திருக்கோவையார்-சேட்படை


பண் :

பாடல் எண் : 1

தேமென் கிளவிதன் பங்கத்
திறையுறை தில்லையன்னீர்
பூமென் தழையுமம் போதுங்கொள்
ளீர்தமி யேன்புலம்ப
ஆமென் றருங்கொடும் பாடுகள்
செய்துநுங் கண்மலராங்
காமன் கணைகொண் டலைகொள்ள
வோமுற்றக் கற்றதுவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
தே மென் கிளவி தன் பங்கத்து இறை உறை தில்லை அன்னீர் தேன்போலும் மெல்லிய மொழியையுடை யாடனது கூற்றையுடைய இறைவனுறையுந் தில்லையை யொப்பீர்; பூ மெல் தழையும் அம் போதும் கொள்ளீர் யான் கொணர்ந்த பூவையுடைய மெல்லிய தழையையும் அழகிய பூக்களையுங் கொள்கின்றிலீர்; தமியேன் புலம்ப அருங் கொடும்பாடுகள் ஆம் என்று செய்து உணர்விழந்த யான் றனிமைப்படச் செய்யத்தகாத பொறுத்தற்கரிய கொடுமைகளைச் செய்யத்தகு மென்று துணிந்து செய்து; நும் கண் மலர் ஆம் காமன் கணை கொண்டு அலை கொள்ளவோ முற்றக் கற்றது நுங் கண்மலராகின்ற காமன் கணை கொண்டு அருளத்தக்காரை அலைத்தலையோ முடியக் கற்கப்பட்டது, நும்மால் அருளுமாறு கற்கப்பட்ட தில்லையோ! எ-று.
பங்கத்துறையிறை யென்பதூஉம் பாடம். தமியேன் புலம்ப வென்பதற்குத் துணையிலாதேன் வருந்தவெனினுமமையும். மேற் சேட்படை கூறுகின்றமையின் அதற்கியைவுபட ஈண்டுங் குறையுறவு கூறினான்.மெய்ப்பாடு: அழுகை. பயன்: ஆற்றாமையுணர்த்துதல். அவ்வகை தோழிக்குக் குறைநேர்ந்த நேரத்துத் தலைமகன் கையுறை யோடுஞ் சென்று இவ்வகை சொன்னானென்பது. 90

குறிப்புரை :

12.1 தழைகொண்டுசேறல்
தழைகொண்டுசேறல் என்பது மேற்சேட்படை கூறத் துணியா நின்ற தோழியிடைச்சென்று, அவளது குறிப்பறிந்து, பின்னுங் குறையுறவு தோன்றநின்று, நும்மாலருளத்தக்காரை அலையாதே இத்தழை வாங்கிக்கொண்டு என்குறை முடித்தருளு வீரா மென்று, மறுத்தற்கிடமற, சந்தனத்தழைகொண்டு தலை மகன் சொல்லாநிற்றல். அதற்குச் செய்யுள்
12.1 கொய்ம்மலர்க் குழலி குறைந யந்தபின்
கையுறை யோடு காளை சென்றது.

பண் :

பாடல் எண் : 2

ஆரத் தழையராப் பூண்டம்
பலத்தன லாடியன்பர்க்
காரத் தழையன் பருளிநின்
றோன்சென்ற மாமலயத்
தாரத் தழையண்ணல் தந்தா
லிவையவ ளல்குற்கண்டால்
ஆரத் தழைகொடு வந்தா
ரெனவரும் ஐயுறவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
ஆரத் தழை அராப் பூண்டு அம்பலத்து அனலோடி ஆரமாகிய தழைந்த அரவைப் பூண்டு அம்பலத்தின்கண் அனலோடாடி; அன்பர்க்கு ஆரத் தழை அன்பு அருளி நின்றோன் அன்பராயினார்க்குத் தானும் மிக்க அன்பைப் பெருகச் செய்து நின்றவன்; சென்ற மா மலயத்து ஆரத் தழை அண்ணல் தந்தால் சேர்ந்த பொதியின் மலையிடத்துளவாகிய சந்தனத் தழைகளை அண்ணல் தந்தால்; இவை அவள் அல்குற் கண்டால் இத்தழைகளைப் பிறர் அவளல்குற்கட் காணின்; அத் தழை கொடு வந்தார் ஆர் என ஐயுறவு வரும் ஈண்டில்லாத அத்தழை கொண்டுவந்தார் யாவரென ஐயமுண்டாம்; அதனால் இவை கொள்ளேம் எ - று.
ஆரத்தழையரா பூண்டகாலத்து ஆரத்தழைத்த அரவெனினு மமையும். அன்பர்க்காரத் தழையன்பருளி நின்றோ னென்பதற்கு அன்பர்க்கு அவர் நுகரும்வண்ணம் மிக்க அன்பைக் கொடுத்தோனெ னினுமமையும். அன்பான் வருங்காரியமேயன்றி அன்புதானும் ஓரின் பமாகலின் நுகர்ச்சியாயிற்று. அண்ணலென்பது ஈண்டு முன்னிலைக் கண் வந்தது. அத்தழையென்றது அம்மலயத் தழை என்றவாறு. 91

குறிப்புரை :

12.2 சந்தனத்தழை தகாதென்று மறுத்தல் சந்தனத்தழை தகாதென்று மறுத்தல் என்பது தலைமகன் சந்தனத்தழைகொண்டு செல்ல, அது வழியாக நின்று, சந்தனத் தழை இவர்க்கு வந்தவாறென்னோவென்று ஆராயப்படுதலான் இத்தழை எமக்காகாதெனத் தோழி மறுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
12.2. பிறைநுதற் பேதையைக் குறைநயப் பித்தபின்
வாட்படை யண்ணலைச் சேட்ப டுத்தது

பண் :

பாடல் எண் : 3

முன்றகர்த் தெல்லா விமையோரை
யும்பின்னைத் தக்கன்முத்தீச்
சென்றகத் தில்லா வகைசிதைத்
தோன்றிருந் தம்பலவன்
குன்றகத் தில்லாத் தழையண்
ணறந்தாற் கொடிச்சியருக்
கின்றகத் தில்லாப் பழிவந்து
மூடுமென் றெள்குதுமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
முன் எல்லா இமையோரையும் தகர்த்து முன்வேள்விக்குச் சென்ற எல்லாத் தேவர்களையும் புடைத்து; பின்னைச் சென்று தக்கன் முத் தீ அகத்து இல்லாவகை சிதைத்தோன் பின்சென்று தக்கனுடைய மூன்று தீயையும் குண்டத்தின்கண் இல்லை யாம்வண்ணம் அழித்தவன்; திருந்து அம்பலவன் திருந்திய வம் பலத்தையுடையான்; குன்றகத்து இல்லாத் தழை அண்ணல் தந்தால் அவனுடைய இம்மலையிடத்தில்லாத தழையை அண்ணல் தந்தால்; கொடிச்சியருக்கு அகத்து இல்லாப் பழி இன்று வந்து மூடும் என்று எள்குதும் கொடிச்சியருக்கு இல்லின்கண் இல்லாதபழி இன்று வந்து மூடுமென்று கூசுதும்; அதனால் இத்தழை கொணரற்பாலீரல்லீர் எ- று.
குன்றகத்தில்லாத் தழையென்றது குறிஞ்சி நிலத்தார்க்கு உரிய வல்லாத தழை யென்றவாறு. அண்ணலென்பது முன்னிலைக் கண்ணும், கொடிச்சியரென்பது தன்மைக்கண்ணும் வந்தன. இல்லா வென்பது பாடமாயின், இல்லையாம் வண்ணம் முன்றகர்த் தென்றுரைக்க.92

குறிப்புரை :

12.3 நிலத்தின்மைகூறி மறுத்தல்
நிலத்தின்மை கூறி மறுத்தல் என்பது சந்தனத்தழை தகாதென்றதல்லது மறுத்துக் கூறியவாறன்றென மற்றொருதழை கொண்டுசெல்ல, அதுகண்டு, இக்குன்றிலில்லாத தழையை எமக்கு நீர்தந்தால் எங்குடிக்கு இப்பொழுதே பழியாம்; ஆதலான் அத்தழை யெமக்காகாதென்று மறுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
12.3. கொங்கலர் தாரோய் கொணர்ந்த கொய்தழை
எங்குலத் தாருக் கேலா தென்றது.

பண் :

பாடல் எண் : 4

யாழார் மொழிமங்கை பங்கத்
திறைவன் எறிதிரைநீர்
ஏழா யெழுபொழி லாயிருந்
தோன்நின்ற தில்லையன்ன
சூழார் குழலெழிற் றொண்டைச்செவ்
வாய்நவ்வி சொல்லறிந்தால்
தாழா தெதிர்வந்து கோடுஞ்
சிலம்ப தருந்தழையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
யாழ் ஆர் மொழி மங்கை பங்கத்து இறைவன் யாழோசைபோலும் மொழியையுடைய மங்கையது கூற்றையுடைய இறைவன்; எறி திரை நீர் ஏழ் ஆய் எழு பொழில் ஆய் இருந்தோன் எறியாநின்ற திரையையுடைய கடலேழுமாய் ஏழுபொழிலு மாயிருந்தவன்; நின்ற தில்லை அன்ன சூழ் ஆர் குழல் தொண்டை எழில் செவ்வாய் நவ்வி சொல் அறிந்தால் அவனின்ற தில்லையை ஒக்குஞ் சுருண்ட நிறைந்த குழலினையுந் தொண்டைக் கனிபோலும் எழிலையுடைய செவ்வாயினையுமுடைய நவ்வி போல்வாளது மாற்ற மறிந்தால்; சிலம்ப தரும் தழை தாழாது எதிர் வந்து கோடும் பின் சிலம்பனே நீ தருந்தழையைத் தாழாது நின்னெதிர்வந்து கொள்வேம்; அவள் சொல்வது அறியாது கொள்ள வஞ்சுதும் எ - று.
சூழாரென்புழிச் சூழ்தல் சூழ்ந்து முடித்தலெனினுமமையும். தில்லையன்ன நவ்வியெனவியையும். 93

குறிப்புரை :

12.4 நினைவறிவுகூறிமறுத்தல் நினைவறிவுகூறி மறுத்தல் என்பது இத்தழை தந்நிலத்துக் குரித்தன்றென்றதல்லது மறுத்துக்கூறியவாறன்றென உட் கொண்டு, அந்நிலத்திற்குரிய தழைகொண்டு செல்ல, அதுகண்டு தானுடம்பட்டாளாய், யான் சென்று அவணினைவறிந்தால் நின்னெதிர்வந்து கொள்வேன்; அதுவல்லது கொள்ள அஞ்சுவேனென மறுத்துக் கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்ந
12.4. மைதழைக் கண்ணி மனமறிந் தல்லது
கொய்தழை தந்தாற் கொள்ளே மென்றது.

