மணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருக்கானூரில் மேவிய பவளம் போன்ற நிறத்தினை உடைய பரமர், தமிழ்போன்று இனிக்கும் இனிய வார்த்தைகளைப் பேசி, தாளத்தோடு வீணையை மீட்டி, முழவம் மொந்தை ஆகிய துணைக் கருவிகளுடன் கூடிய பாடல்களைப் பாடி எனது இல்லத்தை அடைந்து, அதனை விட்டுப் பெயராதவராய் எனக்குக் குமிழம்பூப் போன்ற பசலை நிறத்தை அளித்து என் அழகைக் கொண்டு சென்றார்.
இவர் பல வாத்தியங்கள் முழங்கப் பாடிக்கொண்டும் இனிமையாகப் பேசிக்கொண்டும் வந்தார்; வந்தவர் இடம் விட்டுப் பெயராராய் என்னுடைய அழகைக் கவர்ந்து கொண்டு குமிழம்பூ நிறத்தைக் கொடுத்துவிட்டார் என்கின்றது. தமிழின் நீர்மை - இனிமை. கோலம் - அழகு. பவளவண்ணரே என்றாள், அவர்மேனியின் நிறத்தில் ஈடுபட்டு.