திருக்கடவூர் மயானம்


பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 1

மருவார் கொன்றை மதிசூடி
மாணிக் கத்தின் மலைபோல
வருவார் விடைமேல் மாதோடு
மகிழ்ந்து பூதப் படைசூழத்
திருமால் பிரமன் இந்திரற்குந்
தேவர் நாகர் தானவர்க்கும்
பெருமான் கடவூர் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே.

பொழிப்புரை :

திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கும் பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், நறுமணம் நிறைந்த கொன்றைமலர் மாலையையும், பிறையையும் திருமுடியிற் சூடிக் கொண்டு, உமாதேவியோடு, பூதப்படைகள் களிப்புற்றுச் சூழ, வெள்ளி மலையின்மேல் ஒரு மாணிக்கமலை வருவதுபோல விடையின்மேல் வருவார்; `திருமால், பிரமன், இந்திரன்` என்ற பெருந்தேவர்கட்கும், `மற்றைய தேவர், நாகலோகத்தார், அசுரர்` என்பவர்கட்கும் அவரே தலைவர்.

குறிப்புரை :

செந்திருமேனியராதலைக்கருதி, இறைவரை, மாணிக்க மலை போல்வார் என அருளினமையின், வெள்ளியதாதல் பற்றி விடையை, வெள்ளிமலைபோல்வது என அருளிச்செய்தல் திருவுள்ள மாதல் பெறப்படும். `மாணிக்கத்தின்` என்ற இன்சாரியை, அல்வழிக் கண் வந்தது.``பெருமான்` பன்மையொருமை மயக்கம். `மயானம்` என்பது கோயிலின் பெயர். `மயானம்` என்னும் பெயருடைய கோயில்கள் வேறு தலங்களிலும் உள. `பெருமானடிகள்` என்பது ஆண்பால் தேவர்க்குச் சொல்லப்படுவதொரு பெயராதலின், மாதேவனாகிய சிவபெருமான், பெரிய பெருமானடிகளாதல் அறிக. இது பற்றியே திருவாதவூரடிகள், `தேவதேவன்` என்பதே சிவபெருமானுக் குரிய சிறப்புப் பெயராக அருளியுள்ளார் என்க. (தி.8 திருவா. கீர்த்தி. 122)

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 2

விண்ணோர் தலைவர் வெண்புரிநூல்
மார்பர் வேத கீதத்தர்
கண்ணார் நுதலர் நகுதலையர்
கால காலர் கடவூரர்
எண்ணார் புரமூன் றெரிசெய்த
இறைவர் உமையோ ரொருபாகம்
பெண்ணா ணாவர் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே.

பொழிப்புரை :

திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், தேவர்கட்குத் தலைவரும், வெள்ளிய முப்புரிநூலை அணிந்த மார்பினை உடைய வரும், வேதத்தை உடைய இசையைப் பாடுகின்றவரும், கண் பொருந்திய நெற்றியையுடையவரும், சிரிப்பதுபோலத் தோன்றும் தலைஓட்டினை ஏந்தியவரும், காலனுக்குக் காலரும் திருக்கடவூரைத் தம் ஊராகக் கொண்டவரும், தம்மை மதியாதவரது ஊர்கள் மூன்றை எரித்த இறைவரும், உமை ஒருபாகமும் தாம் ஒருபாகமுமாய்ப் பெண்ணும் ஆணுமாய் நிற்கும் உருவத்தை உடையவரும் ஆவர்.

குறிப்புரை :

``பாகம்`` என்றதனை, ``ஓர்`` என்றதனோடுங்கூட்டி, ``பாகம்`` என்பன இரண்டன் பின்னும், `தாம், ஆய்` என்பன வருவித்து உரைக்க. `உமையோடொருபாகம்` எனப்பாடம் ஓதுதல் சிறக்கும். `ஊர், திருக்கடவூர்` எனப்பட்டமையால், மயானம் அதனைச் சார்ந்ததாயிற்று.

பண் : பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 3

காயும் புலியி னதளுடையர்
கண்டர் எண்டோட் கடவூரர்
தாயுந் தந்தை பல்லுயிர்க்குந்
தாமே யாய தலைவனார்
பாயும் விடையொன் றதுவேறிப்
பலிதேர்ந் துண்ணும் பரமேட்டி
பேய்கள் வாழும் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே.

