நிறைந்த பல வளங்களால் மேம்பட்ட பெருமை மிகுந்த அத்திருமுனைப்பாடி நாட்டில், அரிய மறைகளின் பிழிவாக விளங்கும் சைவநெறி மேன்மேலும் செழிக்க, சிவபெருமானின் திருவருளினால் நம்பியாரூரர் தோன்றுதற்கு இடனாக விளங்கும் மேதக்க தவம் நிறைந்ததும், மேம்பட்ட நலங்களை உடையதும் ஆகிய திருப்பதி, மெய்ந்நெறியினின்றும் வழுவாத மறையவர்கள் மிக்கிருக் கும் திருநாவலூர் என்னும் திருப்பதியாகும்.
ஒரு நாட்டின் வளம் அங்குள்ள நிலத்தானும், நீரானும் மட்டும் அமைவதன்று; அங்குள்ள பெருமக்களாலும் அமைவதாகும். `எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே` (புறநா. 187), `ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழுமூரே` (புறநா. 191) என்றற் றொடக்கத்தனவாய கூற்றுக்களையும் காண்க. இவ்வகையில் திருமுறை ஆசிரியராகிய இவரும், நாவரசரும் தோன்றியதும், சந்தான ஆசிரியர்களில் மெய்கண்டார், அருணந்தி சிவாசாரியார் ஆகிய இருவரும் தோன்றியதும் ஆன பெருமை இந்நாட்டிற்கு உண்டு. நாவலூரர் தோன்றவும், மறை வல்லுநர்கள் வாழவும் இடனாக விளங்குவது திருநாவலூர் என இப்பாடல் இருவகையானும் சிறப்பித் துள்ளமை அறியத்தக்கதாம். அருமறைச் சைவம் - அரிய மறைகளின் முடிபாக விளங்கும் சைவம்; `வேதப் பயனாம் சைவமும்` (தி.12 பு.20 பா.9) எனப் பின்னர் வருதலும் காண்க. அன்று, ஏ என்பன அசை நிலைகள்.