பண் :

பாடல் எண் : 5

எழில்வா யிளவஞ்சி யும்விரும்
பும்மற் றிறைகுறையுண்
டழல்வா யவிரொளி யம்பலத்
தாடுமஞ் சோதியந்தீங்
குழல்வாய் மொழிமங்கை பங்கன்குற்
றாலத்துக் கோலப்பிண்டிப்
பொழில்வாய் தடவரை வாயல்ல
தில்லையிப் பூந்தழையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
எழில் வாய் இள வஞ்சியும் விரும்பும் நின் பாற்றழை கோடற்கு யானேயன்றி எழில் வாய்த்த இளைய வஞ்சியையொப்பாளும் விரும்பும்; மற்று இறை குறை உண்டு ஆயினுஞ் சிறிது குறையுண்டு; அழல்வாய் அவிர் ஒளி அழலிடத்துளதாகிய விளங்கு மொளியாயுள்ளான்; அம்பலத்து ஆடும் அம்சோதி அம்பலத்தின்கணாடும் அழகிய சோதி; அம் தீம் குழல் வாய் மொழி மங்கை பங்கன் அழகிய வினிய குழலோசை போலும் மொழியையுடைய மங்கையது கூற்றை யுடையான்; குற்றாலத்துக் கோலப்பிண்டிப் பொழில்வாய் அவனது குற்றாலத்தின் கணுளதாகிய அழகையுடைய அசோகப்பொழில் வாய்த்த; தடவரைவாய் அல்லது இப் பூந் தழை இல்லை பெரிய தாள் வரையிடத்தல்லது வேறோரிடத்து இப்பூந்தழையில்லை; அதனால் இத்தழை இவர்க்கு வந்தவாறென்னென்று ஆராயப்படும், ஆதலான் இவை கொள்ளேம் எ - று.
இத்தழையை யிளவஞ்சியும் விரும்பு மெனினுமமையும். அவிரொளியையுடைய அஞ்சோதியென்றியைப் பினுமமையும். பிறவிடத்து முள்ளதனை அவ்விடத்தல்லது இல்லை யென்றமையின், படைத்துமொழியாயிற்று. 94

குறிப்புரை :

12.5 படைத்து மொழியான் மறுத்தல்
படைத்து மொழியான் மறுத்தல் என்பது நினைவறிந் தல்லது ஏலேமென்று மறுத்துக்கூறியவாறன்று; நினைவறிந்தால் ஏற்பே மென்றவாறாமென உட்கொண்டு நிற்ப, சிறிது புடை பெயர்ந்து அவணினைவறிந்தாளாகச்சென்று, இத்தழை யானே யன்றி அவளும் விரும்பும்; ஆயினும் இது குற்றாலத்துத் தழையா தலான் இத்தழை இவர்க்கு வந்தவாறு என்னோவென்று ஆராயப் படும்; ஆதலான் இத் தழை யெமக்காகாதென்று மறுத்துக்கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்
12.5. அருந்தழை மேன்மேற் பெருந்தகை கொணரப்
படைத்துமொழி கிளவியிற் றடுத்தவண் மொழிந்தது.

பண் :

பாடல் எண் : 6

உறுங்கண்ணி வந்த கணையுர
வோன்பொடி யாயொடுங்கத்
தெறுங்கண்ணி வந்தசிற் றம்பல
வன்மலைச் சிற்றிலின்வாய்
நறுங்கண்ணி சூட்டினும் நாணுமென்
வாணுதல் நாகத்தொண்பூங்
குறுங்கண்ணி வேய்ந்திள மந்திகள்
நாணுமிக் குன்றிடத்தே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
நிவந்த உறும் கள் கணை உரவோன் பொடியாய் ஒடுங்க எல்லார்கணையினும் உயர்ந்த மிகுந்த தேனையுடைய மலர்க்கணையையுடைய பெரிய வலியோன் நீறாய்க்கெட; தெறும்கண் நிவந்த சிற்றம்பலவன் தெறவல்ல கண்ணோங்கிய சிற்றம்பலவனது; மலைச் சிற்றிலின் வாய் மலைக்கணுண்டாகிய சிற்றிலிடத்து; நறுங் கண்ணி சூடினும் என் வாணுதல் நாணும் செவிலியர் சூட்டிய கண்ணிமேல் யானோர் நறுங்கண்ணியைச் சூட்டினும் அத்துணையானே என்னுடைய வாணுதல் புதிதென்று நாணாநிற்கும்; இக் குன்றிடத்து நாகத்து ஒண் பூங்குறுங் கண்ணி வேய்ந்து இள மந்திகள் நாணும் மகளிரைச் சொல்லுகின்றதென்! இக்குன்றிடத்து நாகமரத்தினது ஒள்ளிய பூக்களானியன்ற குறுங் கண்ணியைச்சூடி அச்சூடுதலான் இளமந்திகளும் நாணாநிற்கும் எ-று.
கண்ணிவந்தவென்பதற்குக் கள் மிக்க கணையெனினு மமையும். தெறுங்கண்ணிவந்தவென்றார், அக்கண் மற்றையவற்றிற்கு மேலாய்நிற்றலின். மேனோக்கி நிற்றலானெனினுமமையும்.
முதலொடு சினைக்கொற்றுமையுண்மையான் நிவந்த வென்னும் பெயரெச்சத்திற்குச் சிற்றம்பலவனென்பது வினைமுதற் பெயராய் நின்றது. மந்திகணாணுமென்பது பெயரெச்சமாக மலைக்கண் இக்குன்றிடத்துச் சிற்றிலின்வாயெனக் கூட்டியுரைப்பினு மமையும். இப்பொருட்குக் குன்றென்றது சிறுகுவட்டை. யானொன்று சூட்டினும் நாணும் பெருநாணினாள் நீர்கொணர்ந்த இக்கண்ணியை யாங்ஙனஞ் சூடுமென்பது கருத்து. நாணுதலுரைத்ததென்னுஞ் சொற்கள் ஒரு சொன்னீர்மைப்பட்டு இரண்டாவதனையமைத்தன. 95

குறிப்புரை :

12.6 நாணுரைத்துமறுத்தல்
நாணுரைத்து மறுத்தல் என்பது பலபடியுந் தழைகொண்டு செல்ல மறுத்துக்கூறியவழி, இனித் தழையொழிந்து கண்ணியைக் கையுறையாகக் கொண்டுசென்றால் அவள் மறுக்கும் வகை யில்லை யெனக் கழுநீர்மலரைக் கண்ணியாகப் புனைந்து கொண்டு செல்ல, அதுகண்டு, செவிலியர் சூட்டிய கண்ணியின் மேல் யானொன்று சூட்டினும் நாணாநிற்பள்; நீர்கொணர்ந்த இந்தக் கண்ணியை யாங்ஙனஞ் சூடுமெனத் தலைமகள் நாணு ரைத்து மறுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
12.6. வாணுதற் பேதையை
நாணுத லுரைத்தது.

பண் :

பாடல் எண் : 7

நறமனை வேங்கையின் பூப்பயில்
பாறையை நாகநண்ணி
மறமனை வேங்கை யெனநனி
யஞ்சுமஞ் சார்சிலம்பா
குறமனை வேங்கைச் சுணங்கொ
டணங்கலர் கூட்டுபவோ
நிறமனை வேங்கை யதளம்
பலவன் நெடுவரையே .

பொழிப்புரை :

இதன் பொருள்:
நற மனை வேங்கையின் பூ பயில் பாறையை நாகம் நண்ணி தேனிற்கிடமாகிய வேங்கைப் பூக்கள் பயின்ற பாறையை யானை சென்றணைந்து; மறம் மனைவேங்கை என நனி அஞ்சும் மஞ்சு ஆர் சிலம்பா அதனைத் தறுகண்மைக்கிடமாகிய புலியென்று மிகவுமஞ்சும் மஞ்சாருஞ் சிலம்பையுடையாய்; நிறம் மன்வேங்கை அதள் அம்பலவன் நெடுவரை நிறந்தங்கிய புலி யதளையுடைய அம்பலவனது நெடிய இவ்வரைக்கண்; குறம் மனை வேங்கைச் சுணங்கொடு அணங்கு அலர் கூட்டுபவோ குறவர் மனையிலுளவாகிய வேங்கையினது சுணங்குபோலும் பூவோடு தெய்வத்திற்குரிய கழுநீர் முதலாகிய பூக்களைக் கூட்டுவரோ? கூட்டார் எ - று.
நறமனைவேங்கை யென்பதற்கு நறாமிக்கபூ வெனினு மமையும். குறமனை கூட்டுபவோ வென்பதற்குக் குறக்குடிகள் அவ்வாறு கூட்டுவரோ வென்றுரைப்பாருமுளர். நிறமனையென்புழி ஐகாரம்; அசைநிலை; வியப்பென் பாருமுளர். நிறம் அத்தன்மைத் தாகிய அதளெனினுமமையும். ஒன்றனை ஒன்றாக ஓர்க்கு நாடனாதலான் அணங்கலர் சூடாத எம்மைச் சூடுவேமாக ஓர்ந்தா யென்பது இறைச்சிப்பொருள். ஒப்புமையான் அஞ்சப்படாத தனையும் அஞ்சும் நிலமாகலான் எங்குலத்திற்கேலாத அணங்கலரை யாமஞ்சுதல் சொல்லவேண்டுமோ வென்பது இறைச்சியெனினு மமையும். இப்பொருட்கு ஒருநிலத்துத் தலைமகளாகக் கொள்க. வேங்கைபூவிற்குச் சுணங்கணிந்திருத்தல் குணமாதலால் சுணங் கணியப்பட்டதனைச் சுணங்கென்றே கூறினாள். ; 96

குறிப்புரை :

12.7 இசையாமை கூறி மறுத்தல்
இசையாமை கூறி மறுத்தல் என்பது தலைமகணாணுரைத்து மறுத்த தோழி அவணாணங்கிடக்க யாங்கள் வேங்கைமலரல்லது தெய்வத்திற்குரிய வெறிமலர்சூட அஞ்சுதும்; ஆதலான் இக்கண்ணி எங்குலத்திற் கிசையாதென மறுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
12.7. வசைதீர் குலத்திற்
கிசையா தென்றது.

