திருநாவுக்கரசு சுவாமிகள் திருவாரூரிலே தேவாசிரியன் முன் இறைஞ்சித் திருமாளிகை வாயிலுட் புகுந்து மாமணிப் புற்றுகந்தாரைநேர்கண்டுகொண்டார்; தொழுதார்; விழுந்தார்; புளகாங்கிதரானார்; எழுந்தார்; அன்புகூர்ந்தார்; கண்கள் தண்துளிமாரி பொழியத் திருமூலட்டானரைப் போற்றினார்; துதித்தார்; உருகினார்; மணிக்கோயிலை வலம் வந்து இறைஞ்சி அன்பு பூண்ட மனத்தொடு வாயிற்புறத்துச் சேர்ந்தார்; திருப் பதிகம் பாடினார்; அதில் சமண்சார்ந்த தீங்கு நினைந்து கவன்றார்; `மார்பாரப் பொழி கண்ணீர் மழைவாருந் திருவடிவும் மதுர வாக்கில் சேர்வு ஆகும் திருவாயின் தீந்தமிழின் மாலைகளும் செம்பொற்றாளே சார்வான திருமனமும் உழவாரத் தனிப்படை யும் தாமும் ஆகிப் பார்வாழத் திருவீதிப் பணிசெய்து பணிந்து ஏத்திப் பரவிச் செல்வார்` ஆனார். அப்பொழுது நீடுபுகழ்த் திரு வாரூர் நிலவுமணிப் புற்றிடங்கொண்ட நிருத்தரை அன்பொடு காலங்களில் அணைந்து கும்பிட்டுப் பாடியருளிய கோதில் வாய்மைத் திருப்பதிகம் பலவற்றுள் ஒன்று இது.
Get the Flash Player to see this player.
Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.