மூன்றாம் தந்திரம் - 5. பிராணாயாமம்  


பண் :

பாடல் எண் : 1

ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்
உய்யக்கொண் டேறுங் குதிரைமற் றொன்றுண்டு
மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாதுபோய்ப்
பொய்யரைத் துள்ளி விழுத்திடுந் தானே. 

பொழிப்புரை :

ஐவர் பணியாளர்க்குத் தலைவன் ஒருவன்; அவனே அவ்வூர்க்கும் தலைவன். அவன், தான் நலன் அடைதற் பொருட்டுத் தனதாகக் கொண்டு ஏறி உலாவுகின்ற குதிரை ஒன்று உண்டு. அது வல்லார்க்கு அடங்கிப் பணிசெய்யும்; மாட்டார்க்கு அடங்காது குதித்து அவரைக் கீழே தள்ளிவிட்டு ஓடிவிடும்.

குறிப்புரை :

`ஆகவே, அதனை அடக்க வல்லராதலைப் பயிலுதலே ஆண்மையுடையோர்க்கு அழகாகும்` என்பது குறிப்பெச்சம்.
இத்திருமந்திரம் பிசிச் செய்யுள். இதனை, `ஐவர், ஐம் பொறிகள்; நாயகன்; உயிர்க்கிழவன்; ஊர், ஐம்பொறியும் தங்கி யுள்ள உடம்பு; குதிரை பிராணவாயு; துள்ளி விழுத்தல், வாழ்நாள் முடிவில் அவரறியாதவாறு விட்டு நீங்குதல்` என விடுத்துக் கண்டுகொள்க. ``மெய்யர், பொய்யர்`` என்பன, வன்மை மென்மை பற்றி வந்தன. `பொய்யரை வீழ்த்திடும்` எனவே, `மெய்யரை வீழ்த்தாது செல்லும்` என்பது பட்டு, மெய்யர்க்கு வாழ்நாள் நெடிது செல்லுதலும், அவர் விடுத்து நீக்க நீங்குதலும் உளவாதலை உணர்த்தி நிற்கும்.
இதனால், பிராணாயாமம் செய்வார் மக்களுடம்பை நெடிது நிறுத்திப் பயனடைதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஆரியன் அல்லன் குதிரை இரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை
கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படுந் தானே.

பொழிப்புரை :

எல்லா மக்களிடத்தும் ``நல்லன்`` என்றும், ``அல்லன்`` என்றும் இரண்டு குதிரைகள் உள்ளன. அவைகளைக் கடிவாளம் இட்டு அடக்குதற்குரிய சூழ்ச்சியை அறிகின்றவர் அவருள் ஒருவரும் இல்லை. அறிவுத் தலைவனாகிய குருவின் அருளால் அச்சூழ்ச்சியை அறிந்து அதன்வழி அடக்கினால், அக்குதிரைகள் இரண்டும் அடங்குவனவாம்.

குறிப்புரை :

``ஆரியன்`` என்றது, `நல்லன்` என்னும் பொருளது. ``ஆரியன், அல்லன் என்பன`` இயற்பெயர்த் தன்மையவாய் விரவி, அஃறிணைக்கண் வந்தன. மேல், ``குதிரை ஒன்று உண்டு`` என்று கூறி, இங்கு, ``குதிரை இரண்டுள`` என்றது, `இடவகையால் இரண்டு` என்னும் குறிப்பினதே யாதலின், மாறு கொள்ளாது என்க. எனவே, `ஒன்று` எனப்பட்ட பிராணவாயு, `இடைகலை, பிங்கலை என்னும் இரண்டு நாடிகளின் வழி இரண்டாய் இயங்கும்` என்பது கூறப் பட்டதாம். இடைகலை நாடி, வலக்கால் பெருவிரலினின்று தொடங்கி மேலேறிப்படரும். பிங்கலை நாடி இடக்கால் பெருவிரலினின்று தொடங்கி மேலேறிப் படரும்; இவை இரண்டும் கொப்பூழில் பிணைந்து இடைகலை இடப்பக்கமாகவும், பிங்கலை வலப்பக்க மாகவும் மாறி, முதுகு, பிடர், தலை வழியாகச்சென்று, முறையே மூக்கின் இடத் துளை வலத் துளைகளில் முடியும். அதனால் இரு நாடிகளும் பிணையும் இடமாகிய உந்தியில் (கொப்பூழில்) மூக்கின் வழியே அந்நாடிகளின்வழி வந்து நின்ற காற்று, மீளவும் அவற்றின் வழி வெளிச்செல்லும். அதனால், பிராணவாயு ஒன்றே இரண்டாகச் சொல்லப்படுகின்றது என்க. கடிவாளம், உயிர்க்கிழவனது ஆற்றல். அதனை வீசி அக்குதிரைகளை அடக்க வேண்டும் என்றார். அது தன்னை முறையறிந்து செய்ய வேண்டுதலின், ``அறிவார் இல்லை`` எனவும், ``குருவின் அருளால் அறிந்து பிடிக்க`` எனவும் கூறினார். ``கூரிய`` என்றதில், ``கூர்ப்பது அறிவு`` என்க. இனி, `அம்முறைதான் அசபா மந்திரத்தால் ஆவது` என்பதை, நான்காந் தந்திரத்துட் கூறுவார். இதனுள், `வீசி` என்பது உயிரெதுகை.
இதனால், `பிராணாயாமம் செய்யும் முறையைக் குருவருளால் அறிந்து செய்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற்;
கள்ளுண்ண வேண்டா; தானே களிதரும்;
துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே.

