இளம்பிறை வளர்தற்கு இடனாய திருச்சடையை உடைய கூத்தப்பிரானை எண்ணியும், வாழ்த்தியும், வழிபட்டும் உய்ந்த நாயன்மார்களின் தூய, சொல்மலர்களால் ஆகிய இவ்வரலாற் றில், பொதிந்து கிடக்கும் சொற்பொருள்களின் சுவை நலன்களை நுகர்ந்துகொண்டிருக்கும் புனிதமான, திருத்தொண்டர்கள் வதிந்தரு ளும் இப்பேரவை, இறைவனின் ஆணைவழி நின்று இவ்வுலகில் விளக்கமும் வெற்றியும் தந்து வளர்வதாகுக.
முன் துதி செயும் நாயன்மார் - முன்னியும் (எண்ணியும்), வணங்கியும் வாழ்ந்த அடியவர்கள். முன் - முன்னதாக எனப் பொருள் கொண்டு, அடியவர்கள் தம் செயல்கட்கு எல்லாம் முன்னதாக இறை வழிபாட்டை ஆற்றும் பெற்றியர் எனினும் அமையும். முன் - வழிபடுதலில் தாம் எல்லோர்க்கும் முன்னதாக எனப் பொருள் கொள்வதும் அமையும். `நம்மில் பின்பல்லது எடுக்க ஒட்டோம்` என வரும் திருவாசகமும் (தி.8 திருப்பொற். பா.5) காண்க. பொதி நலன் - சொற்பொருள்களின் சுவை நலன். ஏனைய நூல்களிலன்றி இந்நூலினிடத்தேயே, பொதிந்து நிற்கும் பத்திச் சுவை எனினும் அமையும். அன்றி இச்சொற்பொருள்களின் இடனாகவும், இவற்றிற்கு மேலாகவும் பொதிந்து நிற்கும் இறையின்பம் எனினும் அமையும். நாயன்மார் தூய சொல் மலர் - நாயன்மார்களால் அருளிச் செய்யப்பட்ட திருமுறைகள். நாயன்மார்களைப் பற்றிய திருமுறை என இரு வகையானும் பொருள்கொள நின்றது. இவ்வாற்றான் பன்னிரு திருமுறைகளும் அடங்குவவாயின. நுகர்தரு - நுகர்ந்தும், நுகர்ந்துகொண்டும், இனி நுகரவும் இருக்கின்ற: வினைத் தொகை விதிமுறை. இறைவனின் ஆணைவழி. பேரவை - இத்தகைய புனிதர்கள் இருக்கும் பேரவையே பேரவையாம். அன்றி வெறும் எண்ணிக்கையால் மட்டும் பெருகி நிற்கும் பேரவை, பேரவையாகாது என்பதாம். அது, பேருக்கு அவையாம்.