எவ்வுயிர்களானும் தம்மறிவால் உணர்தற்கும் ஓதுதற்கும் அரியவனாயும், அங்ஙனம்அரியவனாயினும் தன்னை அடைந்து உய்ய வேண்டும் எனும் பெருங்கருணையினால் பிறைச் சந்திரன் உலாவுதற்கும், கங்கையைத் தாங்குதற்கும் இடனாயுள்ள திருச்சடையை உடையனாயும், அளவிறந்த ஒளியுரு உடையனாயும், தில்லைச்சிற்றம்பலத்தே திருக்கூத்து ஆடுகின்றவனாயும் உள்ள கூத்தப் பெருமானின், அன்பர்கள் உள்ளத்தில் என்றும் மலர்ந்து நிற்கின்ற சிலம்பணிந்த திருவடிகளை வாழ்த்தி வணக்கம் செய்வாம்.
உலகு என்பது ஈண்டு உயிர்களைக்குறித்தது; இடவாகு பெயர். உணர்தல் - மனத்தின் தொழில். ஓதல் - மொழியின் தொழில். இவ்விரண்டானும் அறிதற்கரியன் எனவே மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன் ஆதல் விளங்குகின்றது. நிலவை அணிந்தது தனி உயிர் காக்கும் தகைமையையும், கங்கையைத் தரித்தது பல்லுயிர் களையும் காக்கும் பண்பையும் விளக்குகின்றன. அலகில் சோதி - அள விறந்த ஒளியுரு. மலர் சிலம்படி - மலர்ந்த சிலம்படி, மலர்கின்ற சிலம் படி, மலரும் சிலம்படி என விரியும்: வினைத்தொகை. அன்பால் நினைவார்தம் உள்ளக் கமலத்தின் கண்ணே அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேரும் இயல்பு தோன்ற இவ்வாறு கூறினார். அரியவனாயும், வேணியனாயும், சோதியனாயும் உள்ள அம்பலத்தாடுவானின் மலர் சிலம்படியை வாழ்த்தி வணங்குவாம் எனக் கூட்டி உரைக்க. சிவ ஞானத்தால் உணர்ந்தும் எடுத்தோதுதற்கரியவர் என உரை காண்பர் ஆறுமுகத் தம்பிரான் சுவாமிகள் (பெரியபு.-உரை). `உணர்ந்தார்க்கு உணர்வரியோன்` எனவரும் திருக்கோவையாரின் தொடருக்கு, `ஒருகால் தன்னை உணர்ந்தவர்கட்குப் பின் உணர்தற்குக் கருவியாகிய சித்த விருத்தியும் ஒடுங்குதலால் மீட்டும் உணர்வரி யோன்` என முதற்கண் உரைத்துப், பின்னர்த் `தவத்தானும், தியானத் தானும் எல்லாப் பொருள்களையும் உணர்ந்தவர்க்கும் உணர்வரி யோன் எனினும் அமையும்` என்றும் உரைத்தார் பேராசிரியர் (திருக்கோவையார் உரை). நினைப்பவர் மனம் கோயிலாகக் கொண் டவன் என்பது விளங்க நின்றது.