பொழிப்புரை :

பேய்கள் வாழ்கின்ற திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், சினங்கொள்கின்ற புலியின் தோலாகிய உடையை உடையவர்; நீல கண்டத்தை உடையவர்; எட்டுத் தோள்களை யுடையவர்; திருக்கடவூரைத் தம் ஊராகக் கொண்டவர்; எல்லா உயிர்கட்கும் தாமே தாயும், தந்தையும், தலைவருமானவர்; பாய்ந்து செல்லுகின்ற ஒற்றை எருதின்மேல் ஏறிப் பிச்சை கிடைக்கும் இடங்களை நாடிச் சென்று ஏற்று உண்பவர்; ஆயினும் யாவர்க்கும் மேலான இடத்தில் இருப்பவர்.

குறிப்புரை :

`அதளுடை அகண்டர்` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். `பலிதேர்ந்து உண்ணும் பரமேட்டி` என்பது, நகைச்சுவை படக் கூறிய தாகலின், அதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது. பரமேட்டி, பன்மை யொருமை மயக்கம். `மயானம்` என்னும் பெயரானே அதற்குரிய அடைபுணர்த்தற்கு இயைபுண்மையின், `பேய்வாழ் மயானம்` எனச் சிறப்பித்தருளினார்.

பண் : பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 4

நறைசேர் மலர்ஐங் கணையானை
நயனத் தீயாற் பொடிசெய்த
இறையா ராவர் எல்லார்க்கும்
இல்லை யென்னா தருள்செய்வார்
பறையார் முழவம் பாட்டோடு
பயிலுந் தொண்டர் பயில்கடவூர்ப்
பிறையார் சடையார் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே.

பொழிப்புரை :

ஒலிக்கின்ற மத்தளம், பிற பறை இவைகளைப் பாட்டுக்களோடு பயில்கின்ற அடியார்கள் நிறைந்த திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கும் பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், தேன் பொருந்திய ஐந்துவகை மலர்களாகிய அம்பு களையுடைய மன்மதனை, கண்ணில் உண்டாகிய நெருப்பாற் சாம் பலாக்கிய இறைவராவர்; `இல்லை` என்று சொல்லாமல் யாவர்க்கும் அவரவர் விரும்பியவற்றை ஈபவர்; பிறை பொருந்திய சடையை யுடையவர்.

குறிப்புரை :

உலகின்பத்தை வேண்டி வணங்குவார்க்கு உலகின் பத்தையும், வீட்டின்பத்தை வேண்டி வணங்குவார்க்கு வீட்டின் பத்தையும் தருதலின், `எல்லார்க்கும் இல்லை என்னாது அருள் செய்வார்` என்று அருளினார். ``வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்`` (தி.6 ப.23 பா.1) என்று அருளியது காண்க.

பண் : பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 5

கொத்தார் கொன்றை மதிசூடிக்
கோணா கங்கள் பூணாக
மத்த யானை யுரிபோர்த்து
மருப்பு மாமைத் தாலியார்
பத்தி செய்து பாரிடங்கள்
பாடி யாடப் பலிகொள்ளும்
பித்தர் கடவூர் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே.

பொழிப்புரை :

திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், கொத்தாகப் பொருந்திய கொன்றை மாலையையும், பிறையையும் திருமுடியிற்சூடி, கொல்லுந் தன்மையுடைய பாம்புகள் அணிகலங்களாய் இருக்க, மதத்தையுடைய யானைத் தோலைப்போர்த்து, பன்றியின் கொம்பை யும், ஆமையின் ஓட்டையும் உடைய தாலியையுடையவராய், பூத கணங்கள் அன்புசெய்து பாடியும், ஆடியும் சூழப் பிச்சை ஏற்கின்ற பித்தர் கோலத்தவராவர்.

குறிப்புரை :

`மருப்பு` என்றது பன்றியினுடையது என்பது அறியப் பட்டதாகலின், கிளந்து கூறாராயினார். ``ஆமை``, ஆகு பெயர். ``ஆமை`` என்றவிடத்தும் தொகுக்கப்பட்ட எண்ணும்மையை விரித்து, `உடைய` என்பதனை வருவித்து முடிக்க. தாலியாவது, வெறு வடமாக அணியப்படாது எவற்றையேனும் கோத்து அணியப்படுவது என்க.

