10. போற்றிப்பஃறொடை
001 பஃறொடை வெண்பா
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க

 

Get Flash to see this player.


 
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.


 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2
பாடல் எண் : 1

பூமன்னு நான்முகத்தோன் புத்தேளிர் ஆங்கவர்கோன்
மாமன்னு சோதி மணிமார்பன் - நாமன்னும்
வேதம்வே தாந்தம் விளக்கஞ்செய் விந்துவுடன்
நாதம்நா தாந்தம் நடுவேதம் - போதத்தால்
ஆமளவும் தேட அளவிறந்த அப்பாலைச்
சேம ஒளிஎவருந் தேறும்வகை - மாமணிசூழ்
மன்றுள் நிறைந்து பிறவி வழக்கறுக்க
நின்ற நிருத்த நிலைபோற்றி - குன்றாத
பல்லுயிர்வெவ் வேறு படைத்தும் அவைகாத்தும் 5
எல்லை இளைப்பொழிய விட்டுவைத்துந் - தொல்லையுறும்
அந்தம் அடிநடுவென் றெண்ண அளவிறந்து
வந்த பெரிய வழிபோற்றி - முந்துற்ற
நெல்லுக் குமிதவிடு நீடுசெம்பிற் காளிதமுந்
தொல்லைக் கடல்தோன்றத் தோன்றவரும் - எல்லாம்
ஒருபுடைய யொப்பாய்த்தான் உள்ளவா றுண்டாய்
அருவமாய் எவ்வுயிரும் ஆர்த்தே - உருவுடைய
மாமணியை உள்ளடக்கும் மாநாகம் வன்னிதனைத்
தான்அடக்குங் காட்டத் தகுதியும்போல் - ஞானத்தின்
கண்ணை மறைத்த கடியதொழி லாணவத்தால் 10
எண்ணுஞ் செயல்மாண்ட எவ்வுயிர்க்கும் - உள்நாடிக்
கட்புலனாற் காணார்தம் கைக்கொடுத்த கோலேபோற்
பொற்புடைய மாயைப் புணர்ப்பின்கண் - முற்பால்
தனுகரண மும்புவன முந்தந் தவற்றால்
மனமுதலால் வந்தவிகா ரத்தால் - வினையிரண்டுங்
காட்டி அதனாற் பிறப்பாக்கிக் கைக்கொண்டும்
மீட்டறிவு காட்டும் வினைபோற்றி - நாட்டுகின்ற
எப்பிறப்பும் முற்செய் இருவினையால் நிச்சயித்துப்
பொற்புடைய தந்தைதாய் போகத்துட் - கர்ப்பமாய்ப்
புல்லிற் பனிபோற் புகுந்திவலைக் குட்படுங்கால் 15
எல்லைப் படாஉதரத் தீண்டியதீப் - பல்வகையால்
அங்கே கிடந்த அநாதியுயிர் தம்பசியால்
எங்கேனு மாக எடுக்குமென - வெங்கும்பிக்
காயக் கருக்குழியிற் காத்திருந்துங் காமியத்துக்
கேயக்கை கால்முதலாய் எவ்வுறுப்பும் - ஆசறவே
செய்து திருத்திப்பின் பியோகிருத்தி முன்புக்க
வையவழி யேகொண் டணைகின்ற - பொய்யாத
வல்லபமே போற்றியம் மாயக்கால் தான்மறைப்ப
நல்ல அறிவொழிந்து நன்குதீ - தொல்லையுறா
அக்காலந் தன்னில் பசியையறி வித்தழுவித்(து) 20
உக்காவி சோரத்தாய் உள்நடுங்கி - மிக்கோங்குஞ்
சிந்தை உருக முலையுருகுந் தீஞ்சுவைப்பால்
வந்துமடுப் பக்கண்டு வாழ்ந்திருப்பப் - பந்தித்த
பாசப் பெருங்கயிற்றாற் பல்லுயிரும் பாலிக்க
நேசத்தை வைத்த நெறிபோற்றி - ஆசற்ற
பாளைப் பசும்பதத்தும் பாலனாம் அப்பதத்தும்
நாளுக்கு நாட்சகல ஞானத்து - மூள்வித்துக்
கொண்டாள ஆளக் கருவிகொடுத் தொக்கநின்று
பண்டாரி யான படிபோற்றி - தண்டாத
புன்புலால் போர்த்த புழுக்குரம்பை மாமனையில் 25
அன்புசேர் கின்றனகட் டைந்தாக்கி - முன்புள்ள
உண்மை நிலைமை ஒருகால் அகலாது
திண்மை மலத்தாற் சிறையாக்கிக் - கண்மறைத்து
மூலஅருங் கட்டில்உயிர் மூடமாய் உட்கிடப்பக்
கால நியதி யதுகாட்டி - மேலோங்கு
முந்திவியன் கட்டில்உயிர் சேர்த்துக் கலைவித்தை
யந்த அராக மவைமுன்பு - தந்த
தொழிலறி விச்சை துணையாக மானின்
எழிலுடைய முக்குணமும் எய்தி - மருளோடு
மன்னும் இதயத்திற் சித்தத்தாற் கண்டபொருள் 30
இன்ன பொருளென் றியம்பவொண்ணா - அந்நிலைபோய்க்
கண்டவியன் கட்டிற் கருவிகள்ஈ ரைந்தொழியக்
கொண்டுநிய மித்தற்றை நாட்கொடுப்பப் - பண்டை
இருவினையால் முன்புள்ள இன்பத்துன் பங்கள்
மருவும்வகை அங்கே மருவி - உருவுடன்நின்(று)
ஓங்கு நுதலாய ஓலக்க மண்டபத்திற்
போங்கருவி யெல்லாம் புகுந்தீண்டி - நீங்காத
முன்னை மலத்திருளுள் மூடா வகையகத்துட்
டுன்னும்இருள் நீக்குஞ் சுடரேபோல் - அந்நிலையே
சூக்கஞ் சுடருருவிற் பெய்து தொழிற்குரிய 35
ராக்கிப் பணித்த அறம்போற்றி - வேட்கைமிகும்
உண்டிப் பொருட்டால் ஒருகால் அவியாது
மண்டிஎரி யும்பெருந்தீ மாற்றுதற்குத் - திண்டிறல்சேர்
வல்லார்கள் வல்ல வகையாற் றொழில்புரித
லெல்லாம் உடனே ஒருங்கிசைந்து - சொல்காலை
முட்டாமற் செய்வினைக்கு முற்செய்வினைக் குஞ்செலவு
பட்டோலை தீட்டும் படிபோற்றி - நட்டோங்கும்
இந்நிலைமை மானுடருக் கேயன்றி எண்ணிலா
மன்னுயிர்க்கும் இந்த வழக்கேயாய் - முன்னுடைய
நாள்நாள் வரையில் உடல்பிரித்து நல்வினைக்கண் 40
வாணாளின் மாலாய் அயனாகி - நீள்நாகர்
வானாடர் கோமுதலாய் வந்த பெரும்பதத்து
நானா விதத்தால் நலம்பெறுநாள் - தான்மாள
வெற்றிக் கடுந்தூதர் வேகத் துடன்வந்து
பற்றித்தம் வெங்குருவின் பாற்காட்ட - இற்றைக்கும்
இல்லையோ பாவி பிறவாமை என்றெடுத்து
நல்லதோர் இன்சொல் நடுவாகச் - சொல்லிஇவர்
செய்திக்குத் தக்க செயலுறுத்து வீர்என்று
வெய்துற் றுரைக்க விடைகொண்டு - மையல்தருஞ்
செக்கி னிடைத்திரித்துந் தீவாயி லிட்டெரித்துந் 45
தக்கநெருப் புத்தூண் தழுவுவித்தும் - மிக்கோங்கு
நாராசங் காய்ச்சிச் செவிமடுத்தும் நாஅரிந்தும்
ஈராஉன் ஊனைத்தின் என்றடித்தும் - பேராமல்
அங்காழ் நரகத் தழுத்துவித்தும் பின்னுந்தம்
வெங்கோபம் மாறாத வேட்கையராய் - இங்கொருநாள்
எண்ணிமுதற் காணாத இன்னற் கடுநரகம்
பன்னெடுநாட் செல்லும் பணிகொண்டு - முன்நாடிக்
கண்டு கடன்கழித்தல் காரியமாம் என்றெண்ணிக்
கொண்டுவரு நோயின் குறிப்பறிவார் - மண்டெரியிற்
காய்ச்சிச் சுடவறுக்கக் கண்ணுரிக்க நன்னிதியம் 50
ஈய்த்துத்தாய் தந்தைதமர் இன்புறுதல் - வாய்த்தநெறி
ஓடியதே ரின்கீழ் உயிர்போன கன்றாலே
நீடுபெரும் பாவம் இன்றே நீங்குமென - நாடித்தன்