பண் :

பாடல் எண் : 8

கற்றில கண்டன்னம் மென்னடை
கண்மலர் நோக்கருளப்
பெற்றில மென்பிணை பேச்சுப்
பெறாகிள்ளை பிள்ளையின்றொன்
றுற்றில ளுற்ற தறிந்தில
ளாகத் தொளிமிளிரும்
புற்றில வாளர வன்புலி
யூரன்ன பூங்கொடியே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கண்டு அன்னம் மெல் நடை கற்றில - புடைபெயர்ந்து விளையாடாமையின் நடைகண்டு அன்னங்கள் மெல்லிய நடையைக் கற்கப்பெற்றனவில்லை; கண் மலர் நோக்கு அருள மென்பிணை பெற்றில தம்மாற் குறிக்கப்படுங் கண்மலர் நோக்குகளை அவள் கொடுப்ப மென்பிணைகள் பெற்றனவில்லை; பேச்சுக் கிள்ளை பெறா உரையாடாமையின் தாங் கருது மொழிகளைக் கிளிகள் பெற்றனவில்லை; பிள்ளை இன்று ஒன்று உற்றிலள் இருந்தவாற்றான் எம்பிள்ளை இன்றொரு விளை யாட்டின்கணுற்றிலள்; ஆகத்து ஒளிமிளிரும் புற்றில வாள் அரவன் அதுவேயுமன்றி ஆகத்தின் கட்கிடந்தொளி விளங்கும் புற்றின் கண்ணவாகிய ஒளியையுடைய பாம்பையுடையவனது; புலியூர் அன்ன பூங்கொடி பூலியூரையொக்கும் பூங்கொடி; உற்றது அறிந்திலள் என்னுழை நீர் வந்தவாறும் யானுமக்குக் குறைநேர்ந்த வாறும் இன்னுமறிந்திலள்; அதனாற் செவ்விபெற்றுச் சொல்லல் வேண்டும் எ - று.
கண்டென்பது கற்றலோடும், அருளவென்பது பெறுதலோடும் முடிந்தன. புற்றிலவென்பதற்கு வேள்வித்தீயிற் பிறந்து திரு மேனிக்கண் வாழ்தலாற் புற்றையுடையவல்லாத அரவென் றுரைப்பினு மமையும். ஆரத்தொளி யென்பதூஉம் பாடம். இவை யேழிற்கும் மெய்ப்பாடு: அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். முடியாதெனக் கருதுவாளாயின் இறந்துபடுமென்னும் அச்சமும் முடிக்கக் கருதலிற் பெருமிதமுமாயிற்று.
பயன்: செவ்விபெறுதல். மேற்றலைமகளைக் குறைநயப்பித்து அவளது கருத்துணர்ந்து தன்னினாகிய கூட்டங் கூட்டலுறுந்தோழி தலைமகன் றெருண்டு வரைந்தெய்துதல் வேண்டி, இவை முதலாக முன்னர் விண்ணிறந்தார் (தி.8 கோவை பா.107) என்னும் பாட்டீறாக இவையெல்லாங்கூறிச் சேட்படுத்தப்பெறுமென்பது. 97

குறிப்புரை :

12.8 செவ்வியிலளென்று மறுத்தல்
செவ்வியிலளென்று மறுத்தல் என்பது அணங்கலர் தங்குலத்திற் கிசையாதென்றதல்லது மறுத்துக்கூறியவாறன்றென மாந்தழையோடு மலர் கொண்டுசெல்ல, அவை கண்டு உடம் படாளாய், அன்னம் பிணை கிள்ளை தந்தொழில் பயில இன்று செவ்வி பெற்றனவில்லை; அதுகிடக்க என்னுழை நீர்வந்தவாறும் யானுமக்குக் குறைநேர்ந்தவாறும் இன்னுமறிந்திலள்; அதனாற் செவ்வி பெற்றாற் கொணருமென மறுத்துக்கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
12.8. நவ்வி நோக்கி
செவ்வியில ளென்றது.

பண் :

பாடல் எண் : 9

முனிதரு மன்னையும் மென்னையர்
சாலவும் மூர்க்கரின்னே
தனிதரு மிந்நிலத் தன்றைய
குன்றமுந் தாழ்சடைமேற்
பனிதரு திங்க ளணியம்
பலவர் பகைசெகுக்குங்
குனிதரு திண்சிலைக் கோடுசென்
றான்சுடர்க் கொற்றவனே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
சுடர்க் கொற்றவன் சுடர்களுட்டலைவன்; தாழ்சடைமேல் பனிதரு திங்கள் அணி அம்பலவர் தாழ்ந்த சடைமேற் குளிர்ச்சியைத்தருந் திங்களைச் சூடிய அம்பலவர்; பகை செகுக்கும் குனிதரு திணிசிலைக் கோடு சென்றான் பகையைச் செகுக்கும் வளைந்த திண்ணிய சிலையாகிய மேருவினது கோட்டையடைந்தான்; அன்னையும் முனிதரும் இனித் தாழ்ப்பின் அன்னையும் முனியும்; என்னையர் சாலவும் மூர்க்கர் என்னையன்மாரும் மிகவும் ஆராயாது ஏதம் செய்யும் தன்மையர்; இன்னே தனி தரும் இவ்விடமும் இனியியங்குவாரின்மையின் இப்பொழுதே தனிமை யைத் தரும்; ஐய ஐயனே; குன்றமும் இந்நிலத்து அன்று நினது குன்றமும் இந்நிலத்தின் கண்ணதன்று; அதனால் ஈண்டுநிற்கத் தகாது எ - று.
அம்பலவர் பகைசெகுத்தற்குத் தக்க திண்மை முதலாகிய இயல்பு அதற்கெக்காலத்து முண்மையால், செகுக்குமென நிகழ்காலத்தாற் கூறினார். இந்நிலைத்தன்றென்பது பாடமாயின், இக்குன்றமும் இவ்வாறு மகளிரும் ஆடவருந் தலைப்பெய்து சொல்லாடு நிலைமைத் தன்றெனவுரைக்க. மெய்ப்பாடும் பயனும் அவை. இவ்விடம் மிக்க காவலையுடைத்து இங்குவாரன்மினென்றாளென, இவ்விடத் தருமையை மறையாது எனக்குரைப்பாளாயது என்கட்கிடந்த பரிவினானன்றே; இத்துணையும் பரிவுடையாள் எனதாற்றாமைக் கிரங்கி முடிக்குமென ஆற்றுமென்பது. 98

குறிப்புரை :

12.9 காப்புடைத்தென்றுமறுத்தல்
காப்புடைத்தென்று மறுத்தல் என்பது செவ்வியிலளென்றது செவ்விபெற்றாற் குறையில்லையென்றாளாமென உட்கொண்டு நிற்ப, கதிரவன் மறைந்தான்; இவ்விடம் காவலுடைத்து; நும் மிடமுஞ் சேய்த்து; எம்மையன்மாருங் கடியர்; யாந்தாழ்ப்பின் அன்னையு முனியும்; நீரும் போய் நாளைவாருமென இசையமறுத்துக் கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்
12.9. காப்புடைத் தென்று
சேட்ப டுத்தது.

பண் :

பாடல் எண் : 10

அந்தியின் வாயெழி லம்பலத்
தெம்பரன் அம்பொன்வெற்பிற்
பந்தியின் வாய்ப்பல வின்சுளை
பைந்தே னொடுங்கடுவன்
மந்தியின் வாய்க்கொடுத் தோம்புஞ்
சிலம்ப மனங்கனிய
முந்தியின் வாய்மொழி நீயே
மொழிசென்றம் மொய்குழற்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
அந்தியின்வாய் எழில் அம்பலத்து எம்பரன் அம் பொன் வெற்பில் அந்தியின்கண் உண்டாகிய செவ்வானெ ழிலையுடைய அம்பலத்தின்கணுளனாகிய எம்முடைய எல்லாப் பொருட்கும் அப்பாலாயவனது அழகிய பொன்னையுடைய வெற்பிடத்து; பந்தியின்வாய்ப் பைந்தேனொடும் பலவின் சுளை பந்தியாகிய நிரையின்கட் செவ்வித்தேனோடும் பலாச்சுளையை; கடுவன் மந்தியின்வாய்க் கொடுத்து ஓம்பும் சிலம்ப கடுவன் மந்தியினது வாயில் அருந்தக்கொடுத்துப் பாதுகாக்குஞ் சிலம்பை யுடையாய்; மனம் கனிய முந்தி இன் வாய்மொழி அம் மொய் குழற்கு நீயே சென்றுமொழி அவள் மனநெகிழ விரைந்து இவ்வினிய வாய்மொழிகளை அம்மொய்த்த குழலையுடையாட்கு நீயே சென்று சொல்லுவாயாக எ - று.
எல்லாப்பொருளையுங் கடந்தானாயினும் எமக்கண்ணிய னென்னுங்கருத்தான், எம்பரனென்றார். வெற்பிற் சிலம்பவென வியையும். பந்தி பலாநிரையென்பாருமுளர். சிலம் பென்றது வெற்பினொருபக்கத்துளதாகிய சிறுகுவட்டை. வாய்மொழி மொழியென்னுந் துணையாய் நின்றது. மனங்கனியு மென்பதூஉம் நின்வாய்மொழி யென்பதூஉம் பாடம். மந்தி உயிர்வாழ்வதற்குக் காரணமாகியவற்றைக் கடுவன் தானேகொடுத்து மனமகிழ்வித்தாற் போல அவள் உயிர்வாழ்வதற்குக் காரணமாகிய நின் வார்த்தைகளை நீயேகூறி அவளைமனமகிழ்விப் பாயாகவென உள்ளுறையுவமங் கண்டுகொள்க. மெய்ப்பாடும் பயனும் அவை. 99

குறிப்புரை :

12.10 நீயேகூறென்றுமறுத்தல் நீயே கூறென்று மறுத்தல் என்பது இவள் இவ்விடத்து நிலைமையை மறையாது எனக்குரைப்பாளாயது என்கட்கிடந்த பரிவினானன்றே; இத்துணைப் பரிவுடையாள் எனக்கிது முடியாமை யில்லையெனத் தலைவன் உட்கொண்டுபோய்ப் பிற்றைஞான்று செல்ல, தோழி யான் குற்றேவன் மகளாகலிற் றுணிந்துசொல்ல மாட்டுகின்றிலேன்; இனி நீயே சென்று நின்குறையுள்ளது சொல்லெனத் தானுடம்படாது மறுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
12.10. அஞ்சுதும் பெரும பஞ்சின் மெல்லடியைக்
கூறுவ நீயே கூறு கென்றது.

