காந்தள் செடிகள் தழைத்து வளர்ந்து பூத்து மணம் பரப்பும் கானூரில் மேவிய சந்தனமும் திருநீறும் பூசிய இறைவர், தடுக்க முடியாதபடி பெருகிவந்த கங்கையினது வெள்ளம் மூழ்கி மறைந்துபோன நீண்ட சடைமுடிமேல் பொருந்த வளைந்த பிறை மதியோடு, பாம்பு, கொன்றைமலர் ஆகியன அழகுதர வீதியுலா வந்து அழகிய மென் சொற்களால் இன்பம் தந்த மைந்தர் ஆவார்.
கானூர்மேவிய செல்வர், கங்கையினையுடைய சடையின் மேல் பிறையும் கொன்றையும் பொருந்த, இன்சொல்லால் இன்பம் பயக்கும் இறைவர்போலாம் என்கின்றது. நீந்தலாகாவெள்ளம் மூழ்கும் நீள்சடை - நீந்தமுடியாத அளவு வேகத்தோடு வந்த கங்கை வெள்ளம் மூழ்கி மறைந்துபோன சடை. ஏய்ந்த - பொருந்திய. போந்த - தன்வாயினின்றும் வந்த. மென்சொல் - மெல்லிய சொற்களால்; என்றது நயந்து பின்னிற்றலால் இன்பந்தந்த தலைவர் என்றவாறு. இது வழிநாட் புணர்ச்சிக்கண் பிரிந்த தலைமகன் காலம் நீட்டிக்க, கவன்றதலைவி தலைநாளில் மென்சொல்லால் இன்பம் பயந்தமை எண்ணி நைகின்ற நிலையை அறிவிக்கின்றது.