மைந்தனையும் ஊர்ந்தோன் வழக்கே வழக்காக
நஞ்சனைய சிந்தை நமன்தூதர் - வெஞ்சினத்தால்
அல்ல லுறுத்தும் அருநரகங் கண்டுநிற்க
வல்ல கருணை மறம்போற்றி - பல்லுயிர்க்கும்
இன்ன வகையால் இருவினைக்கண் நின்றருத்தி
முன்னைமுத லென்ன முதலில்லோன் - நல்வினைக்கண்
எல்லா உலகும் எடுப்புண் டெடுப்புண்டு 55
செல்காலம் பின்நரகஞ் சேராமே - நல்லநெறி
எய்துவதோர் காலம்தன் அன்பரைக்கண் டின்புறுதல்
உய்யும் நெறிசிறிதே உண்டாக்கிப் - பையவே
மட்டாய் மலராய் வருநாளில் முன்னைநாள்
மொட்டாய் உருவாம் முறைபோலக் - கிட்டியதோர்
நல்ல பிறப்பிற் பிறப்பித்து நாடும்வினை
எல்லை யிரண்டும் இடையொப்பிற் - பல்பிறவி
அத்தமதி லன்றோ அளவென்று பார்த்திருந்து
சத்தி பதிக்கும் தரம்போற்றி - முத்திதரு
நன்னெறிவிஞ் ஞானகலர் நாடுமலம் ஒன்றினையும் 60
அந்நிலையே உள்நின் றறுத்தருளிப் - பின்அன்பு
மேவா விளங்கும் பிரளயா கலருக்குத்
தேவாய் மலகன்மந் தீர்த்தருளிப் - பூவலயந்
தன்னின்று நீங்காச் சகலர்க் கவர்போல
முன்நின்று மும்மலந்தீர்த் தாட்கொள்கை - அன்னவனுக்
காதிகுண மாதலினால் ஆடுந் திருத்தொழிலுஞ்
சோதி மணிமிடற்றுச் சுந்தரமும் - பாதியாம்
பச்சை யிடமும் பவளத் திருச்சடைமேல்
வைச்ச நதியும் மதிக்கொழுந்தும் அச்சமற
ஆடும் அரவும் அழகார் திருநுதல்மேல் 65
நீடுருவ வன்னி நெடுங்கண்ணுங் - கேடிலயங்
கூட்டுந் தமருகமுங் கோல எரியகலும்
பூட்டரவக் கச்சும் புலியதளும் - வீட்டின்ப
வெள்ளத் தழுத்தி விடுந்தாளி னும்அடியார்
உள்ளத்தி னும்பிரியா ஒண்சிலம்பும் - கள்ளவினை
வென்று பிறப்பறுக்கச் சாத்தியவீ ரக்கழலும்
ஒன்றும்உருத் தோன்றாமல் உள்ளடக்கி - என்றும்
இறவாத இன்பத் தெமைஇருத்த வேண்டிப்
பிறவா இன்பத் தெமைஇருத்த வேண்டிப்
பிறவா முதல்வன் பிறந்து - நறவாருந்
தாருலா வும்புயத்துச் சம்பந்த நாதனென்று 70
பேரிலா நாதன்ஒரு பேர்புனைந்து - பாரோர்தம்
உண்டி உறக்கம் பயம்இன்பம் ஒத்தொழுகிக்
கொண்டு மகிழ்ந்த குணம்போற்றி - மிண்டாய
ஆறு சமயப் பொருளும்அறி வித்தவற்றிற்
பேறின்மை எங்களுக்கே பேறாக்கித் - தேறாத
சித்தந் தெளியத் திருமேனி கொண்டுவரும்
அத்தகைமை தானே அமையாமல் - வித்தகமாஞ்
சைவ நெறியிற் சமய முதலாக
எய்தும் அபிடேகம் எய்துவித்துச் - செய்யதிருக்
கண்ணருளால் நோக்கிக் கடியபிறப் பாற்பட்ட 75
புண்ணும் இருவினையும் போய்அகல - வண்ணமலர்க்
கைத்தலத்தை வைத்தருளிக் கல்லாய நெஞ்சுருக்கி
மெய்த்தகைமை யெல்லாம் விரித்தோதி - ஒத்தொழுகும்
சேண்ஆர் இருள்வடிவும் செங்கதிரோன் பால்நிற்பக்
காணா தொழியும் கணக்கேபோல் - ஆணவத்தின்
ஆதி குறையாமல் என்பால் அணுகாமல்
நீதி நிறுத்தும் நிலைபோற்றி - மேதக்கோர்
செய்யுஞ் சரியை திகழ்கிரியா யோகத்தால்
எய்துஞ்சீர் முத்திபதம் எய்துவித்து - மெய்யன்பாற்
காணத் தகுவார்கள் கண்டால் தமைப்பின்பு 80
நாணத் தகும்ஞான நன்னெறியை - வீணே
எனக்குத் தரவேண்டி எல்லாப் பொருட்கும்
மனக்கும் மலரயன்மால் வானோர் - நினைப்பினுக்குந்
தூரம்போ லேயணிய சுந்தரத்தாள் என்தலைமேல்
ஆரும் படிதந் தருள்செய்த - பேராளன்
தந்தபொருள் ஏதென்னில் தான்வேறு நான்வேறாய்
வந்து புணரா வழக்காக்கி - முந்திஎன்றன்
உள்ளம்என்றும் நீங்கா தொளித்திருந்து தோன்றிநிற்குங்
கள்ளம்இன்று காட்டும் கழல்போற்றி - வள்ளமையால்
தன்னைத் தெரிவித்துத் தன்றாளி னுட்கிடந்த 85
என்னைத் தெரிவித்த எல்லையின்கண் - மின்ஆரும்
வண்ணம் உருவம் மருவுங் குணமயக்கம்
எண்ணுங் கலைகாலம் எப்பொருளும் - முன்னம்எனக்(கு)
இல்லாமை காட்டிப்பின் பெய்தியவா காட்டிஇனிச்
செல்லாமை காட்டுஞ் செயல்போற்றி - எல்லாம்போய்த்
தம்மைத் தெளிந்தாராய்த் தாமே பொருளாகி
எம்மைப் புறங்கூறி இன்புற்றுச் - செம்மை
அவிகாரம் பேசும் அகம்பிரமக் காரர்
வெளியாம் இருளில் விடாதே - ஒளியாய்நீ
நின்ற நிலையே நிகழ்த்தி ஒருபொருள்வே 90
றின்றி யமையாமை எடுத்தோதி - ஒன்றாகச்
சாதித்துத் தம்மைச் சிவமாக்கி இப்பிறவிப்
பேதந் தனில்இன்பப் பேதமுறாப் - பாதகரோ(டு)
ஏகமாய்ப் போகாமல் எவ்விடத்துங் காட்சிதந்து
போகமாம் பொற்றாளி னுட்புணர்த்தி - ஆதியுடன்
நிற்க அழியா நிலைஇதுவே என்றருளி
ஒக்க வியாபகந்தன் னுட்காட்டி - மிக்கோங்கும்
ஆநந்த மாக்கடலில் ஆரா அமுதளித்துத்
தான்வந்து செய்யுந் தகுதியினால் - ஊன்உயிர்தான்
முன்கண்ட காலத்தும் நீங்காத முன்னோனை 95
என்கொண்டு போற்றிசைப்பேன் யான்.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க



 
 

பொழிப்புரை :

1-4. பூமன்னும் நிருத்த நிலை போற்றி :
(உரை) பொற்றாமரைப் பூவில் நிலைபெற்று நான்கு முகத்தோ டெழுந்தருளி யிருக்கின்ற பிரமனும், தேவர்களும், அவர்களுக்கு மன்னனாகிய தேவேந்திரனும், திருமகள் பொருந்திய மார்பில் மிகுந்த பிரகாசமுடைய கௌத்துவ மணி தரித்திருக்கிற விஷ்ணுவும், சகல பொருண்மையும் நாவிலிருந்து சொல்லுகிற வேதங்களும், வேத முடிவான உபநிடதங்களும், சகல அறிவும் விளக்கஞ் செய்கிற விந்துவும், அதற்குள்ளொளியாகிய நாதமும் குடிலையும் தத்தம் இதயத்தில் தோன்றிய போதச் செயல்களால் ஆமளவுந் தேடவும் அளவுபடாமல் அப்பாற்பட்டிருக்கிற பேரின்பவொளியாகிய பதி ஆன்மாக்களை இரக்ஷிக்க வேண்டுமென்கிற கிருபை ஜனித்து எவர்களும் பத்தியுடனே தரிசித்து மலமயக்கம் நீங்கித் தெளிந்து தேறும்படிக்கு மிகுந்த இரத்தின மணிகள் சூழ்ந்து விளங்காநின்ற அழகிய திருச்சிற்றம்பலத்துள் ஞானப்பிரகாசம் நிறைந்து தோன்ற நின்று ஆன்மாக்களுடைய பிறவித் தொடர் பறுக்கச் செய்யும் ஆனந்த நிருத்தநிலை எம்மை இரக்ஷிக்க.