பண் :

பாடல் எண் : 11

தெங்கம் பழங்கமு கின்குலை
சாடிக் கதலிசெற்றுக்
கொங்கம் பழனத் தொளிர்குளிர்
நாட்டினை நீயுமைகூர்
பங்கம் பலவன் பரங்குன்றிற்
குன்றன்ன மாபதைப்பச்
சிங்கந் திரிதரு சீறூர்ச்
சிறுமியெந் தேமொழியே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
தெங்கம்பழம் கமுகின் குலை சாடி மூக்கூழ்த்து விழுகின்ற தெங்கம்பழம் கமுகினது குலையை உதிர மோதி; கதலி செற்று வாழைகளை முறித்து; கொங்கம்பழனத்து ஒளிர் குளிர்நாட்டினை நீ பூந்தாதையுடைய பழனத்துக்கிடந்து விளங்குங் குளிர்ந்த நாட்டினுள்ளாய்நீ; எம் தேமொழி எம்முடைய தேமொழி; உமை கூர் பங்கு அம்பலவன் பரங்குன்றில் உமை சிறந்த பாகத்தை உடைய அம்பலவனது பாங்குன்றிடத்து குன்று அன்ன மா பதைப்பச் சிங்கம் திரிதரும் சீறூர்ச் சிறுமி; மலைபோலும் யானைகள் நடுங்கச் சிங்கங்கள் வேட்டந்திரியுஞ் சீறூர்க்கணுள்ளாள் ஓர் சிறியாள்; அதனால் எம்மோடு நீ சொல்லாடுதல் தகாது எ - று.
நாட்டினை யென்பதற்கு நாட்டையிடமாகவுடையையென இரண்டாவதன் பொருள்பட உரைப்பினுமமையும். பரங்குன்றிற் சீறூரெனவியையும். பெருங்காட்டிற் சிறுகுரம்பை யென்பது போதர, சிங்கந் திரிதரு சீறூரென்றாள். மெய்ப்பாடும் பயனும் அவை. 100

குறிப்புரை :

12.11 குலமுறை கூறிமறுத்தல் குலமுறை கூறிமறுத்தல் என்பது நீயே கூறெனச் சொல்லக் கேட்டு, உலகத்து ஒருவர்கண் ஒருவர் ஒருகுறை வேண்டிச் சென்றால் அக்குறை நீயே முடித்துக்கொள்ளென்பாரில்லை; அவ்வாறன்றி இவளிந்நாளெல்லாம் என்குறைமுடித்துத் தருவே னென்று என்னை யவமே யுழற்றி, இன்று நின்குறை நீயே முடித்துக் கொள்ளென்னாநின்றாளெனத் தலைமகன் ஆற்றாதுநிற்ப, அவனை யாற்றுவிப்பது காரணமாக, நீர் பெரியீர்; யாஞ்சிறியேம்; ஆகலான் எம்மோடு நுமக்குச் சொல்லாடுதல் தகாதெனக் குலமுறைகூறி மறுத்துரையாநிற்றல். அதற்குச் செய்யுள்
12.11 தொழுகுலத்தீர் சொற்காகேம்
இழிகுலத்தே மெனவுரைத்தது.

பண் :

பாடல் எண் : 12

சிலையொன்று வாணுதல் பங்கன்சிற்
றம்பல வன்கயிலை
மலையொன்று மாமுகத் தெம்மையர்
எய்கணை மண்குளிக்குங்
கலையொன்று வெங்கணை யோடு
கடுகிட்ட தென்னிற்கெட்டேன்
கொலையொன்று திண்ணிய வாறையர்
கையிற் கொடுஞ்சிலையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
சிலை ஒன்று வாணுதல் பங்கன் சிலையை யொக்கும் வாணுதலையுடையாளது கூற்றையுடையான்; சிற்றம் பலவன் சிற்றம்பலவன்; கயிலை மலை ஒன்று மா முகத்து எம் ஐயர் எய்கணை மண் குளிக்கும் அவனது கயிலைக்கண் மலையை யொக்கும் யானை முகத்து எம்மையன்மார் எய்யுங்கணை அவற்றையுருவி மண்ணின்கட்குளிப்பக்காண்டும்; கலை ஒன்று வெம் கணையோடு கடுகிட்டது என்னில் அவ்வாறன்றி ஒருகலை இவரெய்த வெய்ய வம்பினோடு விரைந்தோடிற்றாயின்; ஐயர் கையில் கொடுஞ் சிலைகெட்டேன் கொலை ஒன்று திண்ணிய ஆறு இவ்வையர் கையில் வளைந்த சிலை, கெட்டேன், கொலையாகிய வொன்று திண்ணிய வாறென்! எ - று.
கயிலைக்கண் மண்குளிக்குமென வியையும். கொடுஞ்சர மென்பதூஉம் பாடம். #9; 101

குறிப்புரை :

12.12 நகையாடிமறுத்தல் நகையாடி மறுத்தல் என்பது இவள் குலமுறைகிளத்தலான் மறுத்துக்கூறியவாறன்றென மனமகிழ்ந்துநிற்ப, இனியிவனாற் றுவானென உட்கொண்டு, பின்னுந்தழையெதிராது, எம்மையன் மாரேவுங்கண்டறிவேம்; இவ்வையர் கையிலேப்போலக் கொலையாற்றிண்ணியது கண்டறியேமென அவனேவாடல் சொல்லி நகையொடு மறுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
12.12 வாட்டழை யெதிராது சேட்படுத் தற்கு
மென்னகைத் தோழி யின்னகை செய்தது.

பண் :

பாடல் எண் : 13

மைத்தழை யாநின்ற மாமிடற்
றம்பல வன்கழற்கே
மெய்த்தழை யாநின்ற வன்பினர்
போல விதிர்விதிர்த்துக்
கைத்தழை யேந்திக் கடமா
வினாய்க்கையில் வில்லின்றியே
பித்தழை யாநிற்ப ராலென்ன
பாவம் பெரியவரே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மை தழையாநின்ற மா மிடற்று அம்பலவன் கழற்கே கருமை மிகாநின்ற கரியமிடற்றையுடைய அம்பலவனது கழற்கண்ணே; தழையாநின்ற மெய் அன்பினர் போல விதிர் விதிர்த்து பெருகாநின்ற மெய்யன்பை யுடையவரைப் போல மிகநடுங்கி; கை தழை ஏந்தி கைக்கண்ணே தழையை ஏந்தி; கடமா வினாய் இதனோடு மாறுபடக் கடமாவை வினாவி; கையில் வில் இன்றியே தன்கையில் வில்லின்றியே; பெரியவர் பித்தழையா நிற்பர்- இப்பெரியவர் பித்தழையாநின்றார்; என்ன பாவம் - இஃதென்ன தீவினையோ! எ - று.
மா கருமை. மாமிடறென்பது, பண்புத் தொகையாய் இன்னதிதுவென்னுந் துணையாய் நிற்றலானும், மைத்தழையா நின்ற வென்பது அக்கருமையது மிகுதியை உணர்த்தி நிற்றலானும், கூறியது கூறாலாகாமையறிக. அது ``தாமரைமீமிை\\\\\\\\u2970?`` எனவும், ``குழிந்தாழ்ந்த கண்ண`` (நாலடியார். தூய்தன்மை - 9) எனவும் இத்தன்மை பிறவும் வருவனபோல. மெய்த்தழையாநின்ற வன்பென்பதற்கு மெய்யாற்ற ழையாநின்ற அன்பெனினுமமையும். பித்தென்றது ஈண்டுப் பித்தாற் பிறந்த அழைப்பை. அழைப்பு - பொருள் புணராவோசை. 102

குறிப்புரை :

12.13 இரக்கத்தொடு மறுத்தல்
இரக்கத்தொடு மறுத்தல் என்பது இவள் என்னுடனே நகையாடுகின்றது தழைவாங்குதற்பொருட்டென உட்கொண்டு நிற்ப, பின்னையுந் தழையேலாது, இவ்வையர் இவ்வாறு மயங்கிப் பித்தழையாநிற்றற்குக் காரணமென்னோவென்று அதற்கிரங்கி மறுத்துக்கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
12.13. கையுறை யெதிராது காதற் றோழி
யைய நீபெரி தயர்த்தனை யென்றது.

பண் :

பாடல் எண் : 14

அக்கும் அரவும் அணிமணிக்
கூத்தன்சிற் றம்பலமே
ஒக்கு மிவள தொளிருரு
வஞ்சிமஞ் சார்சிலம்பா
கொக்குஞ் சுனையுங் குளிர்தளி
ருங்கொழும் போதுகளும்
இக்குன்றி லென்றும் மலர்ந்தறி
யாத வியல்பினவே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மஞ்சு ஆர் சிலம்பா மஞ்சார்ந்த சிலம்பை யுடையாய்; அக்கும் அரவும் அணி மணிக் கூத்தன் சிற்றம்பலம் ஒக்கும் இவளது ஒளிர் உரு அஞ்சி அக்கையும் அரவையும் அணியும் மாணிக்கம்போலுங் கூத்தனது சிற்றம்பலத்தை யொக்கும் இவளது விளங்காநின்ற வடிவையஞ்சி; கொக்கும் சுனையும் மாக்களுஞ் சுனைகளும்; குளிர் தளிரும் கொழும் போதுகளும் குளிர்ந்த தளிர்களுங் கொழுவிய போதுகளும்; இக்குன்றில் என்றும் மலர்ந்து அறியாத இயல்பின இக்குன்றில் எக்காலத்தும் விரிந்தறி யாத தன்மையையுடைய; அதனால் ஈண்டில்லாத இவற்றை யாமணி யிற் கண்டார் ஐயுறுவர் எ - று.
தளிர்மலர்ந்தறியாத வென்னுஞ் சினைவினை முதன்மேலேறி யும், போதுமலர்ந்தறியாத வென்னும் இடத்துநிகழ்பொருளின் வினை இடத்துமேலேறியும் நின்றன. 103

குறிப்புரை :

12.14 சிறப்பின்மை கூறிமறுத்தல்
சிறப்பின்மை கூறி மறுத்தல் என்பது என் வருத்தத்திற்குக் கவலாநின்றனள் இவளாதலின் எனக்கிது முடியாமை யில்லையென உட்கொண்டுநிற்ப, தோழி இக்குன்றிடத்து மாவுஞ் சுனையும் இவள் வடிவுக்கஞ்சி மலர்ந்தறியா, ஆதலான் ஈண்டில்லாதனவற்றை யாமணியிற் கண்டார் ஐயுறுவரென மறுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
12.14 மாந்தளிரும் மலர்நீலமும்
ஏந்தலிம்மலை யில்லையென்றது.