பண் : பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 6

துணிவார் கீளுங் கோவணமுந்
துதைந்து சுடலைப் பொடியணிந்து
பணிமே லிட்ட பாசுபதர்
பஞ்ச வடிமார் பினர்கடவூர்த்
திணிவார் குழையார் புரமூன்றுந்
தீவாய்ப் படுத்த சேவகனார்
பிணிவார் சடையார் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே.

பொழிப்புரை :

திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், துணிபட்ட நீண்ட கீளும் கோவணமும் நெருங்கப்பட்டு, சுடலைச் சாம்பலைப் பூசி, பாம்புகளை மேலே அணிந்த பாசுபத வேடத்தையுடையவர்; பஞ்ச வடியை அணிந்த மார்பினையுடைய மாவிரத கோலத்தையுடையவர்; திண்ணிய நீண்ட குழையை அணிந்தவர்; புரங்கள் மூன்றையும் நெருப்பின் வாயிற்படுவித்த வீரத்தையுடையவர்; கட்டிய நீண்ட சடையையுடையவர்.

குறிப்புரை :

பாசுபத வேடம், கபாலத்தைக் கையில் ஏந்துதல். பஞ்ச வடி - அகன்ற கயிறு; இது மயிரால் திரிக்கப்படுவது. இறந்த தேவர் களது தலைகளையும், எலும்புகளையும் சிவபிரான் அணிகலமாக அணிதல்போல, அவர்களது மயிரினைக் கயிறாகத் திரித்துப் பூணூலாக அணிவன்; இதனை மாவிரத சமயத்தார் சிறந்தெடுத்து அணிவர்; இவ் வாறே கபாலம் ஏந்துதலைப் பாசுபத சமயத்தர் சிறந்தெடுத்துக் கொள்வர் என்க. ``கடவூர்`` என்றதனை, ``மயானம்`` என்றதனோடுங் கூட்டுக.

பண் : பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 7

காரார் கடலின் நஞ்சுண்ட
கண்டர் கடவூ ருறைவாணர்
தேரார் அரக்கன் போய்வீழ்ந்து
சிதைய விரலால் ஊன்றினார்
ஊர்தா னாவ துலகேழும்
உடையார்க் கொற்றி யூர்ஆரூர்
பேரா யிரவர் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே.

பொழிப்புரை :

திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், கரிய, நிறைந்த கடலினின்றுந் தோன்றிய நஞ்சினையுண்ட கண்டத்தை யுடையவர்; திருக்கடவூரில் உறைகின்ற வாழ்க்கையையுடையவர்; தேர்மேற் பொருந்திய அரக்கனாகிய இராவணன், அதனை விட்டுக் கீழேபோய் வீழ்ந்து உடல் சிதையுமாறு கால்விரலால் தமது மலையை ஊன்றினவர்; ஏழுலகங்களையும் உடையவராகிய அவருக்கு ஊராவது, ஒற்றியாய் உள்ளது, அஃதொழிந்தால் யாருடைய ஊரோ! பெயர், ஆயிரம் உடையவர்.

குறிப்புரை :

`கார்க் கடல், ஆர் கடல்` எனத் தனித்தனி சென்றியை யும். `கருமை பொருந்திய கடல்` என்றே உரைப்பினும் அமையும். `ஒற்றியூர், ஆரூர்` என்னும் பெயர்களை, நகைதோன்ற, இவ்வாறு பொருள்படுத்தருளினார். ``பேர் ஆயிரவர்`` என்றது, ஒரு பெய ரில்லாதவர் என்னும் குறிப்பினது.

பண் : பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 8

வாடா முலையாள் தன்னோடும்
மகிழ்ந்து கானில் வேடுவனாய்க்
கோடார் கேழற் பின்சென்று
குறுகி விசயன் தவமழித்து
நாடா வண்ணஞ் செருச்செய்து
ஆவ நாழி நிலையருள்செய்
பீடார் சடையார் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே.

பொழிப்புரை :

திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், தளராத தனங்களை யுடைய மங்கையொருத்தியோடு, வேடராய், கொம்பையுடைய பன்றியின்பின் சென்று, அருச்சுனனது தவத்தை அழித்து, அவன் தம்மை அறியாத நிலையில் நின்று போர்புரிந்து, பின்பு அவனுக்கு அம்பறாத் தூணியை நிலையாக வழங்கிய பெருமையைப் பொருந்திய, சடைமுடியை யுடையவர்.

