அகளமயமாய் நின்ற அம்பலத்தெங் கூத்தன் - அரூபியாய் நின்ற சிவனானவன்; சகளமயம்போல் உலகில் தங்கி சரீரமெடுக்கிறவர்களைப்போல இந்தப் பூமியிலே திருவுருக் கொண்டு; நிகளமாம் - ஆணவ மூலமலம் அகல ஆண்டான் காண் மாணவக என்னுடனாய் வந்து என்னுடனே கூடியிருந்து விலங்குபோலும் ஆணவமாகிய மூலமலமானது என்னை விட்டு நீங்கும்படிக்கு அடிமையாகக் கொண்டான். சீடனே, இந்த அதிசயத்தை அறிவாயாக.
ஆணவம் அகலவே கன்மமும் மாயையும் அகலுதல் கூற வேண்டாமென்பது கருத்து. இதனுள் சிவன் திருமேனி கொண்டாலொழிய ஆன்மாக்களுக்கு முத்தியில்லை யென்பது கண்டு கொள்க.