பண் :

பாடல் எண் : 15

உருகு தலைச்சென்ற வுள்ளத்தும்
அம்பலத் தும்மொளியே
பெருகு தலைச்சென்று நின்றோன்
பெருந்துறைப் பிள்ளைகள்ளார்
முருகு தலைச்சென்ற கூழை
முடியா முலைபொடியா
ஒருகு தலைச்சின் மழலைக்கென்
னோவைய வோதுவதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
உருகுதலைச் சென்ற உள்ளத்தும் அன்ப ருடைய உருகுதலையடைந்த உள்ளத்தின்கண்ணும்; அம்பலத்தும் அம்பலத்தின்கண்ணும்; ஒளி பெருகுதலைச் சென்று நின்றோன் இரண்டிடத்துமொப்ப ஒளிபெருகுதலையடைந்து நின்றவனது; பெருந்துறைப் பிள்ளை பெருந்துறைக்கணுளளாகிய எம் பிள்ளை யுடைய; கள் ஆர் முருகு தலைச்சென்ற கூழை முடியா தேனார்ந்த நறுநாற்றம் தம்மிடத்தடைந்த குழல்கள் முடிக்கப்படா; முலை பொடியா முலைகள் தோன்றா; ஒரு குதலைச் சின் மழலைக்கு - ஒரு குதலைச் சின்மழலை மொழியாட்கு; ஐய - ஐயனே; ஓதுவது என்னோ நீ சொல்லுகின்றவிது யாதாம்! சிறிதுமியைபுடைத்தன்று எ-று.
ஏகாரம்: அசைநிலை. கள்ளார் கூழையென வியையும். குதலைமை விளங்காமை. மழலை இளஞ்சொல். சின்மழலை திறத்தென நான்காவது ஏழாவதன் பொருட்கண் வந்ததெனினு மமையும். இவை நான்கற்கும் மெய்ப் பாடும் பயனும் அவை. 104

குறிப்புரை :

12.15 இளமை கூறிமறுத்தல்
இளமை கூறி மறுத்தல் என்பது அவளது வடிவுக்கஞ்சி மலர்ந்தறியாவென்றதல்லது மறுத்துக்கூறியவாறன்று; சிறப் பின்மை கூறியவாறென உட்கொண்டு, சிறப்புடைத் தழை கொண்டு செல்ல, அதுகண்டு, குழலும் முலையுங் குவியாத குதலைச் சொல்லிக்கு நீ சொல்லுகின்ற காரியம் சிறிதுமியை புடைத் தன்றென அவளதிளமை கூறி மறுத்துரையாநிற்றல். அதற்குச் செய்யுள்
12.15. முளையெயிற் றரிவை
விளைவில ளென்றது.

பண் :

பாடல் எண் : 16

பண்டா லியலு மிலைவளர்
பாலகன் பார்கிழித்துத்
தொண்டா லியலுஞ் சுடர்க்கழ
லோன்தொல்லைத் தில்லையின்வாய்
வண்டா லியலும் வளர்பூந்
துறைவ மறைக்கினென்னைக்
கண்டா லியலுங் கடனில்லை
கொல்லோ கருதியதே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பண்டு ஆல் இயலும் இலை வளர் பாலகன் முற்காலத்து ஆலின்கணுளதாம் இலையின்கட்டுயின்ற பாலகனாகிய மாயோன்; பார் கிழித்து தொண்டால் இயலும் சுடர்க் கழலோன் நிலத்தைக் கிழித்துக் காணாமையிற் பின்றொண்டா லொழுகுஞ் சுடர்க் கழலையுடையானது; தொல்லைத் தில்லையின் வாய் வண்டு பழையதாகிய தில்லைவரைப்பி னுண்டாகிய வண்டுகள்; ஆல் இயலும் வளர் பூதுறைவ ஆலிப்போடு திரிதரும் மிக்க பூக்களையு டைய துறையை யுடையாய்; கண்டால் ஆராய்ந்தால்; என்னை மறைக்கின் கருதியது இயலும் கடன் இல்லை கொல் என்னை மறைப் பின் நீ கருதியது முடியு முறைமை யில்லை போலும் எ-று.
பண்டு தொண்டாலியலுமெனவும், தில்லை வரைப்பிற்றுறை யெனவுமியையும். தில்லைக்கட்டுறைவனெனினுமமையும். மெய்ப் பாடு: அச்சத்தைச் சார்ந்த நகை. இவள் நகுதலான் என்குறையின்ன தென உணர்ந்த ஞான்று தானே முடிக்குமென நினைந்து ஆற்று வானாவது பயன். 105

குறிப்புரை :

12.16 மறைத்தமை கூறி நகைத்துரைத்தல்
மறைத்தமை கூறி நகைத்துரைத்தல் என்பது இவளதிளமை கூறுகின்றது தழைவாங்குதற்பொருட்டன்றாகவேண்டும்; அதுவன்றி இந்நாளெல்லாமியைய மறுத்து இப்பொழுது இவளிளையளென்று இயையாமைகூறி மறுக்கவேண்டிய தென்னை? இனி யிவ்வொழுக்கம் இவளையொழிய வொழுகக் கடவேனென உட்கொண்டுநிற்ப, நீ யென்னை மறைத்தகாரியம் இனி நினக்கு முடியாதென அவனோடு நகைத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
12.16. என்னைமறைத்தபின் எண்ணியதரிதென
நன்னுதல்தோழி நகைசெய்தது.

பண் :

பாடல் எண் : 17

மத்தகஞ் சேர்தனி நோக்கினன்
வாக்கிறந் தூறமுதே
ஒத்தகஞ் சேர்ந்தென்னை யுய்யநின்
றோன்தில்லை யொத்திலங்கும்
முத்தகஞ் சேர்மென் னகைப்பெருந்
தோளி முகமதியின்
வித்தகஞ் சேர்மெல்லென் நோக்கமன்
றோஎன் விழுத்துணையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
மத்தகம் சேர் தனி நோக்கினன் நெற்றியைச் சேர்ந்த தனிக்கண்ணையுடையான்; வாக்கு இறந்து ஊறு அமுது ஒத்து அகம் சேர்ந்து என்னை உய்ய நின்றோன் சொல்லளவைக் கடந்து ஊறுமமுதத்தையொத்து மனத்தைச் சேர்ந்து என்னை யுய்ய நின்றவன்; தில்லை ஒத்து இலங்கு அவனது தில்லையை யொத் திலங்கும்; முத்து அகம் சேர் மெல் நகைப் பெருந்தோளி முத்துப் போலும் எயிறுகளுள்ளடங்கிய மூரன்முறுவலையுடைய பெருந் தோளியது; முகமதியின் வித்தகம் சேர் மெல் என் நோக்கம் அன்றோ என் விழுத்துணை முகமாகிய மதியின் கணுண்டாகிய சதுரப் பாட்டைச் சேர்ந்த மெல்லென்ற நோக்கமன்றோ எனது சிறந்ததுணை! அதனால் ஆற்றத்தகும் எ - று.
வாக்கிறந்தென்பதூஉம், அமுதொத்தென்பதூஉம், அகஞ் சேர்ந்தென்பதனோடியையும். உய்ய நின்றோனென்னுஞ் சொற்கள் உய்வித்தோனென்னும் பொருளவாய், ஒருசொன்னீர்மைப் பட்டு இரண்டாவதற்கு முடிபாயின. இலங்கு முகமதியென வியையும். மறுத்தாளாயினும் நங்கண் மலர்ந்த முகத்தளென்னுங் கருத்தான் இலங்குமுகமதியினென்றான். உள்ளக்குறிப்பை நுண்ணிதின் விளக்கலின், வித்தகஞ்சேர் மெல்லெனோக்கமென்றான். உள்ளக் குறிப்பென்றவாறென்னை? முன்னர்ச் ``சின்மழலைக் கென்னோ வையவோதுவ`` (தி.8 கோவை பா.104) தென்று இளையளென மறுத்தவிடத்து, இந் நாளெல்லா மியைய மறுத்து இப்பொழுது இவளிளையளென்று இயையாமை மறுத்தாள்; இவ்வொழுக்கம் இனி இவளை யொழிய வொழுகக் கடவேனென்று தலைமகன் தன்மனத்திற் குறித்தான்; அக்குறிப்பைத் தோழி அறிந்து கூறினமையின் வித்தகஞ்சேர் மெல்லெனோக்கமன்றோ எனக்குச் சிறந்ததுணை, பிறிதில்லையெனத் தனதாற்றாமை தோன்றக் கூறினான். மெய்ப்பாடு: உவகை. பயன்: ஆற்றாமை நீங்குதல். 106

குறிப்புரை :

12.17 நகை கண்டு மகிழ்தல்
நகை கண்டு மகிழ்தல் என்பது இவள் தன்னை மறைத்தால் முடியா தென்றது மறையாதொழிந்தால் முடியு மென்றாளாமெனத் தலைமகன் உட்கொண்டுநின்று, உன்னுடைய சதுரப்பாட்டைச் சேர்ந்த மெல்லென்ற நோக்கமன்றோ எனக்குச் சிறந்த துணை; அல்லது வேறு துணையுண்டோவென அவளது நகை கண்டு மகிழாநிற்றல். அதற்குச் செய்யுள்
12.17. இன்னகைத் தோழி மென்னகை கண்டு
வண்ணக் கதிர்வே லண்ண லுரைத்தது.

