சிவனடியார் உலகில் உள்ளாரில் யார்க்கு என்ன தீங்கு செய்கின்றனர்! அவர்கள் அறவுள்ளம் உடையார், இடுகின்ற பிச்சையை ஏற்று உண்டு போகின்றார்கள். ஆதலின், அவரிடத்து வெறுப்புக் கொண்டு இகழ்ந்து பேசியவர் அடைவது மிகக் கீழான நரகமே.
``சிவனடியாரை வெறுத்துப் பேசுதற்குக் காரணம், செல்வம் முதலியவற்றால் வரும் செருக்கும், சமயக் காழ்ப்பும் போல்வனவேயன்றிப் பிறிதில்லை`` என்றற்கு முதல் இரண்டடிகளைக் கூறினார். ``ஊர்கள்தோறும் அட்டுண்பார் இட்டுண்பார் விலக்கார் ஐயம்`` (தி.6 ப.98 பா.2) என்றதும், ``சிவனடியார்க்கு உலகத் தாரோடு உறவினா லாதல், பகையினாலாதல் தொடர்பில்லை என்பது விளக்கியதேயாம்.
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து
கெடுக உலகியற்றி யான். -குறள், 1062
என்றதில், ``இரத்தல் இல்வாழ்வார் மேற்கொள்ளும் தொழில்களுள் ஒன்றன்று`` என்றதன்றி,
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. -குறள், 41
என்புழிக் கூறப்பட்ட இயல்புடைய மூவரை விலக்கியதன்று. இனி,
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. -குறள், 42
என்புழித் ``துறந்தார்``என்றது கிளைஞரால் கைவிடப்பட்டவரை. இவரை, ``அனாதைகள்`` என்பர். இவர் சிறுமகாரும், கழிமூப்பினரும், ``காணார் கேளார் கால் முடம்பட்டார்`` (மணிமேகலை, காதை.13, வரி.111) முதலியோருமாய், முயற்சி செய்யமாட்டாதவராய் இருப்பவர். இவர் தாமே கிளைஞரால் கைவிடப்படாதவழி. அவரால் வயிறு நிரம்பப் பெறாராயின், ``துவ்வாதவர் வறியார்`` எனப்படுவர். ``இவர்க்கும் ``இல்வாழ்வான் துணை`` என்றமையால், இவரையும் மேற்காட்டிய ``இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்`` என்னும் குறள் விலக்கியதின்றாம். ஆகவே, இவரையெல்லாம் பொதுப் பட நோக்கியே, ``ஈகை`` (குறள் அதிகாரம், 23) என்னும் அதிகாரமும்,
இரப்பாரை யில்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று. -குறள், 1058
என்னும் குறளும் சொல்லப்பட்டனவாம். இவ்வாசிரியரும் ``யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி`` (பா. 51) என்றதும் இவரை நோக்கியேயாம்.
இங்ஙனம் நூல் முழுவதையும் முற்றநோக்கி உண்மை உணரமாட்டாதார். `இங்குக் காட்டியன பலவும் தம்முள் ஒன்றி நில்லாது ஒன்றை ஒன்று விலக்குவனவாய் முரணிநிற்கும்` என்று இகழ்வர். அவர் ``ஏற்பதிகழ்ச்சி, ஐயம் இட்டுண்`` (ஆத்திசூடி, 8,9) என்றாற் போல்வனவற்றையும் அன்னவாக வைத்து இகழ்தல் சொல்ல வேண்டுமோ என்பது.
சிவனடியாராகிய மாகேசுரரை நல்விருந்தினராக வரவேற்று ஓம்புவார் சத்திநிபாதர். அவர் உலகத்து அரியராக, இரவலராக வைத்து ஐயம் ஏற்று உண்டலையே கூறினார். ஐயம் இடுவோர் அவரின் மிக்குளதாதல் பற்றி இங்கு `ஆர்க்கும் விரோதிகள்` என்பது பாடமாயின், `ஆண்டான் அடியவராய யார்க்கும் விரோதிகளாய் ஐயம் ஏற்றும் உண்பவராய அவ்வடியவரை வேண்டாது பேசினார்` என உரைத்தலன்றிப் பிறவாறுரைத்தல் பொருந்தாமை அறிக. `தாந் தாம் விழுவது` என்பதில் இரண்டாவது `தாம்` அசைநிலை.
இதனால், மாகேசுர நிந்தை மாபாதகமாதல் கூறப்பட்டது.