குறிப்புரை :

``வாடா முலையாள் தன்னோடு வேடுவனாய்ச் சென்று`` என்றதனால், அவள் வேடிச்சியாயினமை பெறப்பட்டது. சிவபிரான் அருச்சுனனுக்கு அளித்த பாசுபதக் கணையாலே, அவன் வில் வன்மை நிலைபெற்றமையின், ``ஆவநாழி நிலையருள் செய்`` என்று அருளினார். `பீடார்ந்தவர், சடைமுடியர்` என வேறு வேறாக ஓதற் பாலதனை, இவ்வாறு, ஒன்றாகத் தொகுத்தோதியருளினார் என்க. ``வேடுவனாய்`` என்றது, பன்மை யொருமை மயக்கம்.

பண் : பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 9

வேழ முரிப்பர் மழுவாளர்
வேள்வி யழிப்பர் சிரமறுப்பர்
ஆழி யளிப்பர் அரிதனக்கு
ஆனஞ் சுகப்பர் அறமுரைப்பர்
ஏழை தலைவர் கடவூரில்
இறைவர் சிறுமான் மறிக்கையர்
பேழைச் சடையர் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே.

பொழிப்புரை :

திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், யானையை உரிப்பர்; மழுப்படையை யுடையவர்; தக்கன் வேள்வியை அழிப்பர்; அவ் விடத்துப் பலரது தலைகளை அறுப்பர்; திருமாலுக்குச் சக்கரத்தைக் கொடுப்பர்; என்றும் பசுவினிடத்து உளவாகின்ற ஐந்து பொருள்களை விரும்புவர்; நால்வர் முனிவர்கட்கு அறம் உரைப்பர்; மங்கை யொருத் திக்குத் தலைவராவர்; திருக்கடவூரில் தங்குவர்; சிறிய மான்கன்றைப் பிடித்த கையை உடையவர்; விரிந்த சடையை யுடையவர்.

குறிப்புரை :

வேண்டும் சொற்கள், ஆற்றலால் வந்தன. இறை - இறுத்தல்; தங்குதல். பாம்பு முதலியன அடங்கிக் கிடத்தலின், ``பேழைச் சடை`` என்று அருளினார்.

பண் : பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 10

மாட மல்கு கடவூரின்
மறையோர் ஏத்து மயானத்துப்
பீடை தீர அடியாருக்
கருளும் பெருமா னடிகள்சீர்
நாடி நாவ லாரூரன்
நம்பி சொன்ன நற்றமிழ்கள்
பாடு மடியார் கேட்பார்மேற்
பாவ மான பறையுமே.

பொழிப்புரை :

மாடங்கள் நிறைந்த திருக்கடவூரில், அந்தணர்கள் துதிக்கின்ற மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற, அடியவர்களுக்கு, அவர்களது துன்பம் நீங்குமாறு அருள் செய்கின்ற பெருமானடிகளது புகழை, திருநாவலூரில் தோன்றிய, `ஆரூரன்` என்னும் பெயரை யுடையவனாகிய நம்பி, ஆராய்ந்து பாடிய இந் நல்ல தமிழ்ப் பாடல் களைப் பாடுகின்ற அடியார், பாடக் கேட்கின்ற அடியார் இவர்கள்மேல் உள்ள பாவங்களெல்லாம் பறந்தொழிதல் திண்ணம்.

குறிப்புரை :

`நாவலூர்` என்பதனை, `நாவல்` என்று அருளினார். `நம்பி` என்பது பெருமைபற்றிப் புணர்க்கப்படும் பெயராகலின், அதனை வேறாக ஓதுதலும் பொருந்துவதாயிற்று. `ஆரூர நம்பி` என ஈறு கெட்டு வாராது, இயல்பாகவே வந்தமையின், `ஆரூரனாகிய நம்பி` என உரைத்தல் கூடாமையறிக. ``கேட்பார்`` என வாளா அருளி னாரேனும், `கேட்கும் அடியார்` என்றலே திருவுள்ளம் என்க. `பாடு மடியார் கேட்குமடியார்` என்பது உம்மைத் தொகை.
சிற்பி