4-6. குன்றாத பெரியவழி போற்றி :
(உரை) அநாதியாய் எண்ணிறந்த ஆன்மாக்கள் மோக்ஷமடைந் திருக்கவும் குறைவில்லாமல் நித்தியமாய் அளவிறந்திருக்கிற பெத்தான் மாக்களைக் கன்மத்துக்கீடான தேகங்களில் சராயுஜம் அண்டஜம் சுவேதஜம் உத்பீஜம் ஆகிய நால்வகை யோனிகளிலும் மாறி மாறி வேறு வேறாகப் படைத்தும் அவ்வான்மாக்களுக்குள்ள அரிய வினைப் போகங்களை ஏறாமற் குறையாமற் கூட்டிப் புசிப்பித்தும் சர்வ சங்கார காலத்தில் ஆன்மாக்கள் சகலாவத்தைப் பட்டுப் பிறந்து இறந்து அலைந்து திரிந்த இளைப்பு நீங்கும்படிக்குக் காரண கேவலாவத்தையில் ஒடுக்குவித்தும் அநாதியே தொடுத்து ஆதியாய்ச் சிருஷ்டித்துந் திதித்துஞ் சங்கரித்தும் அளவிறந்து ஆதி நடுவந்தமற்று வருகிற பெரிய கிருத்திய வழி எம்மை இரக்ஷிக்க.
6-13. முந்துற்ற வினைபோற்றி :
(உரை) ஆன்மாக்கள் நித்தியமாயிருக்கச் சிருஷ்டிப்பட்டுந் திதிப் பட்டுஞ் சங்காரப்பட்டும் வருவானேனென்னில், அநாதியிலே மலத்திலே பந்திக்கப் பட்டிருக்கையினாலே மலம் நீங்கும் படிக்குக் கர்த்தா கிருபையினாலே செய்வித்ததாயிருக்கும். ஆனால் மலம் ஆன்மாக்களைப் பந்தித்த தெப்படியென்னில், முன்னேயுண்டான நெல்லுக்கு உமிதவிடு முளை முற்பிற்பாடில்லாமல் அநாதியிலே கூடத்தோன்றினதாயிருக்கும். இதில் ஆணவமலம் ஆன்மாவின் அறிவை மறைத்த தெப்படியென்னில், செம்பினுடைய நிறத்தைக் காளிதங் கூட உதித்து மறைத்தது போன்றிருக்கும். கர்த்தாவினுடைய வியாபகத்திலே ஆன்மாக்கள் நிறைந்திருக்கவும் ஆணவமலம் உயிரை மறைத்தது எப்படியென்னில், பழமையாகிய கடல் வியாபகத்திலே நிறைந்திருக்கிற தண்ணீரை உப்புக் கலந்து பிடித்திருப்பது போன்றிருக்கும். இப்படி யெல்லாம் வெவ்வேறாய் ஒருபுடை யொப்பாகக் கர்த்தா உள்ளவன்றே யுண்டாய் அருவமாய் மூவகையான்மாக்களையும் ஆணவமலம் பிடித்து உருவையுடைய மகத்தான மாணிக்க மணியை நஞ்சுவாய்க்கு ளடக்கின மகத்தாகிய சர்ப்பம் போலவும் பச்சையாய் முளைத்து விறகாகுமட்டும் அக்கினியைத் தெரியாமல் மறைத்து வைத்திருந்த காஷ்டம் போலவும் ஆன்மாவினுடைய ஞானக் கண்ணை மறைத்த கடுந்தொழிலையுடைய ஆணவமலத்தினாலே அறிவுஞ் செயலும் இறந்த சகல உயிர்களுக்குங் கர்த்தா கிருபையினாலே நன்றாய் அவர்களிச்சையை நாடிப் பார்த்துக் கட்புலனாற் காணாத பிறவியந்தகர்க்கு உரிமையுள்ளவர்கள் இச்சித்த படிக்குக் கோலைக் கொடுத்து இச்சித்த இடங்களிலே கொண்டுபோய் விடுகிறது போலப் பொலிவினையுடைய மாயையின் காரியமான தனுகரண புவன போகங்களையும் முன்னே யுண்டாக்கிக் கொடுத்து இச்சித்த புவனங்களிலே இச்சித்த வினைப் போகங்களையும் கூட்டி முடித்துப் புசிப்பிக்கையினும் அந்த ஆணவமல மயக்கத்தாற் கர்த்தா வுபகாரத்தை மறந்து நாமென்கிற அந்தக்கரண விகார ஹிதாஹித முண்டாகையாற் புண்ணிய பாவமிரண்டும் உண்டாம்படி காட்டி அந்தப் புண்ணிய பாவத்தினாற் பிறக்கும் பிறவியுண்டாக்கி அதனாற் செய்யு மிருவினைகளையும் ஏற்றுக்கொண்டு மீண்டும் அந்த வினைப் போகங்களைப் புசிப்பதற்குக் கலாதி ஞானங்களையுங் காட்டுங் கிருபைத் தொழில் எம்மை இரக்ஷிக்க.
13-19. நாட்டுகின்ற வல்லபமே போற்றி :
(உரை) கர்த்தா ஆன்மாக்களுக்கு வினைப்போகங்களைப் புசிப்பிக்கிறதற்குத் தேகங்களைக் கூட்டுகிற முறைமை சொல்லுமிடத்து முன்பு ஆகமங்களிலே சொல்லப்பட்ட எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதப் பிறப்பின் வகையெல்லாம் முன் செய்த இருவினைக் கீடாக உண்டாம்படி திருவுள்ளத்திலே நிச்சயித்துப் பல பிரகாரம் வெவ்வேறு தேகபேதங்களை யுண்டாக்குவதுமல்லாமல் மானுட தேகமுண்டாக்குவ தெப்படியென்னின், அழகு பொருந்திய தந்தையுந் தாயுங் காமவிகாரம் தீரும்படிக்குச் சையோகபோகஞ் செய்யுங் காலத்து அவர்களுக்குப் பிள்ளைப்பேறு உண்டு இல்லையென்பதும் அறிந்து தாயினுடைய கருப்பத்தில் தந்தை புல்லினுனியிற் றங்கிய பனித்திவலை போன்ற விந்துவை விடும்போது அதற்குள் உயிரை யடக்கி உட்கருப்பாசயத்திற் சுரோணிதத்துடனே கலப்பித்து இருத்தி அந்த விந்து தாய் வயிற்றில் அளவற்றிருக்கின்ற உதராக்கினியினால் எரிசுவற்றாமலும் பல வகையாகிய அந்த வயிற்றுக்குட் கிடந்த அநாதி யுயிர்களாகிய புழுக்கள் தங்கள் பசியினாலே அந்த விந்துவை விரைவிலே யெடுத்துப் புசியாமலும் வெய்ய கும்பிநரகம் போன்ற காயக் கருக்குழியிற் காத்திருந்து வினைக்கீடான கை கால் முதலாகிய சகல உறுப்புங் குற்றமறச் செய்து அழகு பொருந்தத் திருத்திப் பின்பு அத்தேகத்தை யெடுத்து நேரே யோகத்தி லிருத்தித் திரிகால வர்த்தமானங்களையும் அறியும்படிக்கு உணர்வையுங் கொடுத்துப் பத்துமாதவரைக்கும் புசிப்புங் கொடுத்துப் பின்பு பூமியிலே பிறக்கும்போது இரண்டு கையுஞ் சிரசிலே குவித்த பாவனையாய்த் தலைகீழாய் வரும்படி செய்து முன் புகுந்த சிறுவழியைப் பெருவழியாக்கி அவ்வுயிர் துன்புற்று இறவாமல் உயிருக்குயிராய் அணைத்திருந்து வெளியிலே யிழுத்துக்கொண்டு வருகிற மெய்ம்மையாகிய வல்லபம் எம்மை இரக்ஷிக்க.
19-22. அம்மாயக்கால் நெறி போற்றி :
(உரை) தாய் வயிற்றை விட்டுப் பூமியிலே பிள்ளை பிறந்தவுடனே சரீரத்துக்குக் காரணமான மாயை சண்டமாருதம் போல் அலைத்து மயக்க, முன் கருப்பத்தினிருக்கும்போது இப்பிறவித் துன்பத்தை நீக்கிக் கொள்ள வேண்டுமென்று அவ்விடத்திலே நினைத்திருந்த நல்ல நினைவையும் மறந்து உயிர் தேக மயமாய் நல்வினை தீவினைத் துன்பத் தொடர்ச்சியாற் பகுத்தறிவில்லாமல் அக்காலத்தில் உயிர் புசிப்பிச்சையுற் றிருப்பதை யறிந்து பசிதெரியும்படி அறிவித்துக் கதறியழும்படி செய்வித்துப் பிள்ளை யழுவதுகண்டு உடனே பெறும்போதுற்ற வருத்தத்தையுந் தாயானவள் மறந்து உட்கி ஆவிசோரும்படி யுள்ளே நடுங்கி மிகுந்தோங்கிய அன்பினாலே அவள் சிந்தையிரங்கி யுருகப் பச்சுடம்பிலிருந்த இரத்தஞ் சிவப்பு மாறி வெண்ணிற அமுதமாய்க் கொங்கையில் வந்து சுரக்கிற அந்தத் தீஞ்சுவைப் பாலைப் பிள்ளை வாய்வைத்துக் குடித்து முகஞ்செழித் திருப்பது கண்டு தாய் மகிழ்ந்திருக்கும்படி செய்வித்து இப்படிப் பிள்ளையாசை யென்கிற பெருங் கயிற்றாற் கட்டிச் சகல உயிர்களுக்குங் குழந்தைகளை வளர்க்கும்படிக்கு ஆன்மாக்கள் தோறும் நேசத்தை வைத்தருளிய நெறி எம்மை இரக்ஷிக்க.
