நற்செயல்களையே தம் வாழ்வில் செய்து வரும் பழையனூரில் வாழ்ந்த வேளாண் மக்கள், தம்மேல் ஒரு குற்றம் வந்து சூழ்ந்த போது, தம் உயிரையும், ஒரு வணிகனுக்கு ஒருகால் தாம் கொடுத்த வாய்மையையும் சீர்தூக்கிப் பார்த்து, தாம் சொன்ன வாய்மையையே உயிரினும் சிறந்ததாய்க் காக்கப் பெற்ற மேன்மை சிறந்தது அத்தொண்டை நாடு ஆகும்.
பரத்தை வயப்பட்ட வணிகன் ஒருவன் தன்னைத் திருத்த முயன்ற தன்மனைவியைத் தனிவழிப் படுத்திக் கொன்று விட்டனன். அத்தீயசெயலால் அவள், நீலி என்னும் பேயாக, மறுபிறவியில் அவனை அலைத்து வந்தாள். அதனின்றும் தப்ப, மந்திர வலியுடைய வாளைக் கொண்டு தன்னைத்தான் காத்து வந்தான். அவ்வணிகன் தொண்டை நாட்டிலுள்ள பழையனூருக்கு வந்தான். அதுகாறும் அவனை அலைத்து வந்த பேயும், ஒரு பெண்வடிவம் கொண்டு, கள்ளிக்கொம்பு ஒன்றைக் குழந்தை வடிவாக்கி, அதனையும் தூக்கிக் கொண்டு, அவ்வணிகனைப் பின் தொடர்ந்து வந்தாள். அஞ்சிய அவ்வணிகன் வேளாளர் பெருமக்கள் எழுபது பேர் கொண்ட அவ்வூரவையாரிடத்துத் தன்னைக் காக்க வேண்டி, விண்ணப்பித்துக் கொண்டான். உடன் வந்த நீலி, இவன் `என் கணவன்` என்றும், `இக்குழந்தையும் எங்கள் குழந்தை` என்றும் கூறி, பரத்தை வயப்பட்ட இவன் எங்களை வெறுத்துக் கைவிட்டு வந்தான், அவையோராகிய தாங்கள் `எங்களை ஒன்று படுத்தி மனையறம்படுத்த வேண்டும்` என விண்ணப்பித்துக் கொண்டனள். வணிகன், `அவள் கூற்று உண்மை யன்று` என்ன, நீலி தன் இடுப்பில் இருந்த குழந்தையைக் கீழே விடுக்க, அக்குழந்தையும் அவ் வணிகனை `அப்பா` என்று அழைத்து அவனி டம் செல்ல, அதுகண்ட அவையோர், `இவ் வழக்கை நாளை தீர்ப் போம், இன்றிரவு இவ் விடத்தில் நீங்கள் ஒருங்கு இருங்கள்` என்று கூற, நீலி `இவன் கையிலிருக்கும் வாளைக் கொண்டு இன்றிரவு எங்களைக் கொன்றுவிடவும் கூடும்; ஆதலின் அதனை அவன் கையி னின்றும் வாங்கிவிடுக` என்று அவையோரிடத்துக் கூற, வணிகன், `இவ்வாள் இன்றேல் பேயாக வந்த இவள் என்னைக் கொன்று விடு வாள்` என்று கூற அவையோரும், `வாளை விடுத்து இவளுடன் தங் குக; உன் உயிர்க்குக் கேடுவரின் எங்கள் எழுபது பேர் உயிரையும், அதற்கு ஈடாகத் தருவோம்` என உறுதி மொழி தந்து ஒருப்படுத்தினர். அவர்கள் ஒருங்கு தங்கிய அவ்விரவில், நீலியாக வந்த பேய், அவ னைக் கொன்று தன் பழியைத் தீர்த்துக் கொண்டது. மறுநாள் காலை அதை அறிந்த அவையோர், தாம் அவ்வணிகனுக்கு முன் கொடுத்த உறுதி மொழிப்படி, தீ வளர்த்துத் தங்கள் எழுபது பேரின் உயிர் களையும் போக்கிக் கொண்டனர். இதுவே இப் பாடற்கண் குறிக்கப் பட்ட வரலாறாகும். அவையோர் தீக்குளித்த இடம், நீலிகுளம் என இன்றும் வழங்குகிறது. அதன் கரையில் அவையோர் எழுபதின்மரின் திருவுருவங்களும், நீலியின் உருவமும் உள்ளன.