Get Flash to see this player.
திருஞானசம்பந்தர் திருவருள்பெற்றுச் சீகாழியில் எழுந் தருளியுள்ள உண்மையைக் கேட்டறிந்தனர் . உலகோர் பலர் ` தாவில் சராசரங்களெல்லாம் சிவம் பெருக்கும் பிள்ளையாரை ` மணிவயிற்றில் உலகுய்ய வைத்து வழங்கிய பகவதியார் திரு அவதாரம் செய்த தலமாகிய திருநனிபள்ளியின் மறையவரும் அதைக் கேட்டுணர்ந்தனர் . அதன்பின் சீகாழியை அடைந்தனர் . ஆளுடை பிள்ளையார் அடிமலர் வணங்கினர் . தாம் வாழும் திருப்பதிக்கு எழுந்தருளும்படி வேண்டினர் . நாயனாரும் அதற்கு இசைந்து புறப்பட்டுத் திருநனிபள்ளியை அணுகினார் . எதிரே தோன்றும் இத்திருப்பதி யாது ? என்று வினாவினார் . அவரை யருளிய சிவபாதவிருதயர் அதுதான் திருநனிபள்ளி என்றனர் . அதுகேட்ட ஞானப்பிள்ளையார் இத்திருப்பதிகத்தைப் பாடி , அத் தலத்தை அடைந்து திருக்கோவிலினுட்புகுந்து வழிபட்டார் , இத் திருப்பதிகமே பாலையாயிருந்த அத்திரு நனிபள்ளியை நெய் தலாக்கிற்று என்பர் பெரியோர் . ` ஒண்கெழுவு ஞாலத்தினரறிய மன்னு நனிபள்ளியது , பாலைதனை நெய்தலாக்கியும் ` என நம்பியாண்டார் நம்பிகள் அருளிய திருஉலா மாலையிலும் ` ஓடஞ் சிவிகை உலவாக்கிழியடைக்கப் , பாடல் பனைதாளம் பாலை நெய்தல் ` எனத் திருக்களிற்றுப்படியா ரிலும் (70) உள்ளமை அறிக .
Get the Flash Player to see this player.