22-24. ஆசற்ற படிபோற்றி :
(உரை) தாயன்பாயிருந்து இரக்ஷித்த கர்த்தா இப்படி ஜநித்து வரும் உயிர்களுக்குக் கருப்பத்திலிருக்கிற பசும்பருவத்தும் பாலனாயிருக்கிற அந்தப் பருவத்தும் நாளுக்கு நாள் பரிணமித்து வளரும் பாலகுமார விருத்தப்பருவத்துஞ் சகலாவத்தைப்படுத்திப் பருவத்துக் கேதுவான கலாதிஞானத்தைக் கொடுத்துச் செயலற்ற உயிர்கள் வாங்கிக்கொள்ள ஆள்வதற்கேற்ற முப்பத்தாறு வகைக் கருவிகளையுங் கொடுத்து உயிர்க்குயிராய் இமைப்பொழுதும் நீங்காமல் நின்று பண்டாரியாய் உயிர்க்கு ஏவல் செய்யும் கிருபை எம்மை இரக்ஷிக்க.
24-35. தண்டாத அறம் போற்றி :
(உரை) கர்த்தா பண்டாரிபோல நின்று தத்துவங்களைக் கூட்டி இரக்ஷிக்கும்படி எப்படியென்னில், நீங்காமற் புன்புலால் நாறுந் தோல் போர்த்த புழுக்கூடான சரீரமாகிய பெரியமனைக்குள் கிருபையினாலே துரியாதீதந் துரியம் சுழுத்தி சொப்பனம் சாக்கிரமென்னும் பெயரையுடைய ஐந்துகட்டாக்கி, ஆன்மாவுக்கு அநாதியிலே பொருந்தின உண்மை நிலைமையான ஆணவமல மறைப்புச் சற்றும் நீங்காமல் திண்மையாய் உயிரைச் சிறைப்படுத்தி நிற்கும் மூலாதாரமாகிய வீட்டில் அதீதப்பட்டு உயிர் மூடமாய் உட்கிடப்ப அவ்விடத்தில் இளைப்பாறு மட்டுங் காலத்தை நியதியினால் நிறுத்தி, அப்பால் மேலே ஓங்கியிருக்குந் துரியமான நாபித்தான வீட்டில் உயிரைப் பிராணவாயு வுடனே கூடச்சேர்த்து அவ்விடத்திலே கலை வித்தை இராகத்தினால் முன்னே ஆன்மாவினுடைய தொழில் அறிவு இச்சை மூன்றையும் எழுப்பி அதற்குத் துணையாகப் பிரகிருதிமாயையி லுண்டான அழகு பொருந்திய சாத்துவிக ராசத தாமத மென்னும் முக்குணங்களையுஞ் சேர்த்து, அப்பால் மேலே சுழுத்தி வீடாகிய இருதயத் தானத்திற் சித்தக் கருவியுடனே கூட்டி, அவ்விடத்திற் சித்தத்தாற் கண்ட பொருள் இன்ன பொருளென் றறியாமல் மயங்கி நின்ற உயிரைச் சொப்பன வீடாகிய கண்டத்தானத்திற் சேர்த்து அவ்விடத்திலே சத்தாதியைந்தும் வசனாதியைந்தும் அந்தக்கரணங்கள் நான்கும் வாயுக்கள் பத்தும் புருடனுமான இருபத்தைந்து கருவியுங் கூட்டி முன்னே செய்த இருவினைக்கீடாக முன் சாக்கிரத்திலே இன்ப துன்பத்தைப் புசிப்பித்த முறைமைபோலச் சொப்பனத்திலும் இருவினைப் போகம் உண்டானதுமறிந்து சுத்ததத்துவங்களினாற் பிரேரித்துப் புசிப்பித்து, பின்பு அதற்கு மேலாய தூலதேகத்தின்கண் வளர்ந்து நிற்கிற சாக்கிர வீடென்னும் நுதற்றானமாகிய ஓலக்கமண்டபத்தின்முன் கேவலாவத்தைக்குக் கூடாமல் நின்ற பூதங்கள் ஐந்தும் புருடதத்துவம் நீங்கலாக நின்ற வித்தியாதத்துவம் ஆறுஞ் சிவதத்துவம் ஐந்தும் ஆகப் பதினாறும் முன் சாக்கிரத்திலிருந்த ஞானேந்திரியம் ஐந்துங் கன்மேந்திரியம் ஐந்துஞ் சொப்பனத்திலிருந்து வந்த இருபத்தைந்து கருவியும் மற்றப் புறக்கருவிகள் நாற்பத்தைந்தும் ஆகத் தொண்ணூற்றாறு கருவிகளையும் பொருத்தி ஜீவிக்கும்படி செய்வித்து, முன்னே விட்டு நீங்காமல் ஐந்தவத்தையினும் மறைந்து நின்ற ஆணவமல இருள் கூடாதபடி மனையிலே நெருங்கியிராநின்ற இருளை நீக்கும் விளக்கைப் போலச் சூக்குமாதி வாக்குடனே கூடிப் பிரகாசித்து நிற்குஞ் சகலாவத்தையில் உயிரை நிறுத்திக் கன்மத்துக் கேதுவான சத்தாதி விடயங்களைக் காட்டி ஆன்மாக்கள் யானென தென்று கர்ஜித்து நின்றவர்கள் வெவ்வேறு தொழிற்குரியராம்படி செய்விக்குஞ் சிவதருமம் எம்மை இரக்ஷிக்க.
35-38. வேட்கைமிகும் படிபோற்றி:
(உரை) கர்த்தா சகலாவத்தையிற் கருவி கூட்டி முடிக்கும் உபகாரத்தை மறந்து ஆன்மாக்கள் பிரபஞ்ச ஆசை மிகுந்து புசிப்பு நிமித்தம் ஒருகண நேரமானாலுங் கெடாமல் வயிற்றிலே மண்டியெரிந்து கொண்டிருக்கிற வடவாமுகாக்கினி போன்ற பசியைத் தணிக்கும் பொருட்டுத் திண்ணிய ஆங்காரப் பலன்களால் அவரவர் வல்லமைக் கேற்ற தொழில்கள் செய்யுமிடத்து அவர்களுக்குத் தோன்றாமல் உடன் நிகழ்ச்சியான ஒருமைப்பாடாய்க் கூடி நின்று அவரவர் நினைவின்படி செய்வித்துக் கொடுத்து ஆன்மாக்கள் யானெனதென்று இடையறாது செய்யும் வினை மிகுதியான ஆகாமியத்துக்கும் முன்செய்த ஆறத்து வாவிலுங் கட்டுப்பட்டிருக்கிற சஞ்சிதத்துக்கும் அதிலே பாகப்பட்டுப் புசிப்புக்கு வந்த பிராரத்துவச் செலவுக்கும் அவரவர் கணக்கப்பிள்ளை யாயிருந்து பட்டோலை யெழுதி யொப்பிக்குங் கருணை இரக்ஷிக்க.