பொழிப்புரை :

பறவையினும் விரைய ஓடுகின்ற பிராணனாகிய அக்குதிரையின்மேல் ஏறிக்கொண்டால், களிப்பிற்கு வேறு கள்ளுண்ண வேண்டுவதில்லை; அது தானே மிக்கக் களிப்பைத் தரும். அக்களிப்பினாலே துள்ளி நடக்கச் செய்யும்; சோம்பலை நீக்கச் செய்யும்; இவ்வுண்மையை, நாம் சொல்லியவாறே உணரவல்ல வர்க்கே சொன்னோம்.

குறிப்புரை :

மேற்கொள்ளுதல், ஏறிச்செலுத்துதல். அஃது இங்கு அடக்கி ஆளுதலைக் குறித்தது. உடலின் உள்ளுறுப்புக்கள் யாவும் - சிறப்பாக இருதயம் - நன்கு செயற்படுதலும், படாமையுமே உடலின் வலிமைக்கும், வலிமை இன்மைக்கும் காரணம். அவ்வுறுப்புக்களின் நன்மை, குருதி ஓட்டத்தின் தன்மையைச் சார்ந்தது. குருதி ஓட்டம் மூச்சுக் காற்றின் இயக்கத்தை ஒட்டியது. ஆகவே, அவ் இயக்கத்தை வழிப்படுத்தினால், உடல் வலிமை பெற்று, உள்ளமும் கிளர்ச்சி அடைவதாம்.
இதனால், பிராணாயாமம் உள்ளக் கிளர்ச்சியைத் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

பிராணன் மனத்தொடும் பேரா தடங்கிப்
பிராணன் இருக்கிற் பிறப்பிறப் பில்லை
பிராணன் மடைமாறிப் பேச்சறி வித்துப்
பிராணன் அடைபேறு பெற்றுண் டிரீரே. 

பொழிப்புரை :

பிராண வாயுவால் கிளர்ச்சியுற்று ஓடும் இயல் புடைய மனத்தை உடன்கொண்டு, அப்பிராண வாயு வெளியே ஓடாது உள்ளே அடங்கி இருக்குமாயின், பிறப்பு இறப்புக்கள் இல்லா தொழியும். ஆகவே, அந்தப் பிராண வாயுவை அதன் வழியினின்றும் மாற்றி வேறு வழியில் செல்லச் செலுத்தி, அதனால் மோனநிலையை எய்தி, பிராண வாயுவால் அடையத்தக்க பயனை அடைந்து இன்புற்றிருங்கள்.

குறிப்புரை :

மனம் செயற்பட்டுப் பயன் தருதற்பொருட்டு அமைந்ததே பிராண வாயுவாயினும், இங்கு நுதலிய பொருள் பிராண வாயு ஆதல் பற்றி அதனைத் தலைமைப் பொருளாக வைத்து, `மனத் தொடும் அடங்கிப் பிராணன் பேராது இருக்கின்` என்றார். ``மனத் தொடும்`` என்றதில் ஓடு, `கைப்பொருளொடு வந்தான்` என்றாற்போல உடைமைப் பொருட்கண் வந்தது. எனவே, பிராணாயாமத்தால் மனம் அடங்குதலாகிய பயன் கூறப்பட்டதாம். வழியை `மடை` என்றது, ஒப்புமை வழக்கு.
பிராண வாயு உலாவும் வழி இட நாடி (இட மூக்கு) ஆகிய இடைகலையும், வல நாடி (வல மூக்கு) ஆகிய பிங்கலையும், நடு நாடி (முதுகந்தண்டைச் சார்ந்துள்ள வழி) ஆகிய சுழுமுனையும் என மூன்று. அவற்றுள் பிராணவாயு இயல்பாக உலாவும் வழி இடைகலை பிங்கலைகளாம். அவைகளை மாற்றிச் சுழுமுனையில் செலுத்து தலையே, ``மடை மாற்றி`` என்றார். `நடை மாற்றி` என்னாது, `மடை மாற்றி` என்றதனால், அதற்கு, `இடைகலை பிங்கலைகளுள் ஒன்றின் வழியாகவே விடுதலும் வாங்குதலும் செய்தல்` என உரைத்தல் கூடாமை அறிக. `பேச்சறுதல்` என்பது, `மோனம்` என்பது குறித்த வாறு. உண்மை மோனம், வாய் வாளாமையோடு ஒழியாது மனம் அடங்குதலேயாம் என்க. உண்ணுதல் இங்கு, துய்த்தல். இத்திருமந்திரம் சொற்பொருட் பின் வருநிலை.
இதனால், பிராணாயாமத்தால் மன அடக்கம் உளதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பகம் அறுபத்து நால்அதில்
ஊறுதல் முப்பத் திரண்ட திரேசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே.

