பன்னிரு முழ உயரமுள்ள யானை ஒன்று பகலும், இரவுமாய் மாறிவரும் காலச் சுழலில் அகப்பட்டுள்ளது. அஃது அவ்வாறிருத்தலை அதன் பாகன் தனது பேதைமையால் அறிந்தானில்லை. அதனை அவன் அறிவானாயின், அந்த யானை அச் சுழலைக் கடந்து நின்று, அவனுக்கு உதவுவதாகும்.
ஆனை, மூச்சுக் காற்று. வசப்படுத்துதற்கு அருமை நோக்கி, அதனை யானையாக அருளிச்செய்தார். `சிறந்த யானை ஏழுயர் யானை\\' என்பது யானை நூல் மரபு. அதனோடொப்ப, `பன்னிரண்டுயர்ந்த யானை\\' என்றார். `முழம்\\' எனவும், `உயர்ந்தது\\' எனவும் கூறாது, பொதுமையில் நயம்பட `பன்னிரண்டு\\' என்றது, மேல், `அங்குலம்\\' என்றதனோடும், \\"முன்னோக்கி ஓடும்\\" எனக் கூறியவற்றோடும் மாறுகொள்ளாமைப் பொருட்டு. \\"பகல் இரவு\\" என்றது, பகல், இரவு, நாள், பக்கம், திங்கள், யாண்டு எனப் பலவாற்றாற் காலம் கழிதலைக் குறித்தவாறு. `பிராணாயாமம் செய்யின், அங்ஙனம் கழிதலாற் கெடுவதொன்றில்லை\\' என்பதாம். பாகன் - உயிர்.
இதனால், `பிராணாயாமத்தில் மனவெழுச்சி செல்லாமை அறியாமையினாலாம்\\' என்பது கூறப்பட்டது.
`பிராணாயாமத்துள் பூரகம், கும்பகம், இரேசகம் மூன்றும் தனித்தனியானவை அல்ல; மூன்றும் யாண்டும் கூடி நிற்பனவே; அவற்றுள் \\"பூரகம், கும்பகம், இரேசகம்\\" என்னும் முறையால் செய்யப்படுவது இரேசகம். \\"பூரகம், இரேசகம், கும்பகம் மறித்தும் பூரகம்\\" என்னும் முறையால் செய்யப்படுவது பூரகம். \\"பூரகம், இரேசகம், கும்பகம்\\" என்னும் முறையால் செய்யப்படுவது கும்பகம். எனவே, இவை இறுதியில் நிகழ்வனவற்றால் பூரகம் முதலிய பெயர்களைப் பெற்றன\\' எனக்கொண்டு, அவ்வாறே, \\"ஏறுதல் பூரகம், மேல்கீழ் நடுப்பக்கம், வாமத்தில் ஈரெட்டு\\" என்னும் திரு மந்திரங்களை முறையே `இரேசகம், பூரகம், கும்பகம்\\' என்பவற்றைக் கூறுவனவாக அரசஞ் சண்முகனார் தமது பாயிர விருத்தி (பக். 45,46) யுள் எழுதியுள்ளார். இன்னும் அவர் பிராணாயாமம் `இம்மூன்றல்லாது, `நிலை\\' என்ற நான்காவதும் உடையது\\' எனக் கொண்டு, \\"இட்டதவ் வீடு கூடம் எடுத்து, பன்னிரண் டானைக்கு\\" என்னும் திருமந்திரங்கள் அதனையே கூறுகின்றன என்கின்றார். ஆயினும், \\"நிலை\\" என்பதைக் குறிக்கும் வடமொழிப் பெயர் இது என்பதனை அவர் கூறவில்லை. `தாபித்தல்\\' என்ற ஒருசொல் திருமந்திரத்திற் காணப்படுகின்றது; அதனையே கருதினாரோ, என்னவோ! இனி, கும்பகம் என்பது காற்றை உள்ளே நிறுத்துதலன்று; வெளியே நிறுத்துதல் என்கின்றார் விவேகானந்த அடிகள். இவையெல்லாம் முன்னை மரபிற்கு வேறானவையாய் உள்ளன.