38-53. நட்டோங்கும் மறம்போற்றி :
(உரை) கர்த்தா ஆன்மாக்கள் செய்த இருவினைக்குங் கணக்கெழுதின படிக்குப் புண்ணிய பாவத்துக்குள்ள பலன்களைக் கூட்டுகிறது எப்படியென்னில், பொருந்தி மிகுந்த இருவினை முறைமை பூமியிலுள்ள மானுடருக்கே யல்லாமலும் எண்ணில்லாத தனுக்களிலே பொருந்தியிருக்கிற பல உயிர்களுக்கும் இந்த முறைமையாக வினைகளை நிச்சயித்தறிந்து முன் அமைத்த ஆயுள் முடிவில் உடல்களைப் பிரித்து நல்வினை பாகப்பட்ட உயிர்களையெல்லாம் பூதசரீரமான திவ்விய சரீரத்துடனே காலநீட்டிப்பாய் வாழ்ந்திருக்கும்படிக்கு விஷ்ணுவுலகத்தில் விஷ்ணு ரூபமாயும் பிரமலோகத்திற் பிரமரூபமாயுந் தேவலோகத்தில் தேவேந்திர ரூபமாயுந் தேவர்களாயும் வந்த பெரிய பதப்பிராப்திகளிலே நானாவிதமான போகங்கள் புசித்திருக்கும்படி செய்வித்தும், பூமியிலே இராஜ ஐசுவரியத்துடனே வாழும்படி செய்வித்து மிருக்கும் நாராயண(?) புண்ணிய கன்மபலன் புசித்து முடிந்து பாவகன்ம பலன் புசிக்கும் நாள் அடுத்தவுடனே அங்கங்கு வாழ்ந்திருந்த உயிர்கள் அந்தந்தத் தேகத்தை விட்டு மாளும்படிக்குக் கர்த்தாவினுடைய ஆக்கினையினாலே வெற்றி பொருந்திய யமதூதர்கள் வேகத்துடனே வந்து பாசத்தினாற் கட்டிப் பிடித்துக் கொண்டு போய்த் தங்கள் யஜமானாகிய தருமராஜாவின் முன்புவிடத் தருமராஜர் வந்து ஆன்மாக்களைப் பார்த்து இரங்கி, ‘பாவிகாள் ! உங்களுக்கு இற்றைவரைக் குள்ளாகப் பிறவாநெறி பெறவேண்டுமென்று கர்த்தாவை விரும்பும் அறிவு பிறக்கவில்லையோ’ என்று நல்ல இன்சொல்லாக நடுவுநிலைமையாய்ப் பேசிப் பின்பு அவர்கள் செய்த பாவத்துக்கேற்ற செயல்களைச் செய்யுமென்று கோபத்துடனே கிங்கரர்களைப் பார்த்துச் சொல்ல, விடைபெற்றுப் பூதசரீரமான யாதனா சரீரத்திலே உயிரை நிறுத்தித் துன்பமுறும்படிக்குச் செக்கிலேயிட் டாட்டியும், தீவாயிலிட் டெரித்தும், பெரிய நெருப்புத் தூணைத் தழுவிக் கிடக்கும்படிச் செய்தும், மிகுந்து நீண்டிருக்கிற நாராசங்களைக் காய்ச்சிச் செவியிலே செலுத்தியும், நாக்கைக் கருவிகொண்டறுத்தும், அவரவர் ஊனை அவரவர் தின்னும்படிக்கு அரிந்து கொடுத்து அடித்தும், பேராதபடி ஆழ்ந்த நரகங்களிலே அழுத்துவித்தும், பின்னுந் தங்களுடைய கடுங்கோபமாறாத இச்சையுடையராய் அவற்றிலே ஒருநாள் போல் துன்பத்தைக் கொடாநின்ற கொடிய நரகங்களிலே பல நெடுநாள் செல்லுமட்டும் இயமகிங்கரர்கள் பணி செய்யக் காருண்ணிய வடிவாகிய கர்த்தா சிற்றுயிர்களை யமகிங்கரர்களிடத்திலே காட்டிக் கொடுத்து அவர்கள் துக்கப்படுகிறதைப் பார்த்திருப்பானேனென்னில், உலகத்திலே தந்தை தாயான பேர்கள் பிள்ளையினுடைய நோய் மிகுதியை உள்ளே நாடியறிந்து நோய் தீரும்படிக்கு அதற்கேற்ற முறைமை செய்வது கடனென்று நினைந்து பிள்ளையை நோயறிந்து மருந்து கொடுத்துத் தீர்க்கும் வைத்தியத் தொழில் செய்கிறவனிடத்திலே ஒப்புவித்து, அவன் இருப்பு நாராசங் காய்ச்சிச் சுடவும் சத்திரமிட்டு அறுக்கவும், கண்படலத்தை உரிக்கவும், இப்படிப் பல கிரியையுஞ் செய்யப் பிள்ளை வருத்தப்பட்டாலும் நோய் தீர்ப்பதை யறிந்து அந்த வைத்தியனுக்கு நல்ல திரவியமுதலான வெகுமானம் பண்ணிச் சந்தோஷத்துடனே அவர்கள் கண்டு நிற்பதுபோலவும், மனுச்சக்கிரவர்த்தியான சோழராஜா தான் அரிய தவம் பண்ணிப் பெற்ற அருமையான ஒரு மகன் திருவாரூர்த் தெருவழியே தேரேறிப் போம்பொழுது மாயமாகத் தேர்க்காலில் வீழ்ந்து இறந்த பசுவின் கன்றினிமித்தம் அந்தப் பாவந் தீரும்படிக்கு எத்தனை பேர்கள் மாறுபாடாய்த் தடுக்கவுங் கேளாமற் பிள்ளையைக் கன்று தங்கின படிக்குத் தேர்க்காலிலே போட்டு நசுக்கிப் போடவேண்டு மென்று துணிந்து தேரிலே தாய்ப்பசுவை வைத்து ஊர்ந்து கொன்றது மகனை யமன்பிடித்து வருத்தாதபடிக்குச் செய்த கிருபையே யாகையால் அந்த வழக்குப்போலவும், விடம்போன்ற சிந்தையையுடைய நமன் தூதர் மிகுந்த கோபத்துடனே பாவஞ்செய்த உயிர்களைக் கொடிய நரக வாதனைப் படுத்துவதைச் சகல உயிர்களுக்குந் தந்தையுந் தாயுமாயிருக்கிற சிவமுஞ் சத்தியும் மலநோய் தீர்ந்தாற் போதுமென்று சந்தோஷத்துடனே கண்டு நிற்கிற வல்லபமான கருணை மறம் எம்மை இரக்ஷிக்க.
53-59. பல்லுயிர்க்கும் தரம்போற்றி :
(உரை) கர்த்தா இங்ஙனஞ் சொன்ன ஒன்பது வகையினாலும் இரக்ஷிக்கப்பட்ட ஆன்மாக்களுக்குப் பெத்தகாலம் முடிவாகுமட்டும் இருவினைப் பலன்களை அவன் அவள் அது முன்னிலையாக நின்றருத்தித் தனக்குமேல் ஒரு கர்த்தா இல்லாத சகல புவனகர்த்தாவாகிய சிவன் அந்த இருவினைகளுக்கு இருப்பிடமான மாயாவுலகங்களை எடுப்புண்டு எடுப்புண்டு மாறிமாறி வரும்படிக்கு ஆதியாய் அநாதிதொடுத்துச் சிருஷ்டித்துந் திதித்துஞ் சங்கரித்துந் திரோபவித்தும் அநுக்கிரகித்துந் தமது சத்தியினாலே பஞ்சகிருத்தியங்களைச் செய்வித்தும் மலபரிபாகப்பட்டதை அறிந்து பின் நரகத்திற் செல்லும் பெத்தத்தை நீக்கி, ஆன்மாக்களுக்கு முத்திக் காலத்தை ஏற்படுத்த வேண்டித் தனக்கு அன்பராகிய மெய்யடியார்களைக் கண்டவுடனே தன்னைக் கண்டதுபோல அந்த ஆன்மாக்கள் இன்புற்று அவர் ஏவின பணிவிடை கேட்டுய்யும் படிக்குச் சிறிது நல்லவழியை யுண்டாக்கிக் காட்டி, அதின் நல்வழியே சிவபுண்ணியமானது புத்தி பூர்வத்தினும் அபுத்தி பூர்வத்தினும் உபாயச் சரிதையாதியிலும் உண்மைச் சரிதையாதியிலுமாகக் கிரமத்திலே செய்யப்படுத்தி, அந்தமட்டாய் மலர விருக்கிற அரும்புப் பருவம் நீங்கிய வரும்பருவத்துக்கடுத்த முதனாள் மொட்டாயிருக்கிற மலர்போல் மலம் பரிபாகம் பிறந்த தன்மை சமீபத்திற் கண்டு ஒப்பற்ற நல்ல சிவசமயத்திற் பத்திமிகுந்த இடத்திலே பிறப்பித்து நாட்டப்பட்ட இருவினையும் ஏககாலத்தில் இரண்டுந் தராசு நுனிபோலச் சமனான பருவத்திலே பல பிறவியும் அந்தமாம் படிக்குத் தமது தீவிரதரம் பொருந்தின அருட்சத்தியை அவ்வுயிர்களின் மலம் நீங்கும்படிக்குப் பதிக்குந் தரம் எம்மை இரக்ஷிக்க.