பொழிப்புரை :

இது முதல் பிராணாயாமம் செய்யும்முறை கூறுகின்றார்.
(பிரணாயாமம், ``பூரகம், கும்பகம், இரேசகம்`` என்னும் மூன்று வகையினை உடையது. அவற்றுள்,) `பூரகம்` என்பது வெளியே உள்ள தூயகாற்று உடலினுள் புகுதற்கு உரித்தாய செயல். (எனவே, உயிர்க்கிழவன் தனது முயற்சியால் அக்காற்றினை உள்ளாக இழுத்தலாம்) இதன் உயர்ந்த அளவு பதினாறு மாத்திரை. இஃது இடை நாடியால் இடமூக்கு வழியாகச் செய்யற்பாலது. ``கும்பகம்`` என்பது உள்ளே புகுந்த காற்று அங்கே அடங்கி நிற்றற்கு உரித்தாய செயல். (எனவே, அங்கே நில்லாது ஓடுகின்ற அதனை அங்ஙனம் ஓட வொட்டாது தடுத்து நிறுத்தலாம்) இதன் உயர்ந்த அளவு அறுபத்து நான்கு மாத்திரை. ``இரேசகம்`` என்பது, உள் நின்ற காற்று வெளிப் போதற்கு உரித்தாய செயல். (எனவே, உயிர்க்கிழவன் அதனை வெளிச் செல்ல உந்துதலாம்) இதன் உயர்ந்த அளவு முப்பத்திரண்டு மாத்திரை. இம்மூன்றும் ஒருமுறை இவ்வளவில் அமைவது ஒரு முழு நிலைப் பிராணாயாமமாகும். பூரகம் முதலிய மூன்றும் தம்முள் இவ்வாறு இவ்வளவில் ஒத்து நில்லாது ஒன்றில் மாறுபடுதலும், பிரணாயாமம் புரைபடுதற்கு ஏதுவாம்.

குறிப்புரை :

``பூரகம் வாமத்தால் ஈரெட்டாக ஏறுதல்; கும்பகம் அறுபத்து நாலாக அதில் ஆறுதல்; இரேசகம் முப்பத்திரண்டாக ஊறுதல், ஒன்றின்கண் மாறுதல் வஞ்சகமாம்`` எனக் கூட்டுக. `பூரகம் இடைநாடியால்` எனவே, `இரேசகம் பிங்கலையால்` என்பது சொல்லாமை அமைந்தது. `ஏறுதல்` முதலிய மூன்றும் காரிய ஆகு பெயராய், அவற்றிற்குரிய செயல்களை உணர்த்தின. மாத்திரைகள் மந்திரங்களின்வழி அறியப்படும். அம்மந்திரங்கள் அவரவர் தம் தம் குருமுகத்தால் பெறற்பாலர். அனைவர்க்கும் பொதுவாக நிற்பது ``பிரணவம்`` எனப்படும் ஓங்காரம். அதனை ஒரு மாத்திரை வேண்டும்பொழுது ``உம்`` என்றே கொள்வர். இது சமட்டியாகக் கொள்ளும் முறை. இதனையே, ``அம், உம்`` எனப் பகுத்து வியட்டியாகக் கொள்வர். சமட்டியாக ஓதுபவர் இரண்டு மாத்திரைக்கு `ஓம்` என்றும், அதனின் மிக்க மாத்திரைக்கு அவ்வளவான அள பெடை கூட்டியும் ஓதுவர். ``அம்`` என்பதன்பின் ``சம்`` என்பது கூட்டி, ``அம்ச மந்திரம்`` எனக் கொண்டு, ஓதுதலைப் பெருவழக்காகச் சொல்வர். `ஓம்` என்பது போலவே, ``ஆம், ஈம், ஊம், ஏம், ஐம், ஔம்`` என்பவனவும், ``அம், உம்`` என்பன போலவே, ``இம், எம், ஓம்`` என்பனவும் முதல் (மூல) மந்திரங்களாம் என்பதனை நாயனார் நாலாந் தந்திரத்துள் அருளிச் செய்வார். மந்திரங்களில் ஒற்றெழுத்தின் மாத்திரையைக் கணக்கிடுதல் இல்லை. மந்திரங்களைக் கணிக்கும் முறை ``வாசகம், உபாஞ்சு, மானதம்`` என மூன்று. வாசகம், தன் செவிக்கும், பிறர் செவிக்குங் கேட்குமாறு வெளிப்படக் கூறுதல். உபாஞ்சு, நாப்புடை பெயருமளவாக மெல்ல உச்சரித்தல். இதனை ``முணுமுணுத்தல்`` என்றல் வழக்கு. மானதம், நாவாற் கூறாது மனத்தால் நினைத்தல். இவற்றுள், ``வாசிகம் சரியையாளர்க்கும், உபாஞ்சு கிரியையாளர்க்கும், மானதம் யோகியர்க்கும் உரியன`` எனப் பெரும்பான்மை பற்றிக் கூறப்படும் என்க. மந்திரத்தில் பற்றில்லாதவர் செய்யும் பிரணாயாமம் பெரும்பயன் தாராது.
ஈரெட்டு முதலிய எண்கள், அவ்வவ்வளவினதாகிய மாத்திரையைக் குறித்தன. `ஊருதல்` என்பது எதுகை நோக்கித் திரிந்தது. `ஊருதல்` என்பதே பாடம் எனினுமாம். ஊருதல் - மேலே (வெளியே) செல்லுதல். ``முப்பத்திரண்டது`` என்றதில், அது பகுதிப் பொருள் விகுதி. `மாறுதலும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத் தலாயிற்று. வஞ்சகம் - பொய்; போலி. பூரிக்கும் அளவில் நான்மடங்கு கும்பித்த வழியே அக் காற்று உடற்குப் பயன் படுவதாகும். எனினும், பூரித்த காற்று முன்னுள்ள காற்றுடன் பயன்பட்டபின் நிலை வேறு படுதலால், மேற்குறித்த கால அளவில் இரேசகம் வேண்டப்படுகிறது.
இதனால், பிரணாயாமத்தின் இயல்பு கூறப்பட்டது.
இதனுள், `கும்பக மாத்திரை பூரக மாத்திரையின் நான் மடங்காம்` என்பதும், `இரேசக மாத்திரை கும்பக மாத்திரையின் அரை மடங்காம்` என்பதும் உய்த்துணர வைக்கப்பட்டவாறு அறிந்து கொள்க. `இஃது உயரளவு` எனவே, `அவ்வளவை எட்டுதற்கு, முதற் கண் சிறிது சிறிதாக அம்முறையிற் பயிலுதல் வேண்டும்` என்பது பெறப்பட்டது. பிராண வாயுவை இவ்வாறு நெறிப்படச் செய்வதால், உடல் தூய்மை பெற்று, ஆற்றல் மிகுந்து, நற்பண்புகளுக்கு இடமாகும்.