பண் :

பாடல் எண் : 18

விண்ணிறந் தார்நிலம் விண்டவ
ரென்றுமிக் காரிருவர்
கண்ணிறந் தார்தில்லை யம்பலத்
தார்கழுக் குன்றினின்று
தண்ணறுந் தாதிவர் சந்தனச்
சோலைப்பந் தாடுகின்றார்
எண்ணிறந் தாரவர் யார்கண்ண
தோமன்ன நின்னருளே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
விண் இறந்தார் நிலம் விண்டவர் என்று மிக்கார் இருவர் கண் இறந்தார் விண்ணைக்கடந்தவர் நிலத்தைப் பிளந்தவ ரென்று சொல்லப்படும் பெரியோரிருவருடைய கண்ணைக்கடந்தார்; தில்லை அம்பலத்தார் தில்லையம்பலத்தின் கண்ணார்; கழுக்குன்றில் நின்று தண் நறுந் தாது இவர் சந்தனச் சோலைப் பந்து ஆடுகின்றார் எண் இறந்தார் அவரது கழுக்குன்றின்கணின்று தண்ணிதாகிய நறிய தாது பரந்த சந்தனச் சோலையிடத்துப் பந்தாடுகின்றார் இறப்பப்பலர்; மன்ன- மன்னனே; நின் அருள் அவர் யார் கண்ணதோ நினதருள் அவருள் யார்கண்ணதோ? கூறுவாயாக எ - று.
விண்டவரென்பதற்கு முன்னுரைத்தது (தி.8 கோவை பா.24) உரைக்க. அன்னோர்க்கு அரியராயினும் எம் மனோர்க்கு எளிய ரென்னுங் கருத்தால் தில்லை யம்பலத்தாரென்றார். சோலைக் கணின்றென்று கூட்டினுமமையும். எண்ணிறந்தார் பலரென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: மருட்கையைச் சார்ந்த பெருமிதம். நும்மாற் கருதப்படுவாளை அறியேனென்றாளாக, என்குறை இன்னாள் கண்ணதென அறிவித்தால் இவள் முடிக்குமென நினைந்து ஆற்று வானா மென்பது பயன். 107

குறிப்புரை :

12.18 அறியாள் போன்றுநினைவு கேட்டல்
அறியாள்போன்று நினைவுகேட்டல் என்பது தலைமகனது மகிழ்ச்சிகண்டு இவன் வாடாமற் றழைவாங்குவேனென உட்கொண்டு, என்னுடைய தோழியர் எண்ணிறந்தாருளர்; அவருள் நின்னுடைய நினைவு யார்கண்ணதோவெனத் தானறியாதாள் போன்று அவனினைவு கேளாநிற்றல். அதற்குச் செய்யுள்
12.18. வேந்தன் சொன்ன மாந்தளிர் மேனியை
வெறியார் கோதை யறியே னென்றது.

பண் :

பாடல் எண் : 19

குவவின கொங்கை குரும்பை
குழல்கொன்றை கொவ்வைசெவ்வாய்
கவவின வாணகை வெண்முத்தங்
கண்மலர் செங்கழுநீர்
தவவினை தீர்ப்பவன் தாழ்பொழிற்
சிற்றம் பலமனையாட்
குவவின நாண்மதி போன்றொளிர்
கின்ற தொளிமுகமே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
தவவினை தீர்ப்பவன் தாழ்பொழில் சிற்றம்பலம் அனையாட்கு விரதங்களான் வருந்தாமற் றவத்தொழிலை நீக்கி அன்பர்க்கு இன்புறு நெறியருளியவனது தாழ்ந்த பொழிலையுடைய சிற்றம்பலத்தை யொப்பாட்கு; குவவின கொங்கை குரும்பை குவிந்த கொங்கைகள் குரும்பையையொக்கும்; குழல் கொன்றை குழல் கொன்றைப் பழத்தை யொக்கும்; செவ்வாய் கொவ்வை செவ்வாய் கொவ்வைக் கனியையொக்கும்; கவவின வாள் நகை வெண் முத்தம் அதனகத்திடப்பட்ட வாணகை வெண்முத்தை யொக்கும்; கண் மலர் செங்கழுநீர் கண்மலர்கள் செங்கழு நீரை யொக்கும்; ஒளிமுகம் உவவின நாள் மதிபோன்று ஒளிர்கின்றது ஒளிமுகம் உவாவின் கணுளதாகிய செவ்விமதி போன்றொளிரா நின்றது எ - று.
தவ வினை தீர்ப்பவனென்பதற்கு மிகவும் வினைகளைத் தீர்ப்பவனெனினுமமையும். உவவினநாண்மதியென்றது ``கால குருகு`` (குறுந்தொகை-25) என்பது போலப் பன்மை யொருமை மயக்கம். எப்பொழுதுந் தன்னுள்ளத்திடையறாது விளங்குதலின், ஒளிர்கின்ற தென நிகழ்காலத்தாற் கூறினான். உவவினமதி பலகலைகள்கூடி நிறைந்த தன்மையையுடைய மதி. நாண்மதி உவாவான நாளின்மதி. 108

குறிப்புரை :

12.19 அவயவங் கூறல் அவயவங் கூறல் என்பது இன்னும் அவளை யிவள் அறிந்திலள்; அறிந்தாளாயிற் றழைவாங்குவாளென உட்கொண்டு நின்று, என்னாற் கருதப்பட்டாளுக்கு அவயவம் இவையெனத் தோழிக்குத் தலைமகன் அவளுடைய அவயவங் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
12.19. அவயவ மவளுக்
கிவையிவை யென்றது.

பண் :

பாடல் எண் : 20

ஈசற் கியான்வைத்த வன்பி
னகன்றவன் வாங்கியவென்
பாசத்திற் காரென் றவன்தில்லை
யின்னொளி போன்றவன்தோள்
பூசத் திருநீ றெனவெளுத்
தாங்கவன் பூங்கழல்யாம்
பேசத் திருவார்த்தை யிற்பெரு
நீளம் பெருங்கண்களே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
ஈசற்கு யான் வைத்த அன்பின் அகன்று ஈசனிடத்து யான் வைத்த அன்புபோல அகன்று; அவன் வாங்கிய என்பாசத்தின் காரென்று அவனால் வாங்கப்பட்ட எனது பாசம் போலக் கறுத்து; அவன் தில்லையின் ஒளி போன்று அவனது தில்லையினொளியையொத்து; அவன் தோள் பூசு அத்திருநீறு என வெளுத்து அவன்றோள்களிற் சாத்தும் அத்திரு நீறுபோலவெளுத்து; அவன் பூங்கழல் யாம் பேசு அத்திரு வார்த்தையின் பெருநீளம் பெருங்கண்கள் அவனுடைய பூப்போலுந் திருவடிகளை யாம் பேசும் அத்திருவார்த்தை போல மிகவும் நெடியவாயிருக்கும் என்னாற் காணப்பட்டவளுடைய பெரிய கண்கள் எ - று.
அன்பினகன்றென்பதற்குப் பிறிதுரைப்பாருமுளர். தில்லையி னொளிபோறல் தில்லையினொளிபோலும் ஒளியையுடைத்தாதல். ஆகவே தில்லையே உவமையாம். பூசத்திருநீறு வெள்ளிதாய்த் தோன்றுமாறுபோல வெளுத்தென்றும். பேசத்திருவார்த்தை நெடிய வாயினாற்போலப் பெருநீளமாமென்றும் வினையெச்சமாக்கி, சில சொல் வருவித்துரைப்பினும் அமையும். பெருநீளமாமென ஆக்கம் வருவித்துத் தொழிற்படவுரைக்க. கண்களாற் பெரிது மிடர்ப்பட்டா னாகலானும், தோழியைத் தனக்குக் காட்டின பேருதவியை உடையன ஆகலானும், முன்னர்க் கண்மலர் செங்கழுநீரென்றும் அமையாது, பின்னும் இவ்வாறு கூறினான். கண்ணிற்குப் பிறிதுவகையான் உவமங்கூறாது இங்ஙனம் அகல முதலாயின கூறவேண்டியது எற்றிற்கெனின், அவை கண்ணிற் கிலக்கணமுங் காட்டியவாறாம். என்னை இலக்கணமாமாறு?
கண்ணிற் கியல்பு கசடறக்கிளப்பின்
வெண்மை கருமை செம்மை யகல
நீள மொளியென நிகழ்த்துவர் புலவர்.1
ஆயின் இதனுட் செம்மை கண்டிலேமென்பார்க்குச் செம்மையுங் கூறிற்று. அவன்றோளிற் பூசத்திருநீறென்றதனால் சிவப்புஞ் சொல்லியதாயிற்று. அது செம்மையாற் றோன்றும் வரியெனவறிக. யான்பேசத் திருவார்த்தை யென்னாது யாமென்ற தென்னையெனின், திருவார்த்தை பேசுமன்பர் பலராகலான் யாமென்று பலராகக் கூறினான். இவையிரண்டற்கும் மெய்ப்பாடு: உவகையைச் சார்ந்த பெருமிதம். பயன்: ஐயமறுத்தல். ; 109

குறிப்புரை :

12.20 கண்ணயந்துரைத்தல்
கண்ணயந்துரைத்தல் என்பது அவயவங் கூறியவழிக் கூறி யும் அமையாது, தனக்கு அன்று தோழியைக் காட்டினமை நினை ந்து, பின்னுங் கண்ணயந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
12.20. கண்ணிணை பிறழ்வன
வண்ண முரைத்தது.