59-71. முத்திதரும் குணம் போற்றி :
(உரை) இருவினையொப்பு மலபரிபாகம் சத்திநிபாதம் பெற்ற பக்குவான்மாக்களுக்குக் கர்த்தா ஆசாரிய மூர்த்தமாய் அநுக்கிரகம் பண்ணுகிற முறைமை எப்படியென்னில், முத்தியைக் கொடுக்கும் நல்வழியையுடைய விஞ்ஞானாகலர்க்கு அவர்கள் பற்றியிருக்கிற ஆணவமல மொன்றினையும் அவர்களறிவுக்குட் பேரறிவாய்ப் பிரகாசித்துத் தோன்றி நீக்கி அருள்வடிவாக்கி ஞேயத்திலழுந்தும்படி கடாக்ஷிப்பர். பின்பு பொருந்தி விளங்காநின்ற பிரளயாகலருக்குத் திருவுருக்காணும் படிக்கு மானும் மழுவுஞ் சதுர்ப்புஜமுங் காளகண்டமுந் திரிநேத்திரமுமுடைய திருமேனி கொண்டிருந்து, அவர்களைப் பற்றியிருக்கிற ஆணவமலங் கன்மமலம் இரண்டையும் நீக்கி அருள்வடிவாக்கி, ஞேயத்தி லழுந்தும்படி கடாக்ஷிப்பர். அசுத்த மாயையிற் றோன்றி பூலோகத்தை விட்டு நீங்காமலிருக்கிற சகலருக்கு அவர்களைப் போல மானுடச்சட்டை சாத்தி, மானைக்காட்டி மானைப் பிடிப்பார் போல, முன்நின்று தரிசனை கொடுத்து அவர்களைப் பற்றியிருக்கிற ஆணவம் கன்மம் மாயையென்னும் மூன்று மலங்களையுந் தீக்ஷடக்கிரமங்களினாலே தீர்த்து அருள்வடிவாக்கி அடிமையாக்கிக் கொள்ளுதல் அந்தக் கர்த்தாவுக்கு ஆதிகாலத்திலே யுண்டான குணமாதலால், திருச்சிற்றம்பலத்தின் கண்ணே நின்றாடுகிற திருநடனத் தொழிலும், பிரகாசம் பொருந்திய நீலமணி போன்று இலங்குகிற காளகண்டமும், திருமேனியிற் பாதியாய்ப் பச்சை வடிவு கொண்டிலங்குஞ் சிவகாமி தங்கிய இடப்பாகமும், பவளக்கொடி படர்ந்து கிடப்பதுபோன்ற திருச்சடா பாரத்தின்மேல் தரித்திருக்கிற கங்கையும், பாலசந்திரப் பிரபையும், வெருவும்படிக்குப் படம்விரித்தாடுகிற சர்ப்பமும், அழகுமிகுந்த திருநுதல் நடுவில் மேல்நோக்கி நீண்டு கிடந்திலங்கும் அக்கினி நேத்திரமும், வலக்கையிற் பிடித்திருக்கிற கேடில்லாத லயத்துடனே முழங்குந் தமருகமும், அழகு பொருந்திய இடக்கையிற் பிடித்திருக்கிற அக்கினி குண்டமும், அரையிலே கட்டியிருக்கிற ஐந்தலையரவக் கச்சும் புள்ளிபொருந்திய புலித்தோலுடையும், பக்குவான்மாக்களை மோட்சமாகிய பேரின்ப வெள்ளத் தழுத்துதற்கு ஊன்றின பாதத்தினும் அடியாருள்ளத்திற் கலந்து இன்ப பூரணமாயிருக்கிற ஞான குஞ்சிதபாதத்தினும் பிரியாமற் றரித்திருக்கிற திருவருட் பிரகாசம் பொருந்திய சிலம்பும், உயிர்களைச் சோரத்தனமாய்க் களவு கொண்டு தன் வசப்படுத்துகிற முன்னை வினையை வென்று பிறவித் துன்பங்களை யறுப்பதற்கு மலவைரி நாமென்று முழந்தாளில் தரித்துக் கொண்டிருக்கிற வீரகண்டாமணியும் இவைகளொன்றும் உருத்தோன்றாதபடி உள்ளேயடக்கி ஒளித்துக்கொண்டு, என்றும் முடிவில்லாத பேரின்ப மோக்ஷத்தில் எம்போல்வாரையும் உறுத்த வேண்டிப் பிறவா முதல்வன் பிறந்து வந்தானென்று அதிசயமாய்ச் சொல்லும்படிக்குத் திருமேனி கொண்டு, தேன்பொருந்திய செங்கழுநீர் மாலை யுலாவும் புயத்தையுடைய மறைஞானசம்பந்த நாதனென்று ஒரு பெயருஞ் சுபாவத்திலில்லாத நாதன் ஒரு திருப்பெயருஞ் சாத்திக் கொண்டு பூமியிலுள்ளவர்களைப் போல உண்பதும் உறங்குவதும் அஞ்சுவதும் விடயபோகம் இன்பமுறுவதும் ஒத்தொழுகிக் கொண்டெழுந்தருளி மகிழ்ந்திருந்த குணம் எம்மை இரக்ஷிக்க.
71-78. மிண்டாய நிலைபோற்றி :
(உரை) இப்படி மானுடரைப்போலத் திருமேனி கொண்டு ஆசாரியமூர்த்தமாய்ப் பெண்ணாகடத்தின்கண் எழுந்தருளியிருந்து, எங்களுக்கு அகங்காரம் பொருந்திய புறச்சமயப் பொருள்களெல்லாம் அறிவித்து, அதிலே ஒரு பிரயோஜனமு மில்லையென்று அறிகிற திடமே பேறாகும்படி செய்வித்து, தேறாமலிருந்த சித்தந் தெளியும் படிக்குத் திருமேனி தரிசனை கொடுத்தருளிய அந்தத் தகைமையும் போகாமல் மேம்பாடாகிய மெய்கண்ட சந்தானச் சுத்தசைவ நெறியில் விட்டகுறை யறிந்து சமயவிசேட நிருவாணம் பொருந்தப்பட்ட அபிடேகமென்னும் நான்குவகைத் தீடிக்ஷயும் பண்ணி, சிவந்த தாமரை மலர் போன்ற திருக்கண்ணருளினாற் பார்த்து துன்பப் பிறப்பினாற் பட்ட புண்ணுடம்புத் துன்பமும் இருவினைத் துன்பமும் உயிரை விட்டு நீங்கும்படிக்கு அழகு பொருந்திய தாமரை மலர் போன்ற திருக்கைத் தலத்தைச் சிரசிலே வைத்தருளி, கற்போன்றிருந்த நெஞ்சை அக்கினியைச் சேர்ந்த மெழுகுபோல உருக்கி, திரிபதார்த்த மெய்த்தகைமைப் பொருள்களெல்லாம் விரித்தோதி யுபதேசித்து, ஒற்றுமையாக ஆகாயத்தை மறைத்த பூதவிருள்வடிவானது அந்த ஆகாயத்திற் சிவந்த சூரியன் உதயமானவுடனே பூதவிருட் பிரகாசமாய் மறைந்து நீங்க ஆகாயம் சூரியவொளி வடிவாகி நின்ற முறைமைபோல உபதேசித்த ஞானப்பிரகாசத்தைப் பற்றி மும்மலமும் நீங்கி ஆன்மபோதம் அருளிலடங்கச் செய்து, மலம் ஆன்ம போதத்தையும் பற்றாமல் தன்னுடைய அநாதி நித்தியமுங் கெடாமல் நீதியாக நிறுத்தின நிலைமை எம்மை இரக்ஷிக்க.
79-84. மேதக்கோர் கழல்போற்றி :
(உரை) உலகப்பற்று அற மேம்பாட்டுடனே தாதமார்க்கஞ் சற் புத்திரமார்க்கஞ் சகமார்க்கஞ் சன்மார்க்கமென்னும் நான்கு வழியினும் நின்று உண்மைச் சரியை கிரியா யோகங்களை விதிதப்பாமல் அநுட்டித்துச் செய்த அடியார்களுக்குச் சிறப்பு மிகுந்த பதமுத்தியான சாலோக சாமீப சாரூபம் எய்தும்படி செய்வித்து அதனால் ஞானதாகமுற்ற அடியார்கள் அநுக்கிரகத்தைப் பெற்று மெய்யன்பினாலே சிவ ரூபத்தில் ஆன்மதரிசனை பண்ணிச் சிவதரிசனத்தில் ஆன்மாவின் தன்னியல்பை யறிந்து பின்பு பெத்தமுத்தி இரண்டினும் உபகரித்து இரக்ஷிக்கிற கர்த்தாவினுடைய கருணையை மறந்து நாம் ஒரு முதலென்றிருந்தோமேயென்று லஜ்ஜைப்பட்டு நாணிப் பதைப்பற அருளினழுந்தி இரண்டற் றநுபவிக்குஞ் சிவாநுபவத்தைத் தடுமாறியானாலுஞ் சிவசிவாவென்று நினையாத எனக்கும் வீணே இரங்கி அநுக்கிரகம் பண்ணவேண்டி வேதாகமபுராண சாத்திரங்களிற் சொல்லப்பட்ட எல்லாப் பொருளுக்கும் மனத்துக்குந் தாமரைமலரி னெழுந்தருளி யிருக்கும் பிரமாவிஷ்ணு முதலாகிய தேவர்கள் நினைப்புக்குந் தெரியப்படாத தூரம்போல நின்றும் ஜடசித்துக்களிடத்தினும் அணித்தாய் நிறைந்திருக்கிற அழகு பொருந்திய சீர்பாத கமலத்தை அடியேன் சிரசின்மீதிருந்து பிரகாசிக்கும்படிக்கு வைத்துப் பெரிய மஹாதேவரென்னும் பெயரையுடைய மறைஞானசம்பந்த ஞானாசாரியர் எனக்கு அநுக்கிரகம் பண்ணிய பொருள் ஏதென்னில், தான்வேறு நான்வேறாய் வந்து பொருந்தினதில்லை யென்னும் வழக்கை யறிவித்து, அநாதியே தொடுத்து உன்னிடத்திலே யொளித்திருந்து நீ நம்மைப் காணாதிருக்க நாம் என்றும் உன்னைக் கண்டு கொண்டிருந்தோமென்கிற கள்ளத்தை இப்போது உயிர்க்குயிராய்ப் பிரகாசித்துநின்று அறிவித்த பாதமானது எம்மை இரக்ஷிக்க.
84-87. வள்ளமையால் செயல்போற்றி :
(உரை) வளப்பமிகுந்த கிருபையினாற் கர்த்தா தன்னைத் தெரிவித்துத் தன் பாததாமரையான திருவருளுக்குள்ளே பிரியாமல் என்றுங் கிடந்த என்னையுந் தெரிவித்த எல்லைக்கண் மின்போன்று தோன்றி யழிகிற வண்ணத்தையுடைய தேகமுந் தேகத்தைப் பொருந்திய குணமயக்கங்களும் அறிவை விளக்கப்பட்ட கலைகால முதலாகிய தத்துவங்களும் முன்னில்லாத கேவலாவத்தையை முன்னே அறிவித்துப் பின்பு தேக முதலிய கருவி கரணாதிகளுங் கூடின சகலாவத்தையையும் அறிவித்து இனி அருளை விட்டுத் தேக முதலான கருவிகரணாதிகளிற் செல்லாத சுத்தாவத்தையையும் அறிவித்த செயல் எம்மை இரக்ஷிக்க.
87-95. எல்லாம் போற்றிசைப்பேன் யான் :
(உரை) எல்லாத் தத்துவங்களையும் பொய்யென்று கண்டு நீங்கித் தம்மைத் தெளிந்தோ மென்றும், நமக்கு மேலே வேறொரு பொருளில்லை யென்றும், சைவ சித்தாந்திகளுடனே கூடலாகாது அவர் நமக்குப் புறம்பென்றும் பேசித் தன் இன்பத்தை தானே புசித்திருப்போ மென்று மகிழ்ச்சியுற்றுச் செவ்விதான நிருவிகாரி நாமேயென்று பேசி அகமே பிரமமென்னும் வாதிகள் தன்னையும் அறியாமல் தலைவனையும் அறியாமல் மயங்கி நிற்கிற வெளிபோன்ற இருளில் என்னை விடாமல், ஞானசொரூப வொளி வடிவாய் இப்போது நீ நிற்கிற நிலையென்று நிகழ்த்தி, இதற்கு மேலே வேறொரு பொருளின்றி யமையாமையும் எடுத்தோதி, ஆன்மாவைச் சிவத்துடனே ஒன்றாகும்படி சாதித்துத் தம்மைச் சிவமாக்கி இந்தப் பிறவிப் பேதமாகிய சரீரத்திலேதானே ஜீவன் முத்தித் தன்மையும் பரமுத்தித் தன்மையும் சரியாகக் கண்டு வெற்றின்பமான சிவபோகம் புசியாமல் சமவாதம் பேசி ஆன்ம சத்தியுடனே கூடி இன்பம் புசிப்போமென்கிற பாதகரோடுங்கூடி ஏகமாய்ப் போகாமல் எனக்கு எவ்விடத்துங் குருலிங்க சங்கமமாய்க் காட்சிகொடுத்து, மேலான போகமுண்டாகிற திருவருட் பாதத்திற் பிரியாமல் உள்ளேயடங்கிக் கிடக்கும்படி பொருந்துவித்து, ஞேயத்தி லழுந்திநிற்கும் அழியாத சாயுச்சியநிலை இந்த அருள் நிலையென்று விகற்பந்தோன்றாமல் அநுக்கிரகித்து, தமது பரிபூரண வியாபகத்துள்ளே யானும் ஒக்க வியாபித்து நிற்குந் தன்மையுங் காட்டி, மிகுந்தோங்கி அளவுபடாமல் நிறைந்து நின்ற தமது பேராநந்தத் திருவருட் கடலில் விளைந்த ஆராத ஞேயவமுதத்தைப் புசித்துக் களித்திருக்கும்படி தாமே என்னைத் தேடிவந்து கொடுத்த பெருங்கருணைத் தகுதியினால் ஊனுயிர் தானே முதன்மையென்று நின்ற பெத்தகாலத்தும் அதற்கு முதன்மையுங் கொடுத்து நீங்காமல் நின்ற முன்னோனை எந்த விதங்கொண்டு புகழ்ந்து போற்றுவேன் யான்.

குறிப்புரை :

குறிப்புரை எழுதவில்லை

ஆங்கிலத்தில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • English / ஆங்கிலம்
Under construction.

ஆங்கிலத்தில் பாடல் படிக்க / Transliteration


  • Afrikaans/Creole/Swahili/Malay/
    BashaIndonesia/Pidgin/English
poomannu :naanmukaththoan puththae'lir aangkavarkoan
maamannu soathi ma'nimaarpan - :naamannum
vaethamvae thaa:ntham vi'lakkanjsey vi:nthuvudan
:naatham:naa thaa:ntham :naduvaetham - poathaththaal
aama'lavum thaeda a'lavi'ra:ntha appaalaich
saema o'lievaru:n thae'rumvakai - maama'nisoozh
man'ru'l :ni'rai:nthu pi'ravi vazhakka'rukka
:nin'ra :niruththa :nilaipoa'r'ri - kun'raatha
palluyirvev vae'ru padaiththum avaikaaththum 5
ellai i'laippozhiya vidduvaiththu:n - thollaiyu'rum
a:ntham adi:naduven 're'n'na a'lavi'ra:nthu
va:ntha periya vazhipoa'r'ri - mu:nthu'r'ra
:nelluk kumithavidu :needusempi'r kaa'lithamu:n
thollaik kadalthoan'rath thoan'ravarum - ellaam
orupudaiya yoppaayththaan u'l'lavaa 'ru'ndaay
aruvamaay evvuyirum aarththae - uruvudaiya
maama'niyai u'l'ladakkum maa:naakam vannithanaith
thaanadakkung kaaddath thakuthiyumpoal - gnaanaththin
ka'n'nai ma'raiththa kadiyathozhi laa'navaththaal 10
e'n'nunj seyalmaa'nda evvuyirkkum - u'l:naadik
kadpulanaa'r kaa'naartham kaikkoduththa koalaepoa'r
po'rpudaiya maayaip pu'narppinka'n - mu'rpaal
thanukara'na mumpuvana mu:ntha:n thava'r'raal
manamuthalaal va:nthavikaa raththaal - vinaiyira'ndung
kaaddi athanaa'r pi'rappaakkik kaikko'ndum
meedda'rivu kaaddum vinaipoa'r'ri - :naaddukin'ra
eppi'rappum mu'rsey iruvinaiyaal :nichchayiththup
po'rpudaiya tha:nthaithaay poakaththud - karppamaayp
pulli'r panipoa'r puku:nthivalaik kudpadungkaal 15
ellaip padaautharath thee'ndiyatheep - palvakaiyaal
angkae kida:ntha a:naathiyuyir thampasiyaal
engkaenu maaka edukkumena - vengkumpik
kaayak karukkuzhiyi'r kaaththiru:nthung kaamiyaththuk
kaeyakkai kaalmuthalaay evvu'ruppum - aasa'ravae
seythu thiruththippin piyoakiruththi munpukka
vaiyavazhi yaeko'n da'naikin'ra - poyyaatha
vallapamae poa'r'riyam maayakkaal thaanma'raippa
:nalla a'rivozhi:nthu :nankuthee - thollaiyu'raa
akkaala:n thannil pasiyaiya'ri viththazhuvith(thu) 20
ukkaavi soaraththaay u'l:nadungki - mikkoangkunj
si:nthai uruka mulaiyuruku:n theenjsuvaippaal
va:nthumadup pakka'ndu vaazh:nthiruppap - pa:nthiththa
paasap perungkayi'r'raa'r palluyirum paalikka
:naesaththai vaiththa :ne'ripoa'r'ri - aasa'r'ra
paa'laip pasumpathaththum paalanaam appathaththum
:naa'lukku :naadchakala gnaanaththu - moo'lviththuk
ko'ndaa'la aa'lak karuvikoduth thokka:nin'ru
pa'ndaari yaana padipoa'r'ri - tha'ndaatha
punpulaal poarththa puzhukkurampai maamanaiyil 25
anpusaer kin'ranakad dai:nthaakki - munpu'l'la
u'nmai :nilaimai orukaal akalaathu
thi'nmai malaththaa'r si'raiyaakkik - ka'nma'raiththu
moolaarung kaddiluyir moodamaay udkidappak
kaala :niyathi yathukaaddi - maeloangku
mu:nthiviyan kaddiluyir saerththuk kalaiviththai
ya:ntha araaka mavaimunpu - tha:ntha
thozhila'ri vichchai thu'naiyaaka maanin
ezhiludaiya mukku'namum eythi - maru'loadu
mannum ithayaththi'r siththaththaa'r ka'ndaporu'l 30
inna poru'len 'riyampavo'n'naa - a:n:nilaipoayk
ka'ndaviyan kaddi'r karuvika'lee rai:nthozhiyak
ko'ndu:niya miththa'r'rai :naadkoduppap - pa'ndai
iruvinaiyaal munpu'l'la inpaththun pangka'l
maruvumvakai angkae maruvi - uruvudan:nin('ru)
oangku :nuthalaaya oalakka ma'ndapaththi'r
poangkaruvi yellaam puku:nthee'ndi - :neengkaatha
munnai malaththiru'lu'l moodaa vakaiyakaththud
dunnumiru'l :neekkunj sudaraepoal - a:n:nilaiyae
sookkanj sudaruruvi'r peythu thozhi'rkuriya 35
raakkip pa'niththa a'rampoa'r'ri - vaedkaimikum
u'ndip poruddaal orukaal aviyaathu
ma'ndieri yumperu:nthee maa'r'rutha'rkuth - thi'ndi'ralsaer
vallaarka'l valla vakaiyaa'r 'rozhilpuritha
lellaam udanae orungkisai:nthu - solkaalai
muddaama'r seyvinaikku mu'rseyvinaik kunjselavu
paddoalai theeddum padipoa'r'ri - :naddoangkum
i:n:nilaimai maanudaruk kaeyan'ri e'n'nilaa
mannuyirkkum i:ntha vazhakkaeyaay - munnudaiya
:naa'l:naa'l varaiyil udalpiriththu :nalvinaikka'n 40
vaa'naa'lin maalaay ayanaaki - :nee'l:naakar
vaanaadar koamuthalaay va:ntha perumpathaththu
:naanaa vithaththaal :nalampe'ru:naa'l - thaanmaa'la
ve'r'rik kadu:nthoothar vaekath thudanva:nthu
pa'r'riththam vengkuruvin paa'rkaadda - i'r'raikkum
illaiyoa paavi pi'ravaamai en'reduththu
:nallathoar insol :naduvaakach - solliivar
seythikkuth thakka seyalu'ruththu veeren'ru
veythu'r 'ruraikka vidaiko'ndu - maiyaltharunj
sekki nidaiththiriththu:n theevaayi lidderiththu:n 45
thakka:nerup puththoo'n thazhuvuviththum - mikkoangku
:naaraasang kaaychchich sevimaduththum :naaari:nthum
eeraaun oonaiththin en'radiththum - paeraamal
angkaazh :narakath thazhuththuviththum pinnu:ntham
vengkoapam maa'raatha vaedkaiyaraay - ingkoru:naa'l
e'n'nimutha'r kaa'naatha inna'r kadu:narakam
pannedu:naad sellum pa'niko'ndu - mun:naadik
ka'ndu kadankazhiththal kaariyamaam en're'n'nik
ko'nduvaru :noayin ku'rippa'rivaar - ma'nderiyi'r
kaaychchich sudava'rukkak ka'n'nurikka :nannithiyam 50
eeyththuththaay tha:nthaithamar inpu'ruthal - vaayththa:ne'ri
oadiyathae rinkeezh uyirpoana kan'raalae
:needuperum paavam in'rae :neengkumena - :naadiththan
mai:nthanaiyum oor:nthoan vazhakkae vazhakkaaka
:nanjsanaiya si:nthai :namanthoothar - venjsinaththaal
alla lu'ruththum aru:narakang ka'ndu:ni'rka
valla karu'nai ma'rampoa'r'ri - palluyirkkum
inna vakaiyaal iruvinaikka'n :nin'raruththi
munnaimutha lenna muthalilloan - :nalvinaikka'n
ellaa ulakum eduppu'n deduppu'ndu 55
selkaalam pin:narakanj saeraamae - :nalla:ne'ri
eythuvathoar kaalamthan anparaikka'n dinpu'ruthal
uyyum :ne'risi'rithae u'ndaakkip - paiyavae
maddaay malaraay varu:naa'lil munnai:naa'l
moddaay uruvaam mu'raipoalak - kiddiyathoar
:nalla pi'rappi'r pi'rappiththu :naadumvinai
ellai yira'ndum idaiyoppi'r - palpi'ravi
aththamathi lan'roa a'laven'ru paarththiru:nthu
saththi pathikkum tharampoa'r'ri - muththitharu
:nanne'rivinj gnaanakalar :naadumalam on'rinaiyum 60
a:n:nilaiyae u'l:nin 'ra'ruththaru'lip - pinanpu
maevaa vi'langkum pira'layaa kalarukkuth
thaevaay malakanma:n theerththaru'lip - poovalaya:n
thannin'ru :neengkaach sakalark kavarpoala
mun:nin'ru mummala:ntheerth thaadko'lkai - annavanuk
kaathiku'na maathalinaal aadu:n thiruththozhilunj
soathi ma'nimida'r'ruch su:ntharamum - paathiyaam
pachchai yidamum pava'lath thiruchchadaimael
vaichcha :nathiyum mathikkozhu:nthum achchama'ra
aadum aravum azhakaar thiru:nuthalmael 65
:needuruva vanni :nedungka'n'nung - kaedilayang
kooddu:n thamarukamung koala eriyakalum
pooddaravak kachchum puliyatha'lum - veeddinpa
ve'l'lath thazhuththi vidu:nthaa'li numadiyaar
u'l'laththi numpiriyaa o'nsilampum - ka'l'lavinai
ven'ru pi'rappa'rukkach saaththiyavee rakkazhalum
on'rumuruth thoan'raamal u'l'ladakki - en'rum
i'ravaatha inpath themaiiruththa vae'ndip
pi'ravaa inpath themaiiruththa vae'ndip
pi'ravaa muthalvan pi'ra:nthu - :na'ravaaru:n
thaarulaa vumpuyaththuch sampa:ntha :naathanen'ru 70
paerilaa :naathanoru paerpunai:nthu - paaroartham
u'ndi u'rakkam payaminpam oththozhukik
ko'ndu makizh:ntha ku'nampoa'r'ri - mi'ndaaya
aa'ru samayap poru'luma'ri viththava'r'ri'r
pae'rinmai engka'lukkae pae'raakkith - thae'raatha
siththa:n the'liyath thirumaeni ko'nduvarum
aththakaimai thaanae amaiyaamal - viththakamaanj
saiva :ne'riyi'r samaya muthalaaka
eythum apidaekam eythuviththuch - seyyathiruk
ka'n'naru'laal :noakkik kadiyapi'rap paa'rpadda 75
pu'n'num iruvinaiyum poayakala - va'n'namalark
kaiththalaththai vaiththaru'lik kallaaya :nenjsurukki
meyththakaimai yellaam viriththoathi - oththozhukum
sae'naar iru'lvadivum sengkathiroan paal:ni'rpak
kaa'naa thozhiyum ka'nakkaepoal - aa'navaththin
aathi ku'raiyaamal enpaal a'nukaamal
:neethi :ni'ruththum :nilaipoa'r'ri - maethakkoar
seyyunj sariyai thikazhkiriyaa yoakaththaal
eythunjseer muththipatham eythuviththu - meyyanpaa'r
kaa'nath thakuvaarka'l ka'ndaal thamaippinpu 80
:naa'nath thakumgnaana :nanne'riyai - vee'nae
enakkuth tharavae'ndi ellaap porudkum
manakkum malarayanmaal vaanoar - :ninaippinukku:n
thoorampoa laeya'niya su:ntharaththaa'l enthalaimael
aarum paditha:n tharu'lseytha - paeraa'lan
tha:nthaporu'l aethennil thaanvae'ru :naanvae'raay
va:nthu pu'naraa vazhakkaakki - mu:nthien'ran
u'l'lamen'rum :neengkaa tho'liththiru:nthu thoan'ri:ni'rkung
ka'l'lamin'ru kaaddum kazhalpoa'r'ri - va'l'lamaiyaal
thannaith theriviththuth than'raa'li nudkida:ntha 85
ennaith theriviththa ellaiyinka'n - minaarum
va'n'nam uruvam maruvung ku'namayakkam
e'n'nung kalaikaalam epporu'lum - munnamenak(ku)
illaamai kaaddippin peythiyavaa kaaddiinich
sellaamai kaaddunj seyalpoa'r'ri - ellaampoayth
thammaith the'li:nthaaraayth thaamae poru'laaki
emmaip pu'rangkoo'ri inpu'r'ruch - semmai
avikaaram paesum akampiramak kaarar
ve'liyaam iru'lil vidaathae - o'liyaay:nee
:nin'ra :nilaiyae :nikazhththi oruporu'lvae 90
'rin'ri yamaiyaamai eduththoathi - on'raakach
saathiththuth thammaich sivamaakki ippi'ravip
paetha:n thanilinpap paethamu'raap - paathakaroa(du)
aekamaayp poakaamal evvidaththung kaadchitha:nthu
poakamaam po'r'raa'li nudpu'narththi - aathiyudan
:ni'rka azhiyaa :nilaiithuvae en'raru'li
okka viyaapaka:nthan nudkaaddi - mikkoangkum
aa:na:ntha maakkadalil aaraa amutha'liththuth
thaanva:nthu seyyu:n thakuthiyinaal - oonuyirthaan
munka'nda kaalaththum :neengkaatha munnoanai 95
enko'ndu poa'r'risaippaen yaan.
சிற்பி