பண் :

பாடல் எண் : 6

வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்
தெளியக் குருவின் திருவருள் பெற்றால்
வளியனும் வெட்ட வெளியனு மாமே. 

பொழிப்புரை :

ஒருவன் தன் பிராண வாயுவை வளைத்துத் தன்வயப்படுத்தி ஆள வல்லனாயின், ஆண்டுகள் பல செல்லினும் அவனது உடல் முதுமை எய்தாது, பளிங்குபோல அழகிதாய் இளமை யுற்று விளங்கும். அந்நிலையில் அவனது உணர்வு தெளிவு பெறுதற்கு ஞான குருவின் அருளைப் பெறுவானாயின், அவன் சாந்தி, சாந்தி யதீத கலைகளில் உள்ள புவனங்களை அடையும் அபர முத்தி நிலைகளை அடைவான்.

குறிப்புரை :

எனவே, `யோக முதிர்ச்சி, ஞானத்தின் பயனை எளிதில் தரும்` என்றவாறாம். உடல் நெடுநாள் நிற்றற்குப் பயன், பிறிது பிறவி வேண்டாது, எடுத்த பிறவியிலே ஞானத்தைப் பெறுதலாம். இவ் வாறன்றி, அணிமாதி அட்ட சித்திகளையும், பிறவற்றையுமே யோகத் தின் பயனாகக் கொள்வோர், உபாய யோகிகளேயன்றி, உண்மை யோகிகள் அல்லர்; அவர்க்கு வினையும், அதன் விளைவாகிய பிறப்பும் நீங்கா என்க.
`யோக சாக்கிரம், யோக சொப்பனம், யோக சுழுத்தி, யோக துரியம், யோக துரியாதீதம்` என்னும் யோகாவத்தை ஐந்தனுள் இயமம் முதல் பிராணாயாமம் ஈறாக உள்ளவை யோக சாக்கிரம். பிரத்தி யாகாரம் முதலாக உள்ள நான்கும் முறையே யோக சொப்பனம் முதலிய நான்குமாம். ஆகவே, `யோக சாக்கிரத்தின் முதிர்வாகிய பிரணாயாமம் கைவந்தோர் ஏனைய நான்கையும் அடைதல் தப்பாது` என்பது பற்றி இதனையே யோக முடிவுபோல வைத்துக் கூறுதல் வழக்கு. அம் முறையே பற்றி நாயனாரும் ஈண்டே யோகத்தின் பயனைக் குறித்தருளினார். `பழுக்கினும்` என்றது, `ஆண்டளவையால் முதுமை பெறினும்` என்றவாறு. `பழுக்கினும், காயம் பளிங்கொத்துப் பிஞ்சாம்` என மாறிக் கூட்டுக. `முதிரினும்` என்னாது ``பழுக்கிலும்`` என்றதனால், `முதுமை வந்தபின் இது செய்யினும் அது நீங்கும்` என்பது கொள்க. குரு, ஞான குரு ஆதல், யோகிகட்கு ஏனைக் குரு வேண்டாமை பற்றி அறியப்படும். ``வளி, வெளி`` என்பவை சாந்தி, சாந்தியதீத கலைகளைக் குறித்து நின்றன. இவ்வாறன்றி, வாயுத் தம்பனமும், ஆகாயத் தம்பனமும் வல்லராதற்கு ஞான குரு வேண்டாமை அறிக. ஈற்றடியைப் பிறவாறு ஓதுவன பாடம் அல்ல.
இதனால், பிரணாயாமம் யோகத்தின் சிறப்புறுப்பாய்ப் பயன் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

எங்கே இருக்கினும் பூரி இடத்திலே
அங்கே அதுசெய்ய ஆக்கைக் கழிவில்லை
அங்கே பிடித்தது விட்டள வுஞ்செல்லச்
சங்கே குறிக்கத் தலைவனு மாமே. 