பண் :

பாடல் எண் : 21

தோலாக் கரிவென்ற தற்குந்
துவள்விற்கு மில்லின்தொன்மைக்
கேலாப் பரிசுள வேயன்றி
யேலேம் இருஞ்சிலம்ப
மாலார்க் கரிய மலர்க்கழ
லம்பல வன்மலையிற்
கோலாப் பிரசமன் னாட்கைய
நீதந்த கொய்தழையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
இருஞ் சிலம்ப இருஞ்சிலம்பா; தோலாக் கரிவென்றதற்கும் எம்மை யேதஞ்செய்யவருந் தோலாக்கரியை நீவென்றதற்கும்; துவள்விற்கும் யான் குறைமறுப்பவும் போகாது பேரன்பினையுடையையாய் நீ விடாது துவண்ட துவட்சிக்கும்; இல்லின் தொன்மைக்கு ஏலாப் பரிசு உளவே எமது குடியின் பழமைக்கேலாத இயல்பையுடையவென்று எம்மாற் செய்யப்படாதன வுளவே ; ஐய ஐயனே; மாலார்க்கு அரிய மலர்க் கழல் அம்பலவன் மலையில் மாலார்க்குமரிய மலர்போலுங் கழலையுடைய அம்பல வனது மலையின்கண்; கோலாப் பிரசம் அன்னாட்கு நீ தந்த கொய் தழை வைக்கப்படாத தேனையொப்பாட்கு நீ தந்த கொய்தழையை; அன்றி ஏலேம் பிறிதோராற்றானேலேம் எ - று.
உளவே யென்னு மேகாரம்: எதிர்மறை. அஃதென்போல வெனின் ``தூற்றாதே தூர விடல்`` (நாலடியார் - 75) என்றது தூற்றுமென்று பொருள் பட்டவாறு போல வென்றறிக. அன்றியும், ஏலாப்பரிசுளவே யென்பதற்கு நாங்கள் இத்தழை வாங்குவதன் றென்றது கருத்து. எமது குடிப்பிறப்பின் பழமைபற்றி அது சுற்றத்தார் கூடி வாங்குவதொழிந்து நாங்களாக வாங்கினாற் குடிப்பிறப்புக்குப் பழிவருமென்பதனைப் பற்றியென்றவாறு. வழிபட்டுக் காணலு றாமையின், மாலாரென இழித்துக் கூறினாரெனினுமமையும், உளவேலன்றி லேயேமென்பது பாடமாயின், தழை வாங்குகின்றவழி என்பொருட்டால் நீர் நுங்குடிக் கேலாதனவற்றைச் செய்யாநின்றீ ரென்று தலைமகன் கூறியவழி, நீ செய்ததற்குக் கைம்மாறு செய்ய வேண்டுதுமாதலின் இற்பழியாங் குற்றம் இதற்குளவாயினல்லது இதனையேலே மென்று கூறினாளாக வுரைக்க. என்றது இற்பழியாங் குற்றம் இதற்குளவாகலான் ஏற்கின்றேம் நீ செய்தவுதவியைப் பற்றி அல்லதேலேமென்ற வாறெனவறிக. கோலாற்பிரச மென்பது பாடமாயின், கோலிடத் துப்பிரசம் என்றது கோற்றேன். இது சுவைமிகுதியுடைமை கூறியவாறென வுரைக்க. தோலாக்கரிவென்றது முதலாயின நிகழ்ச்சி செய்யுளின் கட் கண்டிலே மென்பார்க்கு இயற்கைப் புணர்ச்சியது நீக்கத்தின்கண் நிகழ்ந்தனவென வுரைக்க. அன்றியும் படைத்துமொழி வகுத்துரை யென்பனவற்றானுமறிக. அகறல் - அவன் கருத்திற்ககறல். மெய்ப்பாடு: அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன்: குறைநேர்தல். 110

குறிப்புரை :

12.21 தழையெதிர்தல்
தழையெதிர்தல் என்பது கண்ணயந்துரைப்பக் கேட்ட தோழி இவ்வாறு ஏற்றல் எங்குடிக்கேலாவாயினும் நீ செய்தவுதவிக்கும் நின்பேரன்புக்கும் ஏலாநின்றேனெனக் கூறித் தலைமகன்மாட்டுத் தழையெதிராநிற்றல். அதற்குச் செய்யுள்
12.21. அகன்றவிடத் தாற்றாமைகண்டு
கவன்றதோழி கையுறையெதிர்ந்தது.

பண் :

பாடல் எண் : 22

கழைகாண் டலுஞ்சுளி யுங்களி
யானையன் னான்கரத்தில்
தழைகாண் டலும்பொய் தழைப்பமுன்
காண்பனின் றம்பலத்தான்
உழைகாண் டலும்நினைப் பாகுமென்
நோக்கிமன் நோக்கங்கண்டால்
இழைகாண் பணைமுலை யாயறி
யேன் சொல்லும் ஈடவற்கே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
கழை காண்டலும் சுளியும் களி யானை அன்னான் - குத்துகோலைக் காண்டலும் வெகுளுங் களியானையை யொப்பானுடைய; கரத்தில் தழை காண்டலும் பொய் முன் தழைப்பக் காண்பன் கையிற் றழையைக் காண்டலும் அப்பொழுது சொல்லத் தகும் பொய்யை முன்பெருகக் காண்பேன்; அம்பலத்தான் உழைகாண்டலும் நினைப்பு ஆகும் மெல் நோக்கி அம்பலத்தா னுடைய கையிலுழைமானைக் காண்டலும் நினைவுண்டாம் மெல்லிய நோக்கத்தை யுடையாய்; மன் நோக்கம் கண்டால் அம்மன்ன னுடைய புன்கணோக்கத்தைக் கண்டால்; இழை காண் பணை முலையாய் இழைவிரும்பிக் காணப்படும் பெரிய முலையை யுடையாய்; இன்று அவற்குச் சொல்லும் ஈடு அறியேன் இன்று அவற்குப் பொய்சொல்லுநெறி யறிகின்றிலேன்; இனி யாது செய்வாம்? எ - று.
குத்துகோல் வரைத்தன்றி யானை களிவரைத்தாயினாற் போலக் கழறுவார் சொல்வயத்தனன்றி வேட்கை வயத்தனா யினானென்பது போதரக் கழைகாண்டலுஞ் சுளியுங் களியானை யன்னா னென்றாள். ஈண்டுக்கழறுவாரென்றது தோழி தன்னை. அதாவது கையுறை பலவற்றையும் ஆகாவென்று தான் மறுத்ததனை நோக்கி. தலைமகளை முகங்கோடற்கு இழைகாண் பணை முலையா யெனப் பின்னும் எதிர்முகமாக்கினாள். தழையெதிர்ந்தாளாயினும் தலைமகளது குறிப்பறியாமையின், அவனைக் கண்டிலள்போலக் கண்டாலென எதிர்காலத்தாற் கூறினாள். இதனை முகம்புகவுரைத்தல் எனினும் குறிப்பறிதல் எனினுமொக்கும். 111

குறிப்புரை :

12.22 குறிப்பறிதல்
குறிப்பறிதல் என்பது தலைமகன் மாட்டுத் தழை யெதிர்ந்த தோழி இவளுக்குத் தெற்றெனக் கூறுவேனாயின் இவள் மறுக்கவுங்கூடுமென உட்கொண்டு, இந்நாள்காறுந் தழையே லாமைக்குத் தக்க பொய்சொல்லி மறுத்தேன்; இன்று அவனது நோக்கங் கண்டபின் பொய்சொல்லுநெறி அறிந்திலேன்; இனிய வனுக்குச் சொல்லுமாறென்னோவெனத் தழையேற்பித்தற்குத் தலைமகளது குறிப்பறியாநிற்றல். அதற்குச் செய்யுள்
12.22. தழையெதிரா தொழிவதற்கோர்
சொல்லறியேனெனப் பல்வளைக்குரைத்தது.

பண் :

பாடல் எண் : 23

தவளத்த நீறணி யுந்தடந்
தோளண்ணல் தன்னொருபால்
அவளத்த னாம்மக னாந்தில்லை
யானன் றுரித்ததன்ன
கவளத்த யானை கடிந்தார்
கரத்தகண் ணார்தழையுந்
துவளத் தகுவன வோசுரும்
பார்குழல் தூமொழியே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
சுரும்பு ஆர் குழல் தூ மொழி - சுரும்பார்ந்த குழலையுடைய தூமொழியாய்; தவளத்த நீறு அணியும் தடந் தோள் அண்ணல் வெண்மையையுடைய நீற்றைச் சாத்தும் பெரிய தோள்களையுடைய அண்ணல்; தன் ஒரு பாலவள் அத்தன் ஆம் மகன் ஆம் தில்லையான் தனதொரு பாகத்துளளாகிய அவட்குத் தந்தையுமாய் மகனுமாந் தில்லையான்; அன்று உரித்தது அன்ன கவளத்த யானை அவன் அன்றுரித்த யானையை யொக்குங் கவளத்தையுடைய யானையை; கடிந்தார் கரத்த கண் ஆர் தழையும் துவளத் தகுவனவோ நம்மேல் வாராமற் கடிந்தவருடைய கைய வாகிய கண்ணிற்காருந் தழையும் வாடத் தகுவனவோ? தகா எ - று.
தவளத்தநீறு கவளத்தயானை என்பன; பன்மையொருமை மயக்கம். சிவதத்துவத்தினின்றுஞ் சத்திதத்துவந் தோன்றலின் அவளத் தனாமென்றும், சத்திதத்துவத்தினின்றுஞ் சதாசிவதத்து வந்தோன்ற லின் மகனாமென்றும் கூறினார். ``இமவான்மகட்குத் தன்னுடைக் கேள்வன் மகன் றகப்பன்`` (தி.8 திருப்பொற்சுண்ணம் பா.13) என்பதூஉம் அப்பொருண்மேல் வந்தது. கவளத்தயானை யென்பத னால் தான் விரும்புங் கவளமுண்டு வளர்ந்த யானையென்பதூஉம் கூறப்பட்டதாம். அது ஒருவராற் கட்டப்பட்டு மிடிப்பட்டதன்றாகலான், அதனை வெல்வதரிது; அப்படிப்பட்ட யானையையும் வென்றவர். அங்ஙனம் யானை கடிந்த பேருதவியார் கையனவுந் துவளத் தகுவனவோ வென்றதனால், அவருள்ளமுந் துவளாமற் குறைமுடிக்க வேண்டுமென்பது குறிப்பாற் கூறினாள். உம்மை: சிறப்பும்மை. ஏழைக்குரைத்ததென வியையும். இவை யிரண்டற்கும் மெய்ப்பாடு: அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன்: குறைநயப்பித்தல். 112

குறிப்புரை :

12.23 குறிப்பறிந்து கூறல்
குறிப்பறிந்து கூறல் என்பது குறிப்பறிந்து முகங்கொண்டு, அதுவழியாகநின்று, யானை கடிந்த பேருதவியார் கையிற்றழை யுந் துவளத்தகுமோ? அது துவளாமல் யாம் அவரது குறை முடிக்க வேண்டாவோவெனத் தோழி நயப்பக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
12.23. ஏழைக் கிருந்தழை
தோழிகொண் டுரைத்தது.

பண் :

பாடல் எண் : 24

ஏறும் பழிதழை யேற்பின்மற்
றேலா விடின்மடன்மா
ஏறு மவனிட பங்கொடி
யேற்றிவந் தம்பலத்துள்
ஏறு மரன்மன்னும் ஈங்கோய்
மலைநம் மிரும்புனம் காய்ந்
தேறு மலைதொலைத் தாற்கென்னை
யாஞ்செய்வ தேந்திழையே.

பொழிப்புரை :

இதன் பொருள்: ஏந்திழை - ஏந்திழாய்; தழை ஏற்பின் பழி ஏறும் தழையையேற்பின் தாமேயொரு நட்புச்செய்தாரென்று பிறரிடத்து நமக்குப் பழியேறும்; ஏலாவிடின் அவன் மடல் மா ஏறும் அதனையேலாதொழியின் பிறிதோருபாயமில்லையென்று அவன் மடலாகிய மாவையேறும்; இடபம் கொடி ஏற்றி வந்து அம்பலத்துள் ஏறும் தருமவடிவாகிய இடபத்தைக் கொடியின் கண்வைத்து நமது பிறவித்துன்பத்தை நீக்க ஒருப்பட்டுவந்து அம்பலத்தின்கணேறும்; அரன் மன்னும் ஈங்கோய் மலை அரன் றங்கும் ஈங்கோய் மலையின்; நம் இரும் புனம் காய்ந்து நமது பெரிய புனத்தையழித்து; ஏறும் மலை தொலைத்தாற்கு நம்மை நோக்கி வந்தேறும் மலைபோலும் யானை யைத் தோற்பித்தவற்கு; யாம் செய்வது என்னை யாஞ்செய்வ தென்னோ? அதனை யறிகின்றிலேன் எ - று.
மற்று: வினைமாற்று. மடன்மாவேறுமவனென்று தழையே லாவிடினும் பழியேறுமென்பதுபடக் கூறினமையானும், ஏறுமலை தொலைத்தாற் கென அவன் செய்த உதவி கூறினமையானும், தழையேற்பதே கருமமென்பதுபடக் கூறினாளாம். அன்றியுந் தழையேற்றால் நமக்கேறும்பழியை அறத்தொடுநிலை முதலாயின கொண்டு தீர்க்கலாமென்றும், ஏலாவிடின் அவன் மடன்மாவை யேறுதலான் வரும்பழி ஒன்றானுந் தீர்க்கமுடியா தென்றும் கூறியவாறாயிற்று. வகுத்துரைத்தல் தழையேற்றலே கருமமென்று கூறுபடுத்துச் சொல்லுதல். #9; 113

குறிப்புரை :

12.24 வகுத்துரைத்தல்
வகுத்துரைத்தல் என்பது உதவிகூறவும் பெருநாணின ளாதலின் தழை வாங்கமாட்டாதுநிற்ப, அக்குறிப்பறிந்து, இருவகையானும் நமக்குப் பழியேறும்; அதுகிடக்க நமக்குதவி செய்தாற்கு நாமுமுதவி செய்யுமாறென்னோவெனத் தலைமகள் தழையேற்குமாறு வகுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
12.24. கடித்தழை கொணர்ந்த காதற் றோழி
மடக்கொடி மாதர்க்கு வகுத்து ரைத்தது.

பண் :

பாடல் எண் : 25

தெவ்வரை மெய்யெரி காய்சிலை
யாண்டென்னை யாண்டுகொண்ட
செவ்வரை மேனியன் சிற்றம்
பலவன் செழுங்கயிலை
அவ்வரை மேலன்றி யில்லைகண்
டாயுள்ள வாறருளான்
இவ்வரை மேற்சிலம் பன்னெளி
திற்றந்த ஈர்ந்தழையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
அருளான் - நம்மாட் டுண்டாகிய அருளான்; இவ்வரைமேல் சிலம்பன் எளிதில் தந்த ஈர்ந்தழை இம்மலைக்கட் சிலம்பன் எளிதாக்கொணர்ந்து தந்த வாடாத இத்தழை; செழும் கயிலை அவ்வரைமேல் அன்றி இல்லை வளவிய கயிலையாகிய அம்மலை யிடத்தல்லது பிறிதோரிடத்தில்லை; இதனைக் கொள் வாயாக எ-று.
உள்ளவாறென்பது யான் கூறிய இது மெய்ம்மை யென்றவாறு.
தெவ்வரை மெய் எரிகாய்சிலை ஆண்டு பகைவரை மெய்யெரித்த வரையாகிய காய்சிலையைப் பணி கொண்டு; என்னை ஆண்டு கொண்ட பின் என்னை யடிமை கொண்ட; செவ்வரை மேனியன் சிற்றம்பலவன் செழுங்கயிலை செவ்வரைபோலுந் திருமேனியையுடையனாகிய சிற்றம்பலவனது செழுங்கைலை யெனக் கூட்டுக.
மெய் எரியென்பன ஒருசொல்லாய்த் தெவ்வரையென்னும் இரண்டாவதற்கு முடிபாயின. மெய்யெரித்த காய்சிலை மெய்யெரி காய்சிலையென வினைத்தொகையாயிற்று. காய்சிலை: சாதியடை. ஐகாரத்தை அசைநிலையாக்கித் தெவ்வர் மெய்யெரித்தற்குக் காரண மாஞ்சிலையெனினு மமையும். வலியனவற்றை வயமாக்கிப் பயின்று பின் என்னையாண்டா னென்பது போதர, காய் சிலையாண் டென்னை யாண்டுகொண்ட வென்றார். என்னைத் தனக்கடிமை கொள்ளுதல் காரணமாகப் பிறிதொன்றின் மேலிட்டுக்கல்லை வளைத்தான்; என்னெஞ்சை வளைத்தல் காரணமாக அல்லது தனக்கொருபகை யுண்டாய்ச் செய்ததன்றுபோலும் என்பது கருத்து. ``கல்லை மென்கனி யாக்கும் விச்சைகொண்டென்னை நின்கழற் கன்பனாக்கினாய்`` (தி.8 திருச்சதகம் பா.94.) என்பதுமது. கயிலைத் தழையை எளிதிற்றந்தா னென்றதனான் வரைவு வேண்டியவழித் தமர் மறுப்பின் வரைந்து கொள்ளுந் தாளாண்மையனென்பது கூறினாளாம். கண்டாயென்பது: முன்னிலையசைச்சொல். இவையிரண்டற்கும் மெய்ப்பாடு: பெரு மிதம். பயன்: கையுறையேற்பித்தல். 114

குறிப்புரை :

12.25 தழையேற்பித்தல்
தழை யேற்பித்தல் என்பது தழையேலாதொழியினும் பழியேறுமாயிற் றழையேற்பதே காரியமென உட்கொண்டுநிற்ப, அக்குறிப்பறிந்து, இத்தழை நமக்கெளிய தொன்றன்று; இதனை யேற்றுக்கொள்வாயாகவெனத் தோழி தலைமகளைத் தழை யேற்பியாநிற்றல். அதற்குச் செய்யுள்
12.25. கருங்குழன் மடந்தைக் கரும்பெறற் றோழி
இருந்தழை கொள்கென விரும்பிக் கொடுத்தது.

பண் :

பாடல் எண் : 26

பாசத் தளையறுத் தாண்டுகொண்
டோன்தில்லை யம்பலஞ்சூழ்
தேசத் தனசெம்மல் நீதந்
தனசென் றியான்கொடுத்தேன்
பேசிற் பெருகுஞ் சுருங்கு
மருங்குல் பெயர்ந்தரைத்துப்
பூசிற் றிலளன்றிச் செய்யா
தனவில்லை பூந்தழையே.

பொழிப்புரை :

இதன் பொருள்:
பாசத்தளை அறுத்து பாசமாகிய தளையிற் பட்டுக்கிடப்ப அத்தளையை யறுத்து; ஆண்டு கொண்டோன் தில்லை யம்பலம் சூழ் தேசத்தன தனக்குக் குற்றேவல் செய்ய என்னை யடிமைகொண்டவனது தில்லையம்பலத்தைச் சூழ்ந்த தேசத்தின் கணுள்ளன; செம்மல்! நீ தந்தன - அச்சிறப்பே யன்றிச் செம்மால் நின்னாற் றரப்பட்டன; சென்று யான் கொடுத்தேன் அவற்றைச் சென்று யான் கொடுத்தேன்; பேசில் பெருகும் கொடுப்ப ஆண்டு நிகழ்ந்தன வற்றைச் சொல்லுவேனாயிற் பெருகும்; சுருங்கு மருங்குல் சுருங்கிய மருங்குலையுடையாள்; பூந்தழை அப்பூந் தழையை; அரைத்துப் பூசிற்றிலள் அன்றிப் பெயர்ந்து செய்யாதன இல்லை அரைத்துத் தன்மேனியெங்கும் பூசிற்றிலளல்லது பெயர்த்துச் செய்யாதனவில்லை எ - று. என்றது இவை வாடுமென்று கருதாது அரைத்துப் பூசினாற் போலத் தன்மேனிமுழுதும் படுத்தாள் என்றவாறு. பெயர்த்தென்பது பெயர்ந்தென மெலிந்துநின்றது. பிசைந்தரைத்தென்று பாட மோதுவாருமுளர். மெய்ப்பாடு: உவகை. பயன்: தலைமகனை யாற்றுவித்தல். 115

குறிப்புரை :

12.26 தழைவிருப்புரைத்தல் தழை விருப்புரைத்தல் என்பது தலைமகளைத் தழை யேற்பித்துத் தலைமகனுழைச் சென்று, நீ தந்த தழையை யான்சென்று கொடுத்தேன்; அதுகொண்டு அவள் செய்தது சொல்லிற் பெருகுமெனத் தலைமகளது விருப்பங் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்
12.26. விருப்பவள் தோழி
பொருப்பற் குரைத்தது.
சிற்பி