளினார்.
தாய் தந்தை ஆகிய இருவர்தம் மரபில் வந்த முன்னோர்களும் இறைவற்கு அடிமை செய்து வந்தவர்கள் ஆதலின் வழியடிமை என்னாது `வழிவழியடிமை` என்றார். `இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி` (தி.11 திருமுரு. வரி.178) என நக்கீரர் சிறப்பிப்பதும் காண்க. `மழவிடை யாற்கு வழிவழி ஆளாய்` (தி.9 ப.29 பா. 11) என்னும் திருப்பல்லாண்டும். இறைவனை அகத்தும் புறத்தும் வைத்து வழிபடும் உரிமையும் தகுதியும் உடையவர்கள் ஆதிசைவ மரபினர் ஆவர். திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவரை நாள் வழிபாட்டிலும், சிறப்பு வழிபாட்டிலும், தீண்டி வழிபடும்பேறும் இவர்கட்குண்டு. அம்மரபில் தோன்றியவர் சடையனார் என்பார் `மேம்படு சடையனார்` என்றார். ஏதம் இல் கற்பு - குற்றம் தீர்ந்த கற்பு; அறக்கற்பு. `மறுவில் கற்பின் வாள்நுதல் கணவன்` (தி.11 திருமுரு. வரி 6) எனவரும் நக்கீரர் கூற்றும் காண்க. கமலாபுரத்தில் (திருவாரூரில்) சிவகோதம கோத்திரத்தில் ஞான சிவாசாரியார் குடும்பத்தில் தோன்றியவர் இவர் என்பது கல்வெட்டுக்களால் அறியப் படுவ தொன்றாம். (73 of 95. S.I.I. Vol & Vol 11. p. 153)