பொழிப்புரை :

எந்த ஆசனத்தில் இருந்து பிராணாயாமம் செய்யினும், பூரகத்தைச் செய்தல் இடைநாடி வழியாகவே யாம். அவ்வாறு செய்தலால், உடலுக்கு ஊறு ஒன்றும் உண்டாகாது. அந்த ஆசனத்திலே பூரகம், கும்பகம், இரேசகம் என்பவற்றை மேற்கூறிய வாறு செய்யச் சங்கநாதம் முதலிய ஓசைகளை உள்ளே கேட்கும் நிலைமை உண்டாகும். அஃது உண்டாகப் பெற்றவன் பின்னர் யோகருள் தலைவனாய் விளங்குவான்.

குறிப்புரை :

``எங்கு`` என்னும் இடப்பெயர் இங்கு யோகா சனத்தைக் குறித்தது. பூரி, முதனிலைத் தொழிற்பெயர். இங்கும், `பூரித்தல் இடமூக்கு வழியாக` எனவே, `இரேசித்தல் வலமூக்கு வழியாக` என்பதும் கூறியதாயிற்று. இவ்வாறு வலியுறுத்து ஓதியதனால், ``மூக்குத் துளை இரண்டாகப் படைக்கப்பட்டது பூரக இரேசகங்களை இவ்வாறு செய்தற் பொருட்டே`` என்பது விளங்கும். விளங்கவே, வாய்வழியாக அவற்றைச் செய்தல் கூடாமையும் பெறப் படும். `அது` என்றது பிராண வாயுவை. பிடித்தல், பூரித்தல், விடுதல், இரேசித்தல், அளவும் - மேற்குறித்த உயரளவுகாறும். செல்ல - பிரணாயாமத்தில் பயில. சங்க நாதம் முதலிய தச நாதங்கள் (பத்து ஒலிகள்) இவை என்பது பின்னர்க் கூறப்படும்.
இதனால், `ஆசன வேறுபாட்டால் பிரணாயாம முறை வேறுபடுதல் இல்லை` என ஐயம் அறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே. 

பொழிப்புரை :

பிராண வாயுவை இடை நாடியால் உட்புகுத்திப் பூரிக்கும் கணக்கையும், பிங்கலை நாடியால் இரேசிக்கும் கணக்கையும் அறிந்து, அதனானே கும்பிக்கும் கணக்கையும் நன்கு அறிகின்றவர் இல்லை. அக்கணக்குகளை ஆசிரியன் அறிவுறுக்கும் யோக நூல் வழியாக மேற்கூறியவாறாக நன்கு உணர்பவர்கட்குக் கூற்றுவனை வெல்லும் பயன் அம்முறையிற் பயிலுதலேயாய் முடியும்.

குறிப்புரை :

இரு கால் - முதற் காற்று, (இடை நாடி வழியது) கடைக் காற்று (பிங்கலை வழியது) என்பன. இது தொகை நிரல்நிறை. ``பூரிக்கும்`` என்பதன்பின், `இரேசிக்கும்` என்பது எஞ்சி நின்றது. `பூரிக்கும், இரேசிக்கும், பிடிக்கும்` என்னும் எச்சங்கள், `கணக்கு` என்னும் ஒரு பெயர் கொண்டன. ``இரு கால்`` மேலே கூறப் பட்டமையின், பின்னர் ``காற்று`` என்றது இடைக்காற்றாதல் (நடுநாடி வழியது) விளங்கும். குறி - குறிக்கோள்; இலட்சியம். துணிவுபற்றி, வழியையே பயனாக அருளினார்.
இதனால், பிரணாயாமத்தைச் செம்மையாகச் செய்தலின் அருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

மேல்கீழ் நடுப்பக்கம் மிக்குறப் பூரித்துப்
பாலாம் இரேசகத் தாலுட் பதிவித்து
மாலாகி உந்தியுட் கும்பித்து வாங்கவே
ஆலாலம் உண்டான் அருள்பெற லாமே. 

பொழிப்புரை :

பிராண வாயுவை உடல் முழுதும் பரவுமாறு பூரகத்தையும், அந்த வாயுத் தூய்மையாயிருத்தற் பொருட்டு இரேசகத்தையும், நீண்ட வாழ்நாளையும், மிக்க ஆற்றலையும், பெறுதற் பொருட்டுக் கும்பகத்தையும் மேற்கூறிய முறையிற் செய்து பிராணவாயுவை வசப்படுத்தினால், இப்பிறப்பிற்றானே சிவபெரு மானது திருவருளைப் பெறலாம்.

குறிப்புரை :

