பாதகங்கள் செய்திடினும் அப்படித் தற்செயலற்று நின்றவன் ‘காமங் கோபங் கசடுறு முலோபந், தீமன மோகஞ்சேர் மதமச்சம்’ (சிற்றம்பல நாடிகள் திருச்செந்தூரகவல்) இவை முதலிய பாதகங்கள் செய்யினும் ; கொலைகளவு கள்ளுப் பயின்றிடினும் பஞ்சமாபாதகமாகிய ‘கடுங்கொலை வெறும்பொய் களவுகட்காமம்’ செய்யினும்; நெறியல்லா நெறி பயிற்றி வரினும் நெறியல்லாத அவநெறியைத் தவறாது நடத்திவரினும்; சாதிநெறி தப்பிடினும் தனதான சாதி முறைமை குலையினும்; தவறுகள் வந்திடினும் ஒரு குற்றம் தன்னை யறியாமல் வந்துற்ற காலத்தும்; தனக்கென ஓர் செயலற்றுத் தான் அதுவாய் நிற்கில் தான் அதுவாய் ஏகனாகி இறைபணி வழுவாது தனக்கென ஓர் செயலற்றே நிற்பானாகில் ; நாதன் இவன்... இதுவே அந்தச் சிவன் இவனுடலும் உயிருமாய் நின்று உண்டு உறங்கி நடந்து பிராரத்தமாகிய நானாவித விடயபோகங்களையும் சிவபோகமாகவே செய்து இவனைப் பேதமற நின்று தானாக்கி விடுவன்; இது ஆன்மலாபமான பரமானந்தத்தைப் பொசித்து நிரம்பி அது பொங்கி மேலிட்டது கரைபுரண்டு அவசமுறுஞ் சிவபோகமென்று சிவாகமங்கள் சொல்லும்வழி இதுவாம்.