கொடுங்கோளூரில் சேரமான் பெருமாளின் வழி பாட்டை ஏற்றிருந்த சுந்தரர் , ` ஆரூரானை மறக்கலுமாமே ` என்று திருப்பதிகம் பாடி , ` திருவாரூரைச் சென்று தொழுவேன் ` என்று கூறி எழுந்தருள , சேரர் பெருமான் பிரிவாற்றாமையால் வருந்துவதை யறிந்து , வருந்தாது பகையழித்து உமது பதியின் கண் இருந்து அரசாளும் என்றார் . சேரர் பெருமான் , ` எனக்குப் பாரோடு விசும்பாட்சி உமது பாதமலரே ; ஆயினும் நீர் திருவாரூர்க்கு எழுந்தருள்வதைத் தடுக்க அஞ்சுகின்றேன் ` என்று சொல்ல , சுந்தரர் , ` என்னுயிருக்கு இன்னுயிராம் எழிலாரூர்ப் பெருமானை மறந்திரேன் ` என்று கூறி எழுந்தருளினார் . அது கண்ட சேரர் பெருமான் அமைச்சர்கள் வாயிலாக , நவமணி களும் , மணிப்பூண்களும் , துகில் வருக்கம் முதலியவைகளும் ஏவலாளர் தலையின்மேல் நிரம்ப ஏற்றி அனுப்பினார் . வழியில் திருமுருகன்பூண்டிக்கு அருகில் சிவபெருமான் , பூதங்களை வேடர் வடிவாக்கிப் பொருள்களைக் கவர்ந்து வருமாறு அனுப்ப , அவைகள் அவ்வாறே சென்று எல்லாப் பொருள்களையும் பறித்து மறைந்தபின் சுவாமிகள் , திருக்கோயிலை யடைந்து பாடியருளியது இத் திருப்பதிகம் . ( தி .12 பெரிய . புரா . கழறிற் . புரா . 170) குறிப்பு : இத் திருப்பதிகம் , சுந்தரர் ஆறலைப்புண்ட இடத்தில் கோயில் கொண்டிருந்த இறைவரைக் கண்டு , ` அந்தோ ! இக்கொடிய இடத்தில் , இறைவியோடு நீர் ஏன் இருக்கின்றீர் ? அப்பாற் சென்று இருக்கலாகாதோ ?` எனக் கவன்று அருளிச் செய்தது . அன்பின் மிகுதியால் , இறைவரது ஆற்றல் தோன்றாதாயிற்று என்க . இது , நகைவகையான் இகழ்வதுபோலப் புகழ்ந்ததாகாமை , சேக்கிழார் திருமொழியான் அறிக .