``பாலாம்`` என்பதனை, ``பால்போல ஆகின்ற`` என விரிக்க. பால் தூய்மைக்கு உவமை. ``ஆம்`` என்ற பெயரெச்சம், ``இரேசகம்`` என்னும் ஏதுப் பெயர் கொண்டது. ``இரேசகத்தால் உட் பதி வித்து`` என்றது, இரேசகம் இல்லாது ஒழியின் கும்பகம் தூய்மை யாகாது என்பதனைப் புலப்படுத்தி, இரேசகத்தின் இன்றியமை யாமையைக் குறித்தது. நெடுங்காலம் வாழ்தலால் `அமரர்` எனப்படும் தேவர் பலருள்ளும் வாழ்நாள் மிக்கவன் மாயோனாதலின், ``மாலாகி`` என்றது, நெடுங்காலம் வாழ்தலைக் குறித்தது. ``ஆகி`` என்னும் ஆக்கச்சொல் உவமை மேல் நின்றது. உலக காரணன் ஆகத்தக்க ஆற்ற லால் நான்முகனை உந்தி வழித்தோற்றுவித்தோனாதல்பற்றி, உந்தித் தானத்தில் கும்பகம் செய்து ஆற்றல் மிகுதற்கும் அவனையே உவமை யாகக் கூறினார். வாங்குதல் - வளைத்தல். ``இப்பிறப்பிலே`` என்பது ஆற்றலால் கொள்ளக்கிடந்தது. நெடுங்காலம் வாழ வேண்டுதற்குக் காரணம் கூறுவார், ``ஆலாலம் உண்டான் அருள்பெறலாமே`` என்றார்.
இதனால், பூரகம் முதலிய மூன்றின் பயன் வகுத்துணர்த்தப் பட்டது. கும்பகத் தானம் உடம்பொடு புணர்த்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே
ஏமுற்ற முப்பத் திரண்டும் இரேசித்துக்
காமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண்
டோமத்தால் எட்டெட்டுக் கும்பிக்க உண்மையே. 

பொழிப்புரை :

பூரக இரேசகங்களை முற்கூறியவாறு இடைகலை பிங்கலைகளால் செய்தலே முறையாம். கும்பகத்தை ஓமத்தானமாகிய உந்தித் தானத்திற் செய்தலே முறையாம்.

குறிப்புரை :

`உண்மை` என்பது ``இவ்விரண்டு`` என்பதனோடும் இயையும். ``வாமத்தில் பூரித்து, பிங்கலைக்கண் இரேசித்து ஆக, இவ்விரண்டு உண்மை; ஓமத்தால் கும்பிக்க உண்மை`` என்க. ஆதல்- முடிதல். `இவ்விரண்டு` என்ற சுட்டு, பூரக இரேசகங்களைச் சுட்டிற்று. உண்மை - செம்மை. `ஓமம்` என்பது ஆகுபெயராய் அதற் குரிய இடத்தை உணர்த்திற்று. அகப் பூசையில் இருதயம் பூசைத் தானமாகவும், நாபி ஓமத்தானமாகவும், புருவ நடு தியானத் தானமாகவும் கொள்ளப்படுதல் அறிக. ``ஓமத்தால்`` என்பது உருபு மயக்கம். இதற்கு ``ஓம்`` என்னும் அம்மந்திரத்தால் எனவும் உரைப்பர். ``ஆக, கும்பிக்க`` என்ற எச்சங்கள். ``உண்மை` என்னும் குறிப்பு வினை கொண்டன. ``உண்மையது`` எனற்பாலதனை `உண்மை` என்றே கூறுதல் பிற்கால வழக்காயிற்று. ஆகவே, அப் பண்புச் சொல் பண்பிமேல் நின்றதாக உரைத்துக் கொள்ளப்படும். ``கும்பிக்க`` என்பதன்பின், ``அஃது`` என்னும் தோன்றா எழுவாய் வருவிக்க.
இதனால், மேல் உடம்பொடு புணர்த்துக் கூறப்பட்டது, எடுத்தோதி வலியுறுத்தப்பட்டது. முன்னவை இரண்டும் அனுவாதம்.

பண் :

பாடல் எண் : 11

இட்டதவ் வீடிள காதே யிரேசித்துப்
புட்டி படத்தச நாடியும் பூரித்துக்
கொட்டிப் பிராணன் அபானனுங் கும்பித்து
நட்டங் கிருக்க நமனில்லை தானே. 

பொழிப்புரை :

இறைவன் உயிரைக் குடிவைத்ததாகிய அந்த இல்லம் (உடம்பு) தளர்வுறா வண்ணம் வீணே போக்கப் படுவதாகிய பிராணவாயுவை அங்ஙனம் போகாதவாறு பிராணாயாமத்தால் பயன்படச் செய்யின் இறப்பு இல்லையாகும். (நீண்ட நாள் வாழலாம் என்பதாம்)

குறிப்புரை :

அவ்வீடு - அத்தன்மையதாகிய வீடு. எனவே, \\\"அஃதழியின் உயிர் தீங்கெய்தும்\\\" என்பதாம். புட்டி, வடசொல்; `நிறைவு\\\' என்பது பொருள். தச நாடிகளாவன, `இடைகலை, பிங்கலை, சுழுமுனை, காந்தாரி, அத்தி, சிகுவை, அலம்புடை, சங்குனி, வைரவன், குகுதை\\\' என்பன.
கொட்டி - கொட்டப்படுவது. இஃது யோகியரல்லாதாரது செயல் பற்றிக் கூறியது. பிராணன், மூக்கு வழியாக இயங்கும் காற்று. அபானன், எருவாய் வழியாக வெளிப்படும் காற்று. பிராணனை மூக்கு வழிப் புறப்படாது கும்பிக்கும்பொழுது, அஃது எருவாய்வழிப் புறப் பட முயலும். அதனை அடக்குதலையே, \\\"அபானனைக் கும்பித்தல்\\\" என்றார். எனவே, இயல்பாக வெளிச்செல்லும் அபானனைக் கும்பிக்கக் கூறினாரல்லர் என்க. \\\"அங்கு நட்டு இருக்க\\\" என மாற்றுக. அங்கு - உந்தித் தானத்தில். நடுதல் - நிலைபெறுத்தல். இக்கும் பகத்தால் முதுகெலும்பின் அடியில் உள்ள \\\"சுழுமுனை\\\" என்னும் நாடியுள் பிராணவாயுச் செல்வதாகும். அதனால் பல நலங்கள் விளையும். அது பற்றி \\\"நமன் இல்லை\\\" என்றார். \\\"நட்டம் இருக்க\\\" என்பது பாடம் அன்று.
இதனால், \\\"கும்பகம் ஓட்டைபோகாதவாறு காத்தல் வேண்டும்\\\" என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட உள்ளே நின்மல மாக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே. 

பொழிப்புரை :

வெளி வருவதும், உட்புகுவதுமாய்ப் பயனின்றி அலைகின்ற பிராண வாயு, மேற்கூறிய நெறிக்குட்பட்டு நிற்குமாற்றால் தூயதாகச் செய்யின், உடம்பு ஒளிவிட்டு விளங்கும்; தலை, முகம் முதலானவற்றில் உள்ள மயிர்கள் நரையாது கறுப்பனவாம். இவற்றினும் மேலாகச் சிவபெருமான் அத்தகைய யோகியின் உள்ளத்தை விட்டுப் புறம் போகான்.

குறிப்புரை :

\\\"புறப்பட்டுப் போகான்\\\" என்றது `தியானம் சலியாது\\\' என்றவாறாம். எனவே, \\\"இதுவே பிராணாயாமமாகிய பேருழைப் பிற்குச் சிறந்த பயன்\\\" என்பது போந்தது.
இதனால், பிராணாயாமம் மேல் வரும் யோக உறுப்புக்கட்கு இன்றியமையாச் சாதனமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்
ஓடுவர் மீளுவர் பன்னிரண் டங்குலம்
நீடுவர் எண்விரல் கண்டிப்பர் நால்விரல்
கூடிக் கொளிற்கோலம் அஞ்செழுத் தாமே. 

பொழிப்புரை :

ஆடரங்கு ஒன்றை அமைத்து, அதனுள் ஆடப் புகுந்த மங்கையர் இருவர் தாங்கள் ஆடும்பொழுது பன்னிரண்டங்குல தூரம் முன்னோக்கிச் செல்கின்றனர்; ஆயினும், பின்னோக்கி வரும் பொழுது எட்டங்குல தூரமே வருகின்றனர். ஆகவே, அவர் ஒவ்வொரு முறையிலும் நாலங்குல தூரம் கூடத்தை விட்டு நீங்கு பவராகின்றனர். (இவ்வாறே அவர்களது ஆட்டம் நடைபெறு மாயின் எப்பொழுதாவது அவர்கள் அவ்வாடரங்கை முழுதும் விட்டு அப்பாற் போதலும், மீள அதன்கண் வாராமையும் உளவாதல் தப்பா தன்றோ!) ஆகையால், ஒவ்வொரு முறையும் அந்த நாலங்குல தூரமும் அவர்கள் மீண்டு வருவராயின், அக் கூடத்தின் அழகு என்றும் அழியா அழகாய் நிலைத்திருக்கும்.

குறிப்புரை :

\\\"ஓடுவர் பன்னிரண்டங்குலம்; மீளுவர் எண்விரல்\\\" என நிரல்நிரையாக்கிப் பின், \\\"நீடு உவர் இவ்வாற்றால் நால் விரல் கண்டிப்பர்; (அதனையும் அவர்) கூடிக்கொளின், கோலம் அஞ் செழுத்தாம்\\\" எனக் கூட்டி உரைக்க. நீடு உவர் - ஆட்டத்தில் நீடு நிற்கின்ற இவர். கண்டிப்பர் - துணிப்பர். மந்திரங்களே அழிவில்லன; அவற்றுள்ளும் அஞ்செழுத்து மந்திரம் அழிவிலதாதலின், அழியாமை குறித்தற்கு, அஞ்செழுத்தாக்கி அருளிச்செய்தார். அஞ்செழுத்து, திருவைந்தெழுத்தும், வியட்டிப் பிரணவமுமாம். இனி, ஓவியத்தின் மறுபெயராகிய `எழுத்து\\\' என்பதும், \\\"கோலம்\\\" என்பதுபோலவே ஆகுபெயராய் அழகினைக் குறித்தது எனக் கொண்டு, ஏகாரத்தை எதிர்மறை வினாவாக்கி, `அழியுமோ என்று அஞ்சப்படும் அழகாகுமோ! ஆகாது\\\' என உரைத்தலுமாம். இனி, இதற்கு \\\"அஞ்செழுத்துருவமாதற்கு ஏற்றதாகும்\\\" என உரைத்தலுமாம். ஆடல் மங்கையர் அப்பாற்போய், மீளவும் அதனுள் வாராதொழியின், ஆடரங்கு அழிந்தொழியும் என்பதாம்.
கூடம், உடம்பு, ஆடல் மங்கையர், இரு மூக்கு வழியாக இயங்குகின்ற பிராண வாயு, \\\"மக்களது மூச்சுக் காற்று இயல்பாக வெளிச் செல்லும் பொழுது பன்னிரண்டங்குல அளவு செல்லும்\\\" என்பதும், \\\"மீண்டு அஃது உட்புகும்பொழுது, முன் சென்ற அளவு புகாது, இயல்பாக எட்டங்குல அளவே புகும்\\\" என்பதும் யோகநூல் வரையறை. எனவே, \\\"வெளிச் சென்ற காற்றில் மூன்றில் இரண்டு பங்கே உட்புக, ஒருபங்கு இழப்பாகின்றது\\\" என்பதும், `அவ் இழப்பினாலே நாள்தோறும் வாழ்நாள் அளவு குறைந்துகொண்டே வருகின்றது\\\' என்பதும், `அவ்வாறாகாது தடுப்பது பிராணாயாமம் என்பதும்\\\' கருத்தாதல் அறிந்துகொள்ளப்படும்.
இதனால், பிரணாயாமத்தால் வாழ்நாள் நீட்டிக்குமாறு தெரித்துணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

பன்னிரண் டானை பகல்இர வுள்ளது
பன்னிரண் டானையைப் பாகன் அறிகிலன்
பன்னிரண் டானையைப் பாகன் அறிந்தபின்
பன்னிரண்டா னைக்குப் பகல்இர வில்லையே. 

பொழிப்புரை :

பன்னிரு முழ உயரமுள்ள யானை ஒன்று பகலும், இரவுமாய் மாறிவரும் காலச் சுழலில் அகப்பட்டுள்ளது. அஃது அவ்வாறிருத்தலை அதன் பாகன் தனது பேதைமையால் அறிந்தானில்லை. அதனை அவன் அறிவானாயின், அந்த யானை அச் சுழலைக் கடந்து நின்று, அவனுக்கு உதவுவதாகும்.

குறிப்புரை :

ஆனை, மூச்சுக் காற்று. வசப்படுத்துதற்கு அருமை நோக்கி, அதனை யானையாக அருளிச்செய்தார். `சிறந்த யானை ஏழுயர் யானை\\\' என்பது யானை நூல் மரபு. அதனோடொப்ப, `பன்னிரண்டுயர்ந்த யானை\\\' என்றார். `முழம்\\\' எனவும், `உயர்ந்தது\\\' எனவும் கூறாது, பொதுமையில் நயம்பட `பன்னிரண்டு\\\' என்றது, மேல், `அங்குலம்\\\' என்றதனோடும், \\\"முன்னோக்கி ஓடும்\\\" எனக் கூறியவற்றோடும் மாறுகொள்ளாமைப் பொருட்டு. \\\"பகல் இரவு\\\" என்றது, பகல், இரவு, நாள், பக்கம், திங்கள், யாண்டு எனப் பலவாற்றாற் காலம் கழிதலைக் குறித்தவாறு. `பிராணாயாமம் செய்யின், அங்ஙனம் கழிதலாற் கெடுவதொன்றில்லை\\\' என்பதாம். பாகன் - உயிர்.
இதனால், `பிராணாயாமத்தில் மனவெழுச்சி செல்லாமை அறியாமையினாலாம்\\\' என்பது கூறப்பட்டது.
`பிராணாயாமத்துள் பூரகம், கும்பகம், இரேசகம் மூன்றும் தனித்தனியானவை அல்ல; மூன்றும் யாண்டும் கூடி நிற்பனவே; அவற்றுள் \\\"பூரகம், கும்பகம், இரேசகம்\\\" என்னும் முறையால் செய்யப்படுவது இரேசகம். \\\"பூரகம், இரேசகம், கும்பகம் மறித்தும் பூரகம்\\\" என்னும் முறையால் செய்யப்படுவது பூரகம். \\\"பூரகம், இரேசகம், கும்பகம்\\\" என்னும் முறையால் செய்யப்படுவது கும்பகம். எனவே, இவை இறுதியில் நிகழ்வனவற்றால் பூரகம் முதலிய பெயர்களைப் பெற்றன\\\' எனக்கொண்டு, அவ்வாறே, \\\"ஏறுதல் பூரகம், மேல்கீழ் நடுப்பக்கம், வாமத்தில் ஈரெட்டு\\\" என்னும் திரு மந்திரங்களை முறையே `இரேசகம், பூரகம், கும்பகம்\\\' என்பவற்றைக் கூறுவனவாக அரசஞ் சண்முகனார் தமது பாயிர விருத்தி (பக். 45,46) யுள் எழுதியுள்ளார். இன்னும் அவர் பிராணாயாமம் `இம்மூன்றல்லாது, `நிலை\\\' என்ற நான்காவதும் உடையது\\\' எனக் கொண்டு, \\\"இட்டதவ் வீடு கூடம் எடுத்து, பன்னிரண் டானைக்கு\\\" என்னும் திருமந்திரங்கள் அதனையே கூறுகின்றன என்கின்றார். ஆயினும், \\\"நிலை\\\" என்பதைக் குறிக்கும் வடமொழிப் பெயர் இது என்பதனை அவர் கூறவில்லை. `தாபித்தல்\\\' என்ற ஒருசொல் திருமந்திரத்திற் காணப்படுகின்றது; அதனையே கருதினாரோ, என்னவோ! இனி, கும்பகம் என்பது காற்றை உள்ளே நிறுத்துதலன்று; வெளியே நிறுத்துதல் என்கின்றார் விவேகானந்த அடிகள். இவையெல்லாம் முன்னை மரபிற்கு வேறானவையாய் உள்